கலித்தொகைப் பாடல்களின்.... 10
ரசனைக் குறிப்பு:10
மகன்
அல்லை
செம்மையான மொழிகளால்
இனிமை கெழுமப் பேசி
நீ என்னைப் புணர்ந்த அந்நாள்,
அவையெல்லாம்
பொய்யானவை என்பதை
நான் எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?
அந்தப் பொய்யை உறுதிப்படுத்தத்தான்
இப் பெரிய ஊரெங்கும்
என்னைப் பேசுபொருளாக்கிவிட்டு
எரிக்கும் வெஞ்சுர வழி கடந்து
நீ பொருள் தேடி வர
புறப்படுகிறாய் போலும்!
நீ மனிதனே இல்லை.
என்னவாவது செய்துகொள்.
ஆனால்
அவ்வாறு சென்று நீ
வினை செய்யும் காலத்தில்,
அவளன்பை எண்ணாமல்
நான்
கைவிட்டு வந்தவள்
எங்ஙனமுள்ளாளென
அங்கு வரும் யாரையும்தான்
கேட்டுவிடாதே.
அவ்வண்ணம் கேட்டால்
எந்த நோக்கத்தில் சென்றாயோ,
அந்த நோக்கம் நிறைவுறாமல்,
பகல்போல் சுடரும் உன்
புகழ் மறந்து,
இடையிலேயே நீ
திரும்பி வரும் அவலம்
நேரவும்கூடும்தான்.
செவ்விய தீவிய சொல்லி, அவற்றோடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவையெல்லாம்
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்.
மகன் அல்லை மன்ற,
இனி
செல்லினிச் சென்று, நீசெய்யும் வினைமுற்றி
அன்புஅற மாறி, யாமுள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ என்று வருவாரை
என் திறம் யாதும் வினவல்; வினவின்
பகலின் விளங்கும் நின்செம்மல் சிதையத்
தவலரும் செய்வினை முற்றாமல் ஆண்டோர்
அவலம் படுதலும் உண்டு.
(பாலைக் கலி: 18)
Comments