Posts

Showing posts from 2024

மேகலை கதாபற்றி...

  . தேவகாந்தனின் ‘மேகலை கதா’ கலைமுகம் 73இல் எஸ்.கே.விக்னேஸ்வரன் நன்பர் தேவகாந்தன் அவர்களை  நான் கொழும்பில் முதன்முதலாகச் சந்தித்தது 2004 அல்லது 2005இன் ஆரம்பகாலமாக இருக்க வேண்டும். அவரை நான் முதன்முதலாகக் கண்ட காட்சி என் கண்முன் இன்னமும் அப்படியே நிற்கிறது. நேர்த்தியாக எண்ணை வைத்து வகிடெடுத்துச் சீவிய தலை; மடிப்புக் குலையாமல்  மினுக்கப்பட்ட காற்சட்டை, முழுக்கைச் சேட்டு, முகத்தின் அளவுக்கேற்ற விதத்தில் அளவாகக் கத்தரிக்கப்பட்ட மீசையுடன் இணைந்த குறுந்தாடி என்பவற்றுடனான தோற்றப் பொலிவுடன் அவர் நின்றிருந்தார். கொழும்பு  கொட்டாஞ்சேனையில் இருந்த ஈக்குவாலிற்றி அச்சகத்தருகே, அந்த அச்சகத்தில் பணிபுரிந்த நண்பர் ரஞ்சகுமாரைச் சந்திக்கப் போன வேளையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. எனது முதற் பார்வையில் அவரது தோற்றம், அவர் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் ஒரு அதிகாரியாக இருக்கலாம் என்ற எண்ணத்தையே எனக்கு ஏற்படுத்தியது. நண்பர் றஞ்சகுமார் தான் அவரை எனக்கு ‘இவர்தான் தேவகாந்தன்’ என்று அறிமுகப்படுத்தினார். தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அத்தியாயம் அதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் வெளிவந்திருந்தது.என்பதால்

தன் நிழலைத் தான் விமர்சித்தல்

Image
  தன் நிழலைத் தான் விமர்சித்தல் ‘ மேகலை கதா’ குறித்த சில கருத்துக்கள் -தேவகாந்தன்-   இன்றளவும் ஐந்தாம் ஆறாம் அலைகளென சர்வதேச அளவில் விரிந்துகொண்டிருக்கும் பெருந்தொற்றான கொவிட்- 19 காலத்துள் மூடுண்டு போனது 2020 மார்ச்சில் வெளிவந்த ‘மேகலை கதா’. அதுபற்றி அதன் படைப்பாளியாய் எனக்கு நிறைந்த அக்கறைகள் உண்டு. ஒரு இருபதாண்டுக் காலத்துக்கும் மேலான கருச் சுமையின் எழுத்து வடிவமது. மேலும் எழுதும் காலத்திலும் நிறையச் சிந்திக்கவும் எழுதியதைத் திருத்தியும் மாற்றியும் எழுதியென நிறைந்த உழைப்பை நான் அதற்காய் செலவிட்டிருக்கிறேன். ஆயினும் சில நண்பர்களின் மேலெழுந்தவாரியான சில தொலைபேசி உரையாடலில் செய்யப்பட்ட அபிப்பிராயப் பகிர்வுகள் தவிர, மதிப்புரை விமர்சனமென வேறு வடிவங்களில் கருத்துக்கள் அபிப்பிராயங்களேதும் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை. சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எனினும் அதுபற்றிய மதிப்பீட்டினை அறிய என்னுள் அளப்பரிய ஆதங்கமுண்டு. அந்நூல் குறித்த மதிப்பீட்டினை எவ்வண்ணம், யாரிடமிருந்து நான் அறிதல் கூடும்? இப்போதைக்கு எத்தரப்பிலிருந்தும் சாத்தியமில்லையென்றே படுகிறது. சாதாரண வாசகர்களையல்ல, பி

குறுந்தொகையின் குறுகிய அடிகளில் விரியும் அர்த்தங்களின் பேரெழில் 2

Image
  1 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே.                                         -இறையனார்   ‘பூந்துகள் ஆய்ந்துண்ணும் தும்பியே, உண்மை கூறு; இவ்வரிவை கூந்தலிலும்    மணமுள்ள மலரை நீ எங்கேனும் அறிந்ததுண்டோ?’ எனச் சுருக்கமாக இப்பாடலின் அர்த்தத்தை விளக்கலாம். புணர்ச்சியின் உவகை வகையானதும், குறிஞ்சித் திணைக்கானதுமான இக் குறுந்தொகையின் இப் பாடலுக்கு பின்னால் ஒரு கதையும் பிறந்தது பிழையாக. அதுபற்றியே இதில் முதன்மையாக நோக்கப்படவுள்ளது. குறுந்தொகை பாண்பாடற் தொகுப்பில் இரண்டாவதாய் இடம்பெற்றிருகக்கிற பாடலிது. இறையனார் பாடியதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாடலென்னவோ சிறந்த பாடலாகத்தான் தோன்றுகிறது. ஆயினும் இந்த சிறப்பு என்கிற அடைக்கு மேலான புகழை இது பெற்றிருப்பது அதிசயம். இப் பாடலின் தோற்றத்தின் பின்னாலுள்ள கதை, இதை இதன் தகுதிக்கும் மேலான தளத்துக்கு உயர்த்தியிருக்கிறதென துணிந்து சொல்லமுடியும். அக் கதையினை விமர்சனரீதியாக அணுகும்போது தமிழார்வலர் சிலரின் நம்பிக்கையை