கலித்தொகை பாடல்கள் 23
ரசனைக் குறிப்புகள்: 23 கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான்! கையில் சுடர்கொண்ட வளைகள் அணிந்தவளே, கேட்பாயாக. மண்வீடு கட்டி விளையாடிய காலத்தில் அதை ஓடிவந்து காலாற் சிதைத்தும், நம் தலையிலுள்ள மாலையை அறுத்தும், விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு ஓடியும் நம்மை வருத்திய சின்ன வம்பன், அன்றொருநாள் அன்னையும் நானும் இருந்தபொழுதில், ‘வீட்டுக்காரரே! வீட்டுக்காரரே!’ என அழைத்து தனக்குத் தாகமாக இருக்கிறதென்றும் தண்ணீர் கொஞ்சம் தரும்படியும் கேட்டான். அதற்கு அன்னை எனை நோக்கி, பொற்பாத்திரமெடுத்து நீர் கொடுத்துவரச் சொன்னாள். நானும் எதையும் யோசியாது சென்று நீரைப் பாத்திரத்திலெடுத்து கொடுக்கும்வேளையிலே அவன் என் முன்கையைப் பற்றியிழுத்தான். நானும் பயந்துபோய், ‘அம்மா, இவன் செய்வதைப் பா’ரெனக் கத்திவிட்டேன். அன்னை அலறிக்கொண்டு ஓடிவந்தாள். உடனே நான், ‘இவனுக்கு தண்ணீர் விக்கிவிட்டது’ என பொய் ஒன்று சொன்னேன். அன்னையும் அவனது கவனமின்மையைப் பரிவாகக் கண்டித்து அவனது முதுகை நீவிவிட்டாள். அந்தக் கள்வன் மகனோ, கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் ந...