கலித்தொகைப் பாடல்கள் 21
ரசனைக் குறிப்புகள் 21 குறியிடம் வரச் சொல் ஏது இதுவென்று எனக்குத் தெரியவில்லை, தோழி. என்னிடம் எதையோ இரக்கப் போவதுபோல் மிகப் பணிவாக வந்து பேசுகிறான் ஒருவன். உலகைக் காக்கும் உரம் கொண்டான்போல் தோற்றத்தில் காணப்படுகிறான். அறிவுள்ளோரை வணங்கிக் கற்றதனால் அறிவு கொண்ட நல்லவர்களின் அடக்கம் அவனிடம் காணப்படுகிறது. துன்பப்பட்டோரின் துயர் தவிர்க்கும் வன்மை உடையவனாகவும் தெரிகிறான். இருந்தும் தன் பீடு பெருமையெல்லாம் துறந்து என்னிடம் என்னென்னவோ பேசினான். ‘நீயின்றி நான் உயிர் தரியேன்’ என்றான் ஒருபொழுது. அம்மாதிரிப் பேச்சை எவராலும் நம்புவது கடினமல்லவா? ‘நான் உன்னால் எவ்வளவு துயர்ப்படுகிறேனென நீ அறியாய்’ என்றும் சொன்னான். தன் வலையில் வீழ்ந்தவரிடமெல்லாம் இவன் இப்படித்தான் பேசியிருப்பானா? ‘நீ விலகிப் போனால் வாழமாட்டேன்’ என்றான் பிறகு. இவன் பேச்சை நம்பினால் எல்லாரும் என்னை அறிவில்லாதவள் என்றல்லவா பழிப்பார்கள்? என்ன செய்வது என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லையே! எதையும் செய்வதன் முன்பாக, தோழி, அதுபற்றி நாம் சேர்ந்து பேசிக்கொள்வோம். அதற்கு தோழி சொல்கிறா...