கலித்தொகைப் பாடல்கள் 20
ரசனைக் குறிப்புகள் 20 நட்டார்க்குத் தோற்றலை நாணாதவன் வெறிகொண்டு வேங்கையொன்றினைக் கொன்ற புள்ளித் தோல் யானையின் தந்தத்தினாலும்,இளவண்டு மொய்த்துத் திரியும் சந்தன மரத்தினாலும் ஆன உலக்கைகளை எடுத்துக்கொண்டு, கல்லுரலுள் நெல்லைப் போட்டு, வா, தோழி, குற்றத் தொடங்குவோம். அப்போது கடவுளை ஏற்றிப் போற்றுவதுபோல் தலைவனைப் புகழ்ந்து பாடுவோம். கூற்றுவன் பகையோடு எதிர்வந்தாலும் புறமுதுகிடாதவன் மலையிலே, பெண்களின் விரலணிபோல் காந்தள் முகையிலே தும்பிகள் மொய்த்திருக்கும். தன் நண்பர்களாயின் அவர்களுக்கு அன்பால் தோற்கவும் பின்னிற்காதவன். இருளடைந்த மலைப் பகுதியிலே வருடை மான் குட்டியொன்று ஓடித் திரிவதைக் கண்ட கருங்குரங்கு அச்சத்துடன் பார்க்கும் காட்சிகள் கொண்டது அவனது மலை. தோற்றுப் பின்வாங்கும் எதிரிகளைக்கூட இகழாத இயல்பினன் அவன். பட்டையானது முதிர்ந்ததும் இயல்பில் கழன்றுவிடும் மூங்கில் மரங்களைக் கொண்டது அவனது மலை. புலியின் பாதங்களைப்போன்ற காய்களைக்கொண்ட வாழைகள் நிறைந்தது அவனது மலை. அவனோ வறுமைத் துயரடைந்த விதம் சொன்னோரின் குறை தீர்க்க முடியாவிட்டால் தன்னுயி...