கலித்தொகைப் பாடல்கள்.... 30
ரசனைக் குறிப்புகள்: 30 உன் தலைவியைத்தான் தேவை தோழீ, இவன், என்ன தேவையென வந்து இங்கே நிற்கிறான்? பார்த்தால், எல்லாவற்றையும் இழந்தான்போல் காணப்படுகிறானே! செல்வமெல்லாம் இழந்து வறுமையுற்ற சான்றோர் தமது வறுமையைக் களையத் தக்க உறவினரிடம் சென்று தம் நிலை சொல்லத் தொடங்கியும் நாணத்தால் சொல்லமுடியாது தடுமாறுபவர்போல் திரும்பத் திரும்ப எனை நோக்குகின்றான்; நான் நோக்குகையில் மெல்ல தலையைக் குனிகின்றான்; யாரிவன்? (இவ்வாறு தலைவி கேட்கவும், தோழியானவள் அவ் இளைஞன் பக்கம் திரும்புகிறாள்:) ஏடா, நீ ஏதோ பெறவந்தவன்போல் காணப்படுகிறாய். உன் நிழல் உன்னைத் தொடர்வதுபோல், எம்மையும் நீ தொடருகின்றாய். நீ ஏது பெறவந்தாய்? ஏன் இவ்வண்ணம் அலைகின்றாய்? (அதற்கு அவனது பதில்:) கேட்டால் உன் தலைவி அதை மறுக்காமல் தருவாளா? இரந்தார்க்கு, அவர் கேட்டதைக் கொடுக்க முடியாதுபோனால் இரக்கப்பட்டோர் சாதலும் கூடுமென்று வார்த்தை இருக்கிறதே! (அதற்கு தோழியின் பதில்:) இவள் தந்தையை யாரென்று நினைத்தாய்? ஒருவர் விரும்பிக் கேட்கும் எவ்வித மேலான பொருளையும் யா...