கலித்தொகைப் பாடல்கள் 24
ரசனைக் குறிப்புகள்: 24 இவளின்றி நான் வாழேன்! முறம்போன்ற செவியின் மறைப்பிடமாய் பாய்ந்து தாக்கிய புலிய, அறமல்லாதன செய்த துரியோதனனின் தொடையைத் தாக்கி பீமசேனன் கொன்றதுபோல் அதன் தொடையைத் தன் தந்தங்களால் குத்திக் கொன்ற யானையானது, மல்லர்களை வென்ற திருமால்போல் தன் சுற்றத்துள் பெருமிதமாய் நடந்து திரியும் நாடனே, இதைக் கேள்: மாலை சூடிய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு தாமரை மலர் மாலை அணிந்து தண்ணறும் சாந்து மார்பில் பூசி நீ வரின், மணம் வீச மலை வழியில் நின்று பலியெடுக்கும் அணங்கு என மலை வாழ்நர் உன்னை எண்ணிவிடுவர். தொங்கும்படியான கூந்தலுள்ள என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு ஈர ஆடையோடும் இருட்டிலேயும் நீ வரின் தீப்பந்தம் ஏந்துவோர், கவண் எறிவோர், அம்பெய்வோராகிய தினைப் புனக் காவலர் உன்னைக் களிறென்று ஆர்ப்பரிப்பர். அகன்ற அடிவயிற்றையுடைய என் தலைவி சுட்டிய இரவுக் குறிக்கு அவள்மீது அன்புகொண்டவனும் மலைநாட்டுத் தலைவனுமாகிய நீ வரின் புலியென ஊர் உன்னை எண்ணிவிடும். அவ்வாறு விலங்கென எண்ணாது உண்ம...