கலித்தொகைப் பாடல்கள் 18
ரசனைக் குறிப்புகள் 18 நின் கண்ணால் காண்பென்! நீராடலை விரும்பி யாறு சென்ற தலைவி நீரின் வேகத்தில் அஞ்சி, தளர்ந்து, கண்கள் சொருகி நீரால் இழுப்புண்டு செல்லப்படலானாள். அப்போது அங்கே வந்த புன்னை மலர் மாலை சூடிய தலைவன் அது கண்டிரங்கி நீரிலே பாய்ந்து தன் நெஞ்சோடு சேர்த்து அவளைப் பற்றிக் கரைசேர்த்தான். அச் சமயம் அவனது அகன்ற மார்பில் அவளது முலைகள் அழுந்திப்போயின. அதனால் தன் கற்புக்குப் பங்கமின்றி அவனையே நம் தலைவி விரும்புதல் செய்துவிட்டாள். அவனும்தான் யார்? தினைப் புனத்திலே எழுப்பும் அகிற்புகையானது மேலே சென்று நிலவின் தோற்றத்தை மங்கச் செய்ய, அதை தேன்கூடுவென நினைத்து ஏணி எடுத்துவைக்கும் அகன்ற வளமான காட்டினையுடைய மலைநாட்டுத் தலைவனின் மகனேயாவான். வீட்டாரே! வீட்டாரே! ஒன்று ஞாபகம் வைத்திருங்கள். மலை வாழ்நர் அல்லவை செய்தொழுகினால் வள்ளிக் கொடியில் கிழங்கு வீழாது; மலையிலே தேனீக்கள் கூடு கட்டா; தினையிலே கதிர்கள் வளமாகப் பெருகா. பேரழகுகொண்ட மலைக் கன்னியர் எப்போதும் தம...