கலித்தொகைப் பாடல்கள் 27
ரசனைக் குறிப்புகள்: 27 அரசனின் தவறுதான் ஊரின் சோலைக்கண் வாய்க்காலோரமாய் உள்ளது கொன்றை மரம். அதன் பூக்கொண்டு கட்டிய சரத்தினால் அதுவும் கூந்தலும் ஒன்றாகும்படி அணிசெய்து விட்டிருக்கிறார்கள் வீட்டிலே. அந்தப் பூமாலையும் கூந்தலுமோவெனின் அவளது தோளில் தொங்கிக் கிடக்கின்றன. கருங்கூந்தல் கவிந்ததனால்போலும் அவள் முகம் மேலும் மேலுமாய்ச் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வருபவள் எவளாயிருப்பாள்? ஒருவேளை சிறந்த கலைஞன் ஒருவன் தன் கைவண்ணத்தில் தைத்துருவாக்கிய பாவையோ அது? சிறப்புகள் கொண்ட அவயவங்கள் தேடி படைக்கப்பட்ட ஒரு பெண்ணாயிருக்கலாமோ? ஆடவர்மேற்கொண்ட வெறுப்பினால் யாரோ கொண்ட அணங்கின் வடிவமோ அது? இப்படியானவளை ஏன் இவ்வாறு காவலின்றி விட்டிருக்கிறார்கள்? ஒருவேளை, செல்வமுள்ள பெற்றோர்க்கு அருமையாய்க் கிடைத்த ஒரு செல்ல மகளோ இவள்? இவளோடு கதையாடி இவள்பற்றி நான் அறிந்து வரப்போகிறேன். ‘அன்னம்போல் சாயலும், மயில்போல் ஒயிலும், புறவுபோல் திட்பமும், மான்போல் மருட்சியும் கொண்ட பேரழகியே! இவையெல்லாம் உனைக் கண்டாரைப் பேத...