எனக்குப் பிடித்த சிறுகதைகள் 8



(இதுபோன்ற மாயநிலைக் கதைகள் ஈழ தமிழிலக்கியத்தில் நிறைய இல்லை. இத்தகைய பின்நவீனத்துவ சாயலுடன் சிறுகதைகள் மொத்த தமிழ்ப்பரப்பிலும்கூட பெருவாரியாக இல்லையென்றே சொல்லவேண்டும். ச.ராகவன், திசேரா போன்றவர்கள் சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். இப்போது ந.மயூரரூபனின் எழுத்துக்களில் இம்மாயாவாதத் தன்மைகளை அதிகமும் நான் கண்டுவருகிறேன். இத்தகைய கதைகள் சொற்களில் தங்கிநிற்பவை. தமக்கேற்ற சொல் இல்லையேல் நேர்த்தி நாகம்போல் இவற்றிலிருந்து நழுவிப் போய்விடுவதாய் இருக்கின்றது. ஓட்டமாவடி அறபாத்தின் இந்தக் கதை மிக நன்றாக வந்து அமைந்திருக்கிறது. 'உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி' என்கிற இவரது கதைத் தொகுப்பில் இதைவிட சிறந்ததாய் இரண்டொரு கதைகள் இருந்திருந்தாலும், இவ்வகைக் கதைக்காகவே இது என் தேர்வாகிறது.)


ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன
-ஓட்டமாவடி அறபாத்-

இரவு விளக்கின் அனுங்கலான வெளிச்சம் சயன அறையில் கவிந்திருந்தது.
      கனவின் அனுகூலங்கள் ஒரு இருண்ட வீதியில் பேரிரைச்சலுடன் பயணித்தன. கதவின் தாழ்ப்பாள் விலகிற்று. நான் சைக்கிளை உலத்திக்கொண்டு வெளியே வந்தேன். பச்சைப் பசேலென்ற புல்வெளிகள். கதிர் முற்றிய வயல்வெளிகள் நிறைமாத கர்ப்பிணியாய்த் ததும்பி நின்றன. நடுவய்க்கலில் நாரைகள் இரக்கான தியானத்தில் ஒற்றைக் காலில் தவமாய் நின்றன. இடிந்த ஒரு கட்டடத்தின் ஓரத்தில் களை பிடுங்கிச் சவுத்த இரு பெண்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தனர். அவர்களின் நாய் நாக்கைத் தொங்கப்போட்டபடி தலைமாட்டில் குந்தியிருந்தது. மூடாத மார்புகளின்; மதர்ப்பில் களத்துச் சூடு குவிந்திருந்தது.
      நேரே சைக்கிள் சக்கரம் சுழன்றது. ஒரு குளக்கட்டில் ஏறி செம்மண் புழுதி படர்ந்த தரையில் அழுந்திச் சென்றது. இருமருங்கிலும் பனை மரங்கள் நொங்கும் காயுமாக காய்த்துத் தொங்கின. சைக்கிளை நிறுத்திவிட்டு குளத்தின் அழகில் சொக்கினேன். அலைகளின் முதுகு மினுக்கம் கரையில் முட்டி உடைந்தது. ஆட்காட்டி முட்டையிட்டு கற்கள்கொண்டு மூடி அடையாளப்படுத்திய இடத்தை தவறவிட்டு அதைத் தேடித்தேடி தாழப்பறந்து கத்திக்கொண்டிருந்தன.
      இரு மைனாக்கள் மஞ்சோனா மரக்கிளையில் சாவகாசமாக உட்கார்ந்தபடி அலையாடும் குளத்தைப் பார்தபடி இருந்தன. ஆணின் இறகில் சொண்டுவைத்து கோதிக்கொண்டிருந்தது பெண் மைனா. குளக்கரையின் வடதிசையில் ஒரு நாவல் மரம் ஆகிருதியாய் சடைத்து நின்றது. கொத்துக்கொத்தாக கரிய நாவல் பழங்கள் அடர்ந்திருந்தன. கிளைவிட்டுக்
கிளை தாவிய குரங்குகளின் அட்டகாசத்தில் பழங்கள் சிலபோது கீழே சிதறவும் செய்தன.
      என்னை நாவல்மரம் ஒரு காந்தம்போல் அதனண்டை ஈர்க்கத் தொடங்கியது. அதன் அடர்ந்த வசீகரத்தில், கிளைகொள்ளா சௌந்தர்யத்தில் னம் மயங்கித் தவித்தது. கரிய கனிகள் வாவென்று வசியம் செய்தன. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு மரத்தைநோக்கி நடக்கத் தொடங்கினேன். நாவல் மரத்தின் கனதியான கொப்புக்களிலிருந்து இரு கண்கள் என்னை தீட்சண்யமாக பார்த்துக்கொடிருந்தன. தீப்பிழம்பின் ஜ்வலிப்பு. தகதகவென் மின்னும் அதன் பிரகாச விழிகள் கருமை படர்ந்த வானத்தில் இரு நட்சத்திரங்களைப்போல் ஒளிசிந்தின.
      கண்ணிமைக்கும் நேரத்தில் அது கொத்துக்குள்ளிலிருந்து கிளைக்கு நழுவியது. பின் அந்தரத்தில் நின்றபடி தன் கருமுகத்தை விரித்து குவிமயமாய் என்னைச் சுட்டி கூர் நாவால் துழாவி சமிக்ஞைசெய்தது. கருநாகத்தின் உடல் மினுக்கத்தின் தகிப்பில் என் விழிகள் கிறங்கி நின்றன. வாழ்வின் நித்யத்தில் இது முதல் அனுபவம். மிக அருகில் நான் கருநாகமொன்றின் அண்மையில் நிற்கிறேன். துளியேனும் அச்சம் முகிழவில்லை. ஆதியந்தமாய் ஓர் உறவின் நீட்சி உணர்வில் கசிகிறது.
      அதன்மேல் பாந்தம் கமழ அருகில் சென்றேன். பொறுக்குவாரற்ற நாவல் பழங்கள் சிதறிக்கிடந்த மரத்தின் நிழலை மி;த்தபடி பாதங்கள் நகர்ந்தன.
      கருநாகம் கீழே இறங்கி மரத்தினடியில் நின்றது. அதன் கூர் நா உள்ளேயும் வெளியேயுமாக சொடுக்குப்போட்டு மீண்டது. அதன் பார்வையின் உக்கிரம் நெஞ்சின் ஆழத்தைத் தீண்டிவிட்டுச் சென்றது. மேனி எங்கும் குளிர்ச்சியின் ஆகர்ஷிப்பு. நாகத்தின் கரிய நிழல் தரை முசியப்படர்ந்தது.
      வழவழப்பான அதன் உடம்பைத் தொட்டுப் பார்க்கக் கரங்கள் துறுதுறுத்தன. காருண்யத்துடன் எழுந்துநிற்கும் அதன் விழிகளில் அன்பின் ஆழம் கசிந்தது. புகையிலைபோன்ற விரிந்த முகத்தை சுருக்கிக்கொண்டது. பூமியில் தலை அழுத்தி என்னைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியது. அதன் சௌந்தர்ய லாகிரி என்னைக் கட்டிப்போட்டது.
      அழகின் நுட்பங்களை மனம் ஆர்வத்துடன் தேடத் தொடங்கியது. அலை முதுகில் ஆரோகணித்து வந்த சீதளக்காற்று என்னைச் சீண்டச் சீண்ட நான் விழிகள் சொக்க நாவல் மரத்தின் அடியில் சாய்ந்துகொண்டேன். நாகம் என்னருகே ஊர்ந்து வரும் ஓசை என் செவிகளில் நிறைய மனம் பூத்துக் குலுங்கி நறுமணம் வீசியது. அதன் கதகதப்பு என் விலாவில் தகீத்துக்கொண்டிருந்தது.
      அது தன் நாவால் என்னைத் துழாவத் தொடங்கியது. முத்தமிட்டுக் கவ்விய உதடுகள் வலியில் துடித்தன. நான் எழு முயற்சித்தேன். முடியவில்லை. என்னைச் சுற்றி ஒரு கொடிபோல அது படர்ந்திருந்தது. அது ஆவேசத்துடன் நடனமிட்டது. கள்வெறி நீங்கிய களி நடனம். அதன் விழிகள் ஆனந்தத்தில் மிதந்தன. சிவந்த அதரங்களில் இளநகை முகிழ்ந்திருந்தது.
      நடனத்தின் உக்கிரத்தில் அதன் விழிகளின் வசீகரம் பிரளயமாய் கதித்தது. முகாந்திரங்களற்ற பச்சை வெளியில் அது நீந்திச்சென்றது. உச்சங்களைத் தொட்டுவிட்ட திளைப்பு. நரப்புகள் அதிர்ந்து வெடிக்கும் தருணம் விழிப்புத் தட்டியது. உடல் பிசுபிசுவென வியரத்துக்கொட்டியது.
      மறுநாள் என் வீட்டின் முகப்பை மாற்றியமைத்தேன். புற்றுக்களால் காணியை நிறைத்தேன். கனிதரும் மரங்களில் கருப்புத் துணிகளை கட்டிவிட்டேன். அவை காற்றிலாடி நர்த்தனம் புரிகையில் கருநாகத்தின் பிம்பமே நெஞ்சில் நிறைந்தது. நான் பாவிக்கும் எல்லாம் பொருட்களும் கருப்பாக மாறின. ஆடைகளும் கருப்பு நிறத்தில். இன்ப விஷம் எனக்குள் ஊறத் தொடங்கியது. அறை முழுக்க கருப்பின் பிரகாசம் வீசியது. நாகத்தின் அசுர விழிகள் மனதின் ஆழத்தில் மினுங்கத் தொடங்கின. பிரியமாக என் தங்கை வளர்த்த வெள்ளைப் புறாக்களைத் திறந்துவிட்டேன். அதன் கூட்டுக்குள் மைனாக்களையும் காகங்களையும் கொணர்ந்துவிட்டேன். அவள் என்னுடன் பிணங்கிக்கொண்டு மூஞ்சைத் தூக்கி வைத்தபடி போனாள். காகத்தை அடைத்துவைத்துச் சோறுபோடும் 'லூசி' என்பதுபோல் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தாள். அவள் கருப்பு நிற மார்புக் கச்சை உள்ளாடைகளைமட்டுமே வெளியே கொடியில் காயப்போடச் சொன்னதற்கு 'மூளை பிசகிற்றா' என்று என்னை வைதுவிட்டு அம்மாவிடம் ஓடினாள்.
      கரிய நிழல்மீது பாந்தம் பெருகியது. வெளிச்சம் விழும் நேர்திசையில் உட்கார்ந்து எழுதும்போது தாளில்விழும் பேனா முனையின் கரிய நிழலுக்காவே எழுதத்தொடங்கினேன்.
      என் கருப்புத் தோழியை இறுக அணைத்து முத்தமிட்டேன். அவள் திணறிப்போய் உனக்கு என்ன பிடித்துவிட்டது என கண்களால் குறும்புடன் கேட்டாள். அவள் கன்னங்கள் நாவற்பழம்போல் மினுங்கித் தளும்பின. நிலவு முக்காடிட்டுச் சரியும் பின்னிரவுக் காலங்களில் நிழல்வாகை மரத்தினடியில் அந்தக் கருப்பு நிலா என் மடியில் கம்பீரமாய் உதிக்கத் தொடங்கியது.
      நாக தரிசனங்களுக்காக இரவுகளும், கனவுகளும் ஏங்கித் தவித்தன. தவிக்கும்போது ஆசைப்பட்டது எளிதில் வாய்த்துவிடுகிறதா? அது ஒரு பித்தன்போல் என்னை மாற்றிவிட்டது. கருப்பில் தோய்ந்த ஒரு நோயாளியாகிவிட்டேன். மருந்துகள் பயனற்றுப்போயின.
      மினுங்கும் அந்த வசீகர விழிகளுக்காக புற்றுக்களின் அருகிலிருந்து புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினேன். கருப்பு ரோஜாக்கள் வீட்டு முற்றத்தில் நீரின்றி வாடின. என் பிரிய நாய்க்குட்டி காலைச் சுற்றியபடி விலாவில் உரசித்திரிந்தது. பிரிவின் துயரம் என்னை முழுமையாக விழுங்கி அரிக்கத் தொடங்கியது. என்னைத்தவிர உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர். எல்லோரிலும் கோபமாய் எரிந்து விழுந்தேன்.
      அதன் கூர்நாவும் குறுகுறு பார்வையும் என் மேனி தழுவிய வளவளப்பும் உயிரின் மர்மக்குகையுள் சிதறி என்னைத் திகிலூட்ன.
      அடர்ந்த வனங்களில் தேசாந்திரியாய் அலையத் தொடங்கினேன். கோவணம் தரித்த சன்னியாசியாய் ஆகிவிட்டது வாழ்க்கை.
      நீர் விழும் ஆறுகள், அலைதரும் குளங்கள், பேரலை எகிறும் கடற்கரை, பாம்புகள் ஊரும் அடர்வனம், மரங்கள் என தேடல்கள் தொடர்ந்தன. முடிவிலாப் பயணங்கள். கவிதைகள் ஈரத்துடன் பெருகின. அதன் குரலின் ஏக்கம் பெரும் ஒப்பாரியாக வனங்களில் சுற்றித்திரிந்தது. ஆதாமின் தோட்டத்தின் ஏவாள் இல்லை.  ஏவாள் கடித்த கனிகள் தோட்டமெங்கும் சிதறிக்கிடந்தன. துயரங்களள் பேரலைபோல் முகடு தட்டி எம்பி என்னைத் துன்பக் கடலில் மூழ்கடித்தன.
      நான் நாவல் மரத்தின் புத்தனாகிவிட்டேன். தியானங்கள் மௌனத்துடன் நீண்டன. தியானத்தின் வலிமையில் அது என் முன் தோன்றி களிநடனம் பரியாதா? உள்மனம் ஏக்கத்துடன் கேவித்திரிந்தது. சொற்கள் உதிர்ந்த இடத்தில் மௌனம் ஒரு மலைபோல் குவிந்தது. மூடிய விழிகளுள் கருமை மட்டுமே கவிந்திருந்தது.
      திறக்க மறுக்கும் விழிகள் இருளுக்கு வசியப்பட்டன.
      இப்படித்தான் ஒரு மழைக்காலம். கொழும்பில் டர்ணர்வீதியில் பணி நிமித்தம் நடந்துகொண்டிருந்தேன். பரிச்சயமான வழி. மழை இலேசாக தூறிக்கொண்டிருந்தது. வீதியை இருள் வந்து போர்த்தத் தொடங்கியது. வீதியின் குறுக்குப் பாதையில் எப்போதும் வெளிச்சம் விழாத சந்தில் நடந்தேன். அரிதாக அவ்வழியே வரும் வாகனங்களின் வெளிச்சத்தில் மறைந்திருக்கும் ஒதுக்குப்புறங்கள் நன்றாகவே தெரியும். பழைய இடிந்த கட்டடச் சுவருடன் சாய்ந்திருக்கும் நாகங்களில் சாரைகள் ஊர்வதை முதன்முதலில் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.
      இன்ப அதிர்வு என்பது இதுதானா? நாடி நரம்பில் இரத்தம் தீவிரமாக ஓடியதையும் அது உறைந்து பின் நெகிழ்ந்து தாபமாய் துடிப்பதையும் அனுபவித்தபடி நின்றேன். இருளுக்குத்தான் எத்தனை வசீகரம். சாரையும் நாகமும் ஒவ்வொரு முடுக்கிலும் முக்கி முயங்கும் காட்சி விழிகளில் மின்னி மறைந்தது. ஒரு நாகத்தின் இடுப்பில் தொங்கியபடி சாரை அதிவேகமாக முயங்கி சுய பிரக்ஞையற்றுக் கிடந்தது. காமத்தின் உச்சத்தில் ஈருடலின் மூச்சுக்கள் மெழுகுபோல் உருகி தகித்தோடின.
      நாகத்தின் ஸ்தூல வாசம் என் நாசியில் விடைத்தது. மழைவேறு இலேசாக தூபமிட்டுக்கொண்டிருந்தது. இருளுக்கு வசியப்பட்ட பாதங்கள் ஊர்ந்தபடி நகர்ந்தன. புற்றினடியில் அழகின் சாற்றைப் பிழிந்து தன் முகத்தில் பூசியபடி ஒரு நாகம் நின்றது. அதனண்டை என் கால்கள் இழுபட்டுச் சென்றன. வெட்டிமறைந்த மின்னல் கீற்றில் இரு விழிகள் என்னில் மொய்த்து மீண்டன. நாக ரசம் நாவில் ஊறித்திளைத்தது. உடம்பு உலையில் விழுந்து தகித்தது. நாகத்தின் உடல் மொழி, அருகே வாவென்ற அதன் இரகசிய அழைப்பு நடனத்தில் நீந்தியது.
      'உன் திசைநாடி ஊர்ந்த என் கால் நடுக்கம் இன்னுமிருக்கு நெஞ்சுக்குள்.' எழுதிய கவிதை மனசின் மடிப்பில் குறுக்கே விழுந்தது. கிளைவிடும் ஆசையில் நாவுகள் கிளரந்து உயர்ந்தன. என்னைச் சுற்றிலும் பற்றுக்கள் முளைக்க நான் ஆழங்களுக்குள் மூழ்கிப்போனேன். ஒவ்வொரு துளையிலும் வசீகர நாகங்கள் படம்விரித்து சீறி நின்றன. பிளந்த நாவுகள் ஒரு வீரனின் கரங்களில் சுழலும் வாள் சமராய் எடுப்புக்காட்டின. வாளின் முனை வீச்சு உள்ளொடுங்கி பின் துடிப்புடன் வெளியே எகிறின. தழைகள் மூடிய மரத்தினடியில் உடல் மறைந்து கிடந்த நாகங்கள் ஆரத்தழுவலில் அமுங்கிக்கிடந்தன. வாழ்க்கை கருணையற்றது. முதல்தரமாக மனசில் கசப்பு முகிழ்ந்தது.
      கனவுகளில் எதிர்ப்படும் நாகங்கள் திடுமென என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தும் விடுகின்றன. அவை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்றன. என் பருவத்தின் பள்ளத்தாக்குகளில் காமநீர் நிரம்பித் ததும்பிற்று. கருப்பின் அழக்ில் என் இளமை அழியத் தொடங்கியது. கனவும் கனவின் சன்னமான முடிவும் என் படுக்கைகளில் நிரம்பி விழிந்தன.
      காலநதியின் அதிவேக ஓட்டத்தில் நான் பணிசெய்யவென மலைநாட்டிற்குத் தூக்கி வீசப்பட்டேன். சுவர்க்கத்திலிருந்து வீசப்பட்ட ஆதாமாய் என் பாதங்கள் ஒரு மலையில் ஊன்றி சுற்றித்திரிந்தன. எனக்குரிய ஏவாள் இந்தத் தோட்டத்திலேனும் மறைந்துளளோ?
      பசுமை குடிகொண்ட புவனமாய் வாழ்க்கை மாறிற்று. காலைப் பனியில் முங்கிக் குளித்தபடி எனைநோக்கிக் கையசைத்துச் சிலிர்க்கும் மலர்களும், அகன்று விரிந்த தேயிலைத் தோட்டங்களும் அற்புதம்! அற்புதம்! தவமாய்த் தவமிருந்த பெற்றவளின் வயிறும் குளிரத் தொடங்கியது.
      நடுநிசியில் விழிப்புத்தட்டிவிடும் தருணங்கள் அவஸ்தை மிக்கவை. நாகத்தின் நினைவுகள் என்னைப் பிழிந்தெடுத்தன. முகட்டை வெறித்தபடி படுத்திருக்கும் கடுமையான குளிர் இரவுகள் மகாஅவஸ்தை கனவு சுரக்கும் உடல் தகிப்பில் அதரங்கள் உலர்ந்து வியர்த்துக்கொட்டும். இடம்பெயர்வு அல்லது சூழலை மாற்றல் என்னளவில் சில பொழுதில் பொய்த்துத்தான் போகிறது. மௌனமாக இரகசிய அறைகளில் அமுங்கிக்கிடக்கும் அவை ஒரு சிறு பொறிக்காக காத்திருந்து மனதை உதிர்க்கும் விந்தையை என்னவென்பது?
      நான் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு தோட்டமிருந்தது. கராம்பு, ஏலம், மிளகுக்கொடி, பாக்கு, வெற்றிலைக்கொடி, சாதிக்காய் என ஏகப்பட்ட மரங்கள் அடர்ந்த தோட்டம். சதா நிழலையும் இலேசான இருளையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். தோட்டத்தின் முடிவில் ஒரு வயல். பீலித் தண்ணீர் ஊடறுத்துச்செல்லும் அது பார்க்கும்போதெல்லாம் செழித்துக்கொண்டே தலையாட்டும். பீலியும், பீலியை அண்டினாற்போல் ஒரு கிணறும் வாய்க்கப்பெற்ற அத்தோட்டம் என்னை வசீகரித்ததில் வியப்பேதுமில்லை.
      பாம்புகளற்ற அத்தோட்டத்தில் சாவகாசமாக உட்கார்ந்து படிப்பதும், சிந்திப்பதுமாக என் மாலைகள் மயங்கின. ஆரம்பத்தில் அட்டைகள்மட்டும்  இரத்தம் குடித்து மயங்கி வீழ்ந்தன.  பாதங்களைக் கவ்வி உதடு பொருத்தி இரத்தம் குடிக்கையில் அவைகளைப் பிரித்தெடுக்கவே பிரயத்தமெடுக்க வேண்டியிருக்கும். பின் சர்வ்வார நீரில் பாதங்களை அமுக்கி நனைத்தபடி தோட்டத்திற்கு வருவேன். அட்டைகளின் தொல்லை இருக்காது.
      எனினும் அண்மைக்காலமாக எனது அறையின் ஜன்னலோரத்திலிருந்து இரு விழிகள் என்னில் மொய்த்து விளையாடுவதை உள்ளணர்வு சுட்டிக்காட்டியது. திடீரென அறையை அதிரடியாக செக்பண்ணிப் பார்த்தேன். நாட்கள் நகர நகர என்னை உற்றுப்பார்க்கும் விழிகளின் உக்கிரம் வலுக்கத் தொடங்கியது. நாகங்கள்தான் எனைத் தேடி வந்துவிட்டதோ? ஐயங்கள் வலுக்க தோட்டத்தின் கரிய நிழல்களுக்கிடையில் என் கால்கள் உற்சாகமாகவும், பதட்டத்துடனும் அலைந்தன. வயதான வீட்டுரிமையாளர்களிடம் கேட்டாயிற்று. 'தம்பி எங்கட தோட்டத்துல பாம்புத் தொல்லை இல்ல, அட்ட மட்டும்தான் இரிக்கி', 'ஏன் பாட்டி உங்கட வூட்டுக்குள்ள எப்பயாச்சுமம் பாம்பு வந்திரிக்கா?' நான் இப்ப அச்சத்துடன்தான் கேட்டேன். அதற்கு அவ சிரித்துக்கொண்டே, 'இப்ப புதிசா வாரண்டாத்தான் பாம்பு வரணும். ஆனா இரண்டு நாளக்கு முதல்ல எங்கட மகள்தான் ஹொஸ்டலேர்ந்து வந்திரிச்சு. அவவும் ஒரு அடை காக்குற பாம்புபோலதான் மூலைக்குள்ள சுருண்டு படுத்தா வெளியே வரமாட்டா'.
      இரவு படுக்கைக்குச் செல்லு முன் பாட்டி தந்த டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தபோது இரு விழிகள் திரைச்சீலைக்குப் பின்னிருந்து என்னை உற்றுப்பார்த்தன. கருவிழகளின் அழகும் நளினமும் அது இருளில் மினுங்கிய அற்புதமும் என்னை ஏவாளின் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றன. சுவரின் உத்திரத்தில் அதன் கரிய நிழல் பரவிச் சென்றது.
      பின்வந்த இரவொன்றில் அறையில் தொலைக்காட்சி பார்த்தபடி உறங்கிப்போனேன். நடநிசியில் வழக்கம்போல் விழிப்பு தட்டியது. தொலைக்காட்சித் திரையில் புள்ளிகள் இரைந்தபடி வெளிச்சம்காட்டின. அணைத்துவிட எழுந்த என்னை இறுக்கிப்பிடித்து நிறுத்தியது வழவழப்பான தேகம். என்னருகே மூச்சிறைக்க அது படுத்திருந்தது.
      இரவு விளக்கின் மௌன ஒளி அறை முழுக்க பரவியிருந்தது. அதன் உடல் மினுக்கத்தில் நான் திகைத்துநின்றேன். அழகின் பிரமாண்டத்தின் முன் நான் சிறுபுழுவென நெளிந்தேன். செக்கச் செவேலென பிளந்த நாவால் அது என்னை துழாவத் தொடங்கியது. என் பாதங்களை அது வாலால் சுற்றி என்னில் படர்ந்து மேலேகியது. பளபளக்கும் அதன் விழிகள் தாபத்தில் கிறங்கி நின்றன. நான் எழுந்துவிடாதபடி அது என்னை இறுக்கத் தொடங்கியது. மூச்சுமுட்ட நெஞ்சு அடித்துக்கொண்டது. குளிர்ச்சியான அதன் நாவால் என்னைத் தீண்டத்தீண்ட உடல் முழுக்க திகுதிகுவென பொறிகள் எரிந்தன. கதவிடுக்கால் நழுவிச்செல்லும் அச்சத்தை திருப்பியழைக்க மனமின்றி நாகத்தின் உடலை தழுவத் தொடங்கினேன். ஆலகாலம் எனக்குள் பரவத் தொடங்கியது. 

(27.08.08)
     

      

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி