தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி

 

தேவகாந்தனின்காற்று மரங்களை அசைக்கின்றது

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல்

-    ஈழக்கவி

“படைப்பு மட்டுமல்ல,

படைப்பாளியே இதில் விமர்சனமாவது விசேஷம்.

அவனது எழுத்தின் செல்நெறி மாற்றமும்,

பின்னால் உண்டாகும் பலமும் பலவீனங்களும்

இங்கே தெளிவாக முன்னெடுத்து வைக்கப்படுகின்றன.

க.நா.சு.விலிருந்து ந.ரவீந்திரனூடாக பல விமர்சகர்களும்

இந்நிலையை எடுத்து விளங்கப்படுத்தியிருப்பினும்,

வாசகனை இணங்கச் செய்து தன்னுடன் அழைத்துச் செல்லும்

விந்தையை நூலாசிரியனின் இக்கட்டுரை செய்திருக்கிறது.”

-    காற்று மரங்களை அசைக்கின்றது; பக். 211

 

இணையவழி தேடலும் வாசித்தலும் ஒரு உயிர்ப்பான செயற்பாடாக அமைந்து விட்டது, எனக்கு. நிதானமான வாசிப்புக்கு இணையம் வழிசமைக்கின்றது; புதிது தேடலுக்கு வித்திடுகின்றது; அறிதலின் பரப்பை விஸ்தீரனமாக்குகின்றது. வானொலியில் எதிர்பாரத நேரத்தில் நம் மனசை தொடுகின்ற பாடல்களை கேட்க முடிவதைப்போல, இணையத்திலும் பல அரிய புதிய கருத்தியல்களை அறிய முடிகின்றது. அண்மையில் இணைய வழி உசாவலின் போது, Youtube (www.youtube.com/watch?v=LHovj0cb_GY) இல் “ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு” என்ற என் புத்தகத்தின் தலைப்பினைக் கண்டேன். யாரோ இதே தலைப்பில் எழுதியிருக்கக்கூடும் என்ற நினைப்பில் அதனை பார்த்து கேட்டபோது வியப்பாக இருந்தது. என் நூலை பற்றிய உரை அது. உரையின்  ஆரம்பமே என் உணர்வுகளை உசுப்பிவிட்டது.

“சென்ற ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது ஜீவநதி அலுவலகத்தில் வாங்கிவந்திருந்த ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி)  ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ என்கிற நூலை சமீபத்தில் வாசிக்க முடிந்திருந்தது. நூலையும் ஜீவநதியே வெளியிட்டிருக்கிறது. அதன் 54வது வெளியீடு அது. அடக்கமான அழகிய பதிப்பு.

ஆச்சரியமாக இருந்தது, இன்றைய காலகட்டத்து இலங்கைத் தமிழிலக்கியத்திற்குத் தேவையான விமர்சனக் கூறுகளையும் கண்ணோட்டத்தையும் நூல் தாங்கியிருந்தது காண. 2015இல் வெளிவந்த நூல் இன்றுவரை கவனம் ஆகியிருக்கவில்லையே என மனம் கனத்தது. ஜீவநதியைப் பாராட்டுகிற வேளையில் அதற்கான வருத்தத்தையும் கொஞ்சம் பட்டுக்கொள்ளவேண்டும்.

இதை வாசிக்க நேர்ந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. அண்மைக் காலமாக ‘வாசிப்பு பற்றிய மீளாய்வுகளும் தேடல்களும் ஓர் அவசியத் தேவையாய் என் மனத்தில் ஊன்றியிருந்த வேளையில், இந்நூல் ஓரெல்லையை நோக்கி நகர்வதற்கான வழியினைத் திறந்துவிட்டதாய்ப் பட்டது. அது வாசிப்பு, குறிப்பாக வாசக மைய விமர்சனம், சார்ந்தது.

பரவசத்தின் எல்லையில் நிற்க வாசகனைக் கூவி அழைத்துக்கொண்டிருந்த வாசிப்புச் செயற்பாங்கு, தன்னுள் எத்தனைதான் வாசிப்புச் சுதந்திரத்திற்கும் அர்த்த பரிமாணத்திற்குமான வெளியினைக் கொண்டிருந்தபோதும், வாசகனின் சர்வாதிகாரமாக     அது உருவெளிப்பாடடையக் கூடிய சாத்தியம் தெரிய தொடர் வாசிப்பு ஒரு தேக்கத்தை எனக்குள் அடைந்துவிட்டது. கொவிட் -19 உலகைச் சூழ்ந்தபொழுதில் சகல காரியங்களும் கைவிடப்பட்டன. இப்போது இடத்திலிருந்து தொடர என்னை ஊக்கியிருக்கிறது ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ நூலின் வாசிப்பு.....”

இவ்வாறு தொடர்கின்ற அந்த விமர்சன உரை,  பல்வேறு விடங்களை பல கோணங்களில் ஆய்வுப்பூர்வமாக துல்லியமாக்குகிறது. வாசகரை மையமாகக் கொண்ட (reader oriented) விமர்சனக் கொள்கை பற்றிய  அரிய பல கருத்துக்களை இவ்வுரை முன்மொழிந்துள்ளது. படைப்பாளிக்கு நிகராக வாசகனை முன்னிறுத்திப் பேசும் ஒரு கோட்பாடுதான் வாசக மைய விமர்சனம் (Reader Response Theory) ஆகும். Water J. Slotoff தனது With respect toreaders எனும் நூலில், “வாசகனுக்கு அதன் அர்த்தத்தைத் தன்போக்கில் கிரகித்துக்கொள்ள உரிமை உண்டு” என்கின்றார். வாசக விமர்சனம் பற்றி அந்த உரை பின்வருமாறு விபரிக்கின்றது: “அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து முக்கியத்துவம் பெற்றெழும் வாசக மைய விமர்சனமானது உண்மையில் இன்று வழக்கிழந்துபோன புதிய விமர்சன முறையிலிருந்து உருவானதுதான். ஆயினும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த வொல்ஃப்காங் ஈஸர்போன்ற சில ஜேர்மன் பேராசிரியர்களினால் தாய்ச் சிந்தனைப் போக்கினைப்போல் வலுவிழந்து போகாமல் இது மேலும் ஊட்டமளித்து முன்னெடுக்கப்பட்டது. இதில் வாசக உலகத்தை இரு கூறாக்கியது முக்கியமான விஷயம். பிரதியின் அர்த்தம் கோடல் அதிகாரம் வாசகரிடம் இன்னுமே இருந்த பொழுதில், அது வாசக சர்வாதிகாரமாக உருவாகாமல் காக்கின்ற கவசமாக அது இருக்குமென்று பலராலும் நம்பப்பட்டது.

இன்று இதனால் இரண்டு விளைவுகள் வாசிப்புக் களத்தில் நிகழ்ந்திருக்கின்றன.  

(1) அர்த்தமானது பிரதியிலோ அல்லது அதற்கு வெளியிலோ இல்லையென்றும், அது வாசகனின் புரிந்துகொள்ளலில் இன்னுமே இருக்கிறதென்றும்  ஈஸரது கூற்றின்படி உறுதியானது.

(2) அதன்மேல் வாசகரையே உத்தேச வாசகரென்றும் ஆதர்ஸ வாசகரென்றும் இரண்டாகப் பிரித்து, வாசக இன்பத்தைத் தேடும் ஆதர்ஸ வாசகரை ஈஸர் முன்னிலைப்படுத்தினார். அதன்மூலம் வாசக அதிகாரத்தின் விசை தணிக்கப்பட்டது.

இப்போது வாசக மைய விமர்சனமானது ஆய்வடிப்படையிலோ கோட்பாடுகளின் அடிப்படையிலோ செய்யப்படும் விமர்சனங்களுக்கு நிகரான பெறுபேறுகளைத் தந்தபடி நிகழ் களத்தில் திகழ்ந்துகொண்டு இருக்கிறது.

இவைபற்றியெல்லாம் சொல்வதற்கு ஓர் அவசியமிருக்கிறது. பெரும்பாலும் பிரதிகள் குறித்த உண்மையான விமர்சனங்கள் பூரணமாய் இன்று அற்றுப்போயிருக்கின்றன என்பதைச் சொல்வதில் தயக்கம் காட்டவேண்டியதில்லை. அபிப்பிராயங்கள் இருக்குமளவு விமர்சனமில்லை. அபிப்பிராயம் வாசகனோடான தாயும், முடிவு விமர்சகனுடையதாயும் இருந்த நிலை மாறியதிலிருந்து வெறும் அபிப்பிராயங்களே விமர்சனங்களாய் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் வாசக மைய விமர்சனத்தின் மீதான வாசக அதிகாரம் பற்றிய அய்யம் உணரப்பட்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறை கண்டடையப்பட்ட பின்னால் அது மூச்சாக இன்று பயில் வரங்கில் நிற்கிறது. நல்ல விமர்சனம் பிறக்குமென்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.

‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ நூல் வாசக விமர்சனத்தின் வழியில் ரசனை முறைத் திறனாய்வு, ஆய்வுத் திறனாய்வு, கோட்பாட்டுத் திறனாய்வென பல தளங்களிலும் செயற்பட்டிருப்பது இம்முறை சார்ந்த விமர்சனத்தின் முதல் வெளிப்பாடாய் எனக்குத் தெரிகிறது. வாசக மைய விமர்சனமானது நிகழ்வு வாதத்துடனும் உரைவிளக்கக் கோட்பாட்டுடனும் தொடர்புகொண்டுள்ள வகையில் இந்நூலில் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) செய்துள்ள முனைப்புக்கள் ஆகக்கூடுதலான ரசனையையும் விளக்கத்தையும் கொண்டிருக்கின்றன.

இது உண்மையிலேயே சிரமமான காரியம். ஏனெனில் வாசக மைய விமர்சனமானது நிறைந்த கருதுகோள்களைக் கொண்டது. அதனை ஒரு சிந்தனைப் போக்கில் அடக்குவது இயலாத காரியமாயும் இருக்கிறது. ஆனால் புரட்சிகரமான, புதுமையான விமர்சன முறையாக இருந்ததில் எழுபதுகளின் ஆரம்பத்தில் இது பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பின் இது வாசக சர்வாதிகாரமாக மாறக்கூடிய சாத்தியத்துடன், ஏற்கனவே குறிப்பிட்டபடி புதிய விமர்சனத்தின் சீணத்துடன், இதுவும் மதிப்பிறங்கியது. இன்று இது மறுபடி மேனிலை அடைந்திருப்பதால் பயில்வு செய்வதில் தவறில்லையென நம்பமுடிகிறது.”

இவ்வுரை ‘வாசக மைய விமர்சனம்’ பற்றி எடுத்துரைக்கின்ற கருத்தியல்களை கேட்கையில், நேர்காணல் (நேர்கண்டவர் ஸ்டாலின் ராஜாங்கம்: இணையம்)  ஒன்றில் இந்திரன் (இராஜேந்திரன்) ‘வாசக மைய விமர்சனம்’ பற்றி கூறிய கருத்தொன்று என் ஞாபத்திற்கு வருகின்றது. ““நான் இலக்கிய சன்னிதானங்களுக்காக எழுதும் எழுத்தாளன் அல்ல.  மாறாக எனக்கு முகம்காட்டாத ஓரத்து வாசகனுக்கான எழுத்தாளன்” என்று என்னைப்பற்றி நான் அடிக்கடி  சொல்வதுண்டு. அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எழுத்தாளனும் வாசகனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். “எழுத்து என்பது முத்தம் போன்றது – அதை யாரும் தனியாகச் செய்ய முடியாது. எழுதுவதற்கு எனக்கு வாசகன் தேவை” என்று ஜான் ச்சீவர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. படைப்பை உருவாக்கிய படைப்பாளியே அது குறித்த தரநிர்ணயங்கள் உருவாக்குவதும், அதனடிப்படையில் தன் படைப்புகளைச் சிறந்தவை என்றும், பிறரின் படைப்புகள் தரம் தாழ்ந்தவை என்றும் பித்தலாட்டங்கள் செய்வது தமிழிலக்கியப் பிரதேசத்தில் சர்வசகஜமாக நடைபெறுகின்றன. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஒரு கோட்பாடாகத்தான் வாசகமைய விமர்சனம் என்பதை நான் முன்வைக்கிறேன்.”

இவ்விடத்தில் நா.வே.அருள் இன் குறிப்பொன்று நினைவு கூரத்தக்கது: “தமிழ் இலக்கிய உலகில் இந்திரன் முன்வைத்திருக்கும் வாசக மைய விமர்சனம் என்பது முக்கியமானது.  அது ஓர் விமர்சகன் அதிகார மையமாக மாறுவதிலிருந்து தனது விடுதலையை வாசகன் மூலம் அடைந்து விடுகிற இலக்கிய விடுதலை எனலாம். படைப்பாளி தனது எழுத்தின் மீது வன்முறைச் செலுத்தி வாசகர்களைத் தன் அதிகாரத்திற்கு அடிபணிய வைக்கிற ஆபத்தை நிகழ்த்துகிறபோது ஆய்வு மைய விமர்சனம் படைப்பாளியின் அதிகாரத்தை அடையாளம் காட்டுகிறது. தரிசன விமர்சன முறை அல்லது ரசனை விமர்சன முறை மூலம் படைப்பாளியின் அதிகாரத்தைக் கட்டமைக்கிற போது வாசகன் வாசக மைய விமர்சனத்தின் மூலம் எதிர்கொள்ள முடியாமல் திணறுகிற வாய்ப்புண்டு.  அப்போதுதான் ஆய்வு மைய விமர்சனத்தின் மூலம் ஒரு தேர்ந்த திறனாய்வாளன் வாசகனுக்கு ஆயுத உதவி செய்கிறான். பாசிக்கு அடியில் ஒளிந்திருக்கும் மீன்களைப் போல வெவ்வேறு அர்த்த அடுக்குகள் பிரதியின் அடியில் சஞ்சரிக்கின்றன.  பளிங்கு நீரோட்டமான மேல் மட்டத்திலிருந்து உள் பாய்ந்து பாசிகளுக்கு அடியிலிருக்கும் மீன்களை விரல்களின் மூலம் வெளிக் கொண்டு வருகிறான் ஆய்வு மையத் திறனாய்வாளன். வாசக மைய விமர்சனமும் ஆய்வு மைய விமர்சனமும் இலக்கியத்தின் இரண்டு கண்கள்.”

‘ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு’ நூலிலுள்ள ஆறுகட்டுரைகளைப் பற்றி விமர்சன பூர்வமான கருத்துக்களை விரிவாகவும் தெளிவாகவும் பல்வேறு தேடல்மிக்க கருத்தியலோடும் முன்வைத்துள்ள இந்த உரை பின்வருமாறு முடிகின்றது. “இந்நூல் மாணவர்களின் கல்வித் தேவைக்காக எழுதப்பட்டதென்கிறார்  ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி). ஆனால் இது படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும்கூட உகந்தது என்பது என் அபிப்பிராயம். ஏற்கனவே முதலாம் பகுதியில் வாசக மைய விமர்சனம்பற்றி எழுதியது இதற்காகவேதான். அது ஒரு புதிய வாசிப்பையும், தானே ஒரு முடிவைக் கண்டடையும் வெளியையும் வாசகனுக்கு அளித்திருக்கிறது. அதன்படி சில ஆண்டுகளின் முன்பாக தமக்குப் பிடித்த சிறுகதைகளையும், அவை ஏன் தமக்குப் பிடித்தனவென்ற விபரிப்பையும் செய்த தொகுப்பொன்று ‘சாளரம்’ என்ற பெயரில் வந்திருந்தது ஞாபகம். கால இடைவெளி நீண்டிருந்தும் அதன் நீட்சியாக இந்நூலைக் காணலாம்.

வாசிப்பினை ஆழமாகச் செய்யாமல் அபிப்பிராயங்கள் இல்லை. ஆழமான வாசிப்பிலும் தன் அரசியல் கலவாமல் அபிப்பிராயம் பிறவாது. சுவையை அடிப்படைத் தேவையாக்கும்போதுதான் அவற்றினை ஓரளவு கடந்த நல்ல வாசிப்பு உண்டாகிறது. எனில் அதை முன்நிபந்தனையாக விதிக்கும் புதிய அம்சம் சேர்ந்ததாய் இருக்கிறது ஏ.எச்.எம்.நவாஷின் (ஈழக்கவி) பகுப்பாய்வு.”

இது ‘அபிப்பிராயம் ஓதும்’ வெறுமையான ஒரு உரைக்கட்டு அல்ல. உரையாடல் பாணியில் எழுதப்பட்ட உயிர்ப்பான விமர்சனம்; நுணுக்கமான ஆய்வு. மிக நேர்த்தியாக கூரிய பார்வையோடு இந்த விமர்சனத்தை  தேவகாந்தன் எழுதியிருக்கிறார். இந்த விமர்சனம் தேவகாந்தனின் விமர்சன நோக்குநிலையையும், ஒரு பிரதியை நுண்ணய உணர்வோடு வாசித்து, கிரகித்து அந்த பிரதியின் தாற்பரியத்தை வெளிப்படுத்துகின்ற திறனை எடுத்துக்காட்டுவதவும் அமைந்திருக்கின்றது. இது ‘தாய்வீடு’ (ஜுன் 2020) இணைய இதழில் வெளிவந்து, ஒலிவடிவம் (Youtube) ஆகியிருக்கிறது. ‘தேவகாந்தன் பக்கம்’ (devakanthan.blogspot.com/ 2020/06/blog-post.html) இணையப் பகுதியிலும் இதனைக் காணலாம். தற்போது இக்கட்டுரை “காற்று மரங்களை அசைக்கின்றது” (2021 மாசி; பக். 205-214) என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. ‘ஆறு சிறுகதைகள் ஒரு பகுப்பாய்வு’ நூல் பற்றி தேவகாந்தன் எழுதிய விமர்சனத்தை பல முறை ஒலிஅலைகளில் செவிமடுத்து, பல முறை வாசித்தலின் உந்தலாக, ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலை பற்றி சற்று விரிவாக எழுத விழைகிறேன்.

 

2

“1968இல் ‘ஈழநாடு’ தேசிய நாளிதழின்

ஆசிரிய குழுவின் பிரவேசத்துடன் தீவிரம் கொள்ளும்

தேவகாந்தனின் படைப்பு முயற்சிகளுக்கு

அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாறுண்டு.

இவற்றில் பல சாதனைகளாகவும் ஆகியுள்ளன.”

-    நூலின் பின் அட்டை

 

       ஶ்ரீ தேவகாந்தன் என்ற ஆசிரியரிடம்தான் நான் தமிழ் கற்றேன். அவர் ஒரு எழுத்தாளர். அழகான கையெழுத்து அவருடையது. அவர் தமிழ் கற்பித்த அணுகுமுறைகளின் பிம்பங்கள் என் ஆழ்மனக்கரையில் இன்னும் அலையாக எழுகின்றன. எண்பதுகளின் நடுக்கூற்றில் அவர் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து விட்டார். அவரது படைப்புகளை சஞ்சிகைகளில் கண்ணுற்றேன்.  ‘ஶ்ரீ’ ஐ நீக்கிவிட்டு, ‘தேவகாந்தன்’ பெயரில் எழுதுகிறாரோ? என்ற நினைப்பில் அவரது படைப்புகளை படித்துவந்தேன். அவரது ஆக்கங்களின் வீச்சு என்னை பிரமிக்கவைத்தது. என் ஆசானின் எழுத்துக்கள் என்ற பெருமிதமும் இருந்தது. ஆனால் தற்செயலாக படிக்கக் கிடைத்த ஒரு நாவலின் மூலமாக இந்த ‘தேவகாந்தன்’ என் ஆசான் அல்ல என்பதனை தெரிந்துக்கொண்டேன். இப்படித்தான் தேவகாந்தனின் எழுத்துக்களில் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது.

       தேவகாந்தன் (1947; சாவகச்சேரி) இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து,  கனடா தொராண்டோவில் வசிக்கும் தீவிர இலக்கியப் படைப்பாளி. நாவல் (உயிர்ப் பயணம், விதி, லங்காபுரம், கதாகாலம், கனவுச்சிறை,  யுத்தத்தின் முதலாம் அதிகாரம், உயிர் பயணம், நிலாச்சமுத்திரம், கலிங்கு), குறுநாவல் (எழுதாத சரித்திரங்கள், திசைகள்), சிறுகதை (காலக்கனா, இன்னொரு பக்கம், நெருப்பு), உரைவீச்சு (ஒரு விடுதலைப் போராளி), கட்டுரை, விமர்சனம் (எதிர்க்குரல்கள், காற்று மரங்களை அசைக்கின்றது) என பல பரிமாணங்களில் அவரது படைப்புகள் பரிணமிக்கின்றன. சிற்றிதழ், சினிமா, தொலைகாட்சி என அவரின் கலைமுயற்சிகள் விரிவு கண்டுள்ளன. 1968-1974 வரை ஈழநாடு  நாளிதழில் பணி புரிந்தவர். 1984 முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழக இலக்கிய ஆளுமைகளுக்கூடாக, தன்னுடைய எழுத்தாற்றலை வளப்படுத்திக்கொண்டவர். இலக்கு (தமிழ்நாடு), கூர் (கனடா) ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.  தன்னுடைய ‘அடையாளத்தினை’ தேவகாந்தன் பின்வருமாறு ஒரு நேர்காணலில் (வ.ந.கிரிதரனின் ‘பதிவுகள்' இணைய இதழ்: “தேவகாந்தன்”) பிரகடனப்படுத்தியிருக்கிறார்: “னது முதல் படைப்பு வெளிவந்த காலத்துக்கும், அண்மையில் நான் முடித்திருக்கும்  ‘கந்தில் பாவை’க்குமிடையே சுமார் அரை நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கிறது. இந்த  இடைவெளியை என் வாசிப்பும் அனுபவமும் பூரணமாக தன் படிமுறையான வளர்ச்சியில் நிரவி வந்திருப்பதாகவே  நான் நினைக்கிறேன். அதுபோல்  இலக்கியத்தின் நோக்கம், தன்மைகள்பற்றிய என் பார்வை மாறாமலும், அதேவேளை இன்னும் தீவிரப்பட்டும்  இருப்பதாகவே  எனக்குத் தோன்றுகிறது....  ஒரு தீவிர வாசகனாக இருக்கும் நான், தொடர்ந்த எனது படைப்பாக்க முயற்சிகளில் புதிய தளங்களைக் கண்டடைகிற அதேவேளையில், அவ்வாசிப்பினூடாக புதிதாக என்னை வார்த்தும் கொள்கிறேன். அதனால் எனது எந்தப் படைப்பையுமே இன்றைய வாசிப்பில் பூரணமானதென என்னால் சொல்லிவிட முடியாதிருக்கிறது. நான் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் என்பதன் அடையாளமும் இதுதான்.”

 விட்கின்ஸ்டைன் (Wittgenstein)) என்ற நவீன மெய்யியலாளர் தன்னுடைய ‘ட்ரெக்டேட்டஸ்’ (Tractatus Logico- Philosophicus; 1921) என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

“சாத்தியமாவதற்கு இன்னும் பின்னால் நான் நிற்கின்றேன். ஏனெனில், என்னுடைய சக்தி சொற்பமானது. இந்தவேலை பூர்த்தியடைவதற்கு மற்றவர்கள் வந்து இதனை இன்னும் சிறந்த முறையில் செய்ய வேண்டும். ஆணியின் தலையில் அடிப்படப்படத்தான் அதற்கு பெறுமதி அதிகரிக்கும்” ((Tractatus Logico- Philosophiicus; Translation: D.F.Pears; New York; 1963; Page: 3,4).

 

3

“காற்று மரங்களை அசைக்கின்றதென்ற தலைப்பு,

காற்றின் விசைக்கேற்ப மரங்கசையுமென்னும்

இயல்பான பொருளோடு

நூல்களின் கனதிக்கேற்ப வாசக இதயங்கள்

அதிர்வு கொள்கின்றன என்ற

அர்த்த வியாப்தியையும் தன்னுள்ளாய்க் கொண்டிருக்கிறது.”

-    நூலின் பின் அட்டை

 

       தேவகாந்தனின் தீவிர வாசிப்பின் அடையாளத்தினையும், அவரது தேடலின் விரிந்த தளத்தினையும், ஒரு படைப்பாளியின் விமர்சனக் குரலையும் முனைப்பாக வெளிப்படுத்துகின்ற ஒரு நூல்தான் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ என்ற ‘பத்தி’ விமர்சன நூலாகும்.  ‘ஜீவநதி’ பதிப்பகம் (கலைஅகம், அல்வாய்) இந்நூலினை 2021 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்துள்ளது. ‘ஜீவநதி’யின் 180ஆவது வெளியீடாகும். ‘ஜீவநதி’யின் பதிப்புத் துறை வளர்ச்சியையும் நூலாக்க செய்நேர்த்தியையும் இந்நூல் நிரூபித்துநிற்கின்றது. நூலின் பக்கங்கள் 276 ஆகும். பெருந்தொகை பிரதிகளை இந்நூல் விமர்சன பேசுபொருளாக்கியுள்ளது. பகுதி ஒன்றில் 45 பிரதிகளும், பகுதி இரண்டில் 8 பிரதிகளும் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ‘பத்தி’ எழுத்துக்களாக மட்டுமன்றி, நூல் மதிப்பீடுகளாக, மதிப்பீடே விமர்சனங்களாக, விரிவு கொண்ட கட்டுரைகளாக பரிமாணம் கண்டுள்ளன. ஒரு படைப்பாளி இன்னுமொரு படைப்பை அல்லது பிரதியை எவ்வாறு உள்வாங்குகிறான் என்பதையே இந்நூல் உணர்த்துகின்றது. ஒரு பிரதியை கூர்மையான அவதானிப்போடு வாசித்து, தன்னுடைய நோக்குதலை தேவகாந்தன்  பிரக்ஞையோடு துல்லியமாக்கியுள்ளார். நூலின் அணிந்துரையில் தி.செல்வமனோகரன் (விரிவுரையாளர், யாழ். பல்கலைக் கழகம்)  முன்வைத்துள்ள கருத்தொன்று அவதானிக்கத்தக்கது: “கலாசிருஷ்டியாளர் ஒருவரின் கலை பற்றியும் கலைப்படைப்புப் பற்றியும் தன் சிந்தையில் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்களின் விசாலத்தை இப்புனைவு சாரா எழுத்துக்களின் வழி அறிய முடிகின்றது. இவ்வெழுத்துக்கள் மதிப்பீடுகளாக, உரையாடல்களாக, வாசிப்புக்களாக, ‘பத்தி’ எழுத்துக்களாக தனக்கே உரிய கருத்தியற்றளத்தினின்றும் தேவகாந்தன் எழுதிய விமர்சனங்கள். இவற்றில் அவரின் கருத்தியல் பலகோணங்களில் திரட்சியுற்று காட்சிக் குரியதாகிறது. அந்தக் காட்சியைக் காண ‘ஐயம், திரிபு, விகற்பம் – முற்கற்பிதம் அற்ற மனம்’ எமக்குத் தேவைப்படுகிறது. படைப்பாளியின் அகவுலக சஞ்சாரங்களை, கனவுகளை, கற்பனைகளை மெய்மை வாத குறிப்பான்களை இனங்கண்டு – வாசகனுக்கும் இனங்காட்டி தன் கருத்தியலை தெளிவுற, சுருக்கமாக எளிமையாக தேவகாந்தன் தந்துள்ளார்” (vii, viii).

4

“ஒரு நல்ல நாவல் எழுதுவதைவிட

ஒரு நல்ல சிறுகதை எழுதுவது மிகக் கடினமானதொன்று என

ஆங்கில விமர்சகர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்.

சிறுகதையானது எழுத்துருவில் வார்ப்பட்ட பிறகுகூட

அது செதுக்கிச் செதுக்கிச் செம்மையாக்கப்பட வேண்டும்.”

-    பக். 64

 

‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூல் பத்து சிறுகதைத் தொகுப்புகளை பற்றி ஒன்பது பத்திகளில் விமர்சன உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. நிரூபாவின் ‘சுணைக்கிறது’, தாட்சாயணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’, குமார்மூர்த்தியின் ‘குமார்மூர்த்தி கதைகள்’, கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’, ம.தி.சாந்தனின் ‘13905’, காஞ்சனா தாமோதரனின் ‘மரகதத் தீவு’, எஸ்.எல்.எம்.ஹனீபாவின் ‘மக்கத்துச் சால்லை’, வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் ‘முதுசொமாய்’, ‘தொலையும் பொக்கிஷங்கள்’ என்பனவே அவையாகும்.

“பிரதி மொழியால் தாங்கப்படுவது என்பான் ரோலன் பார்த். ‘சுணைக்கிறது’ சிறுகதை மொழியால் தாங்கப்பட்டிருக்கின்றது. பேச்சு மொழியின் வலு அது. ஆனால் அது செம்மொழியின் வீறார்ந்தும் அவ்வப்போது வெளிப்பாடடையும்” (03) என்னும் அடிப்படையில், ‘பேச்சு மொழியின் வீரியத் தோடும், பாசாங்குத் தனமற்ற வெளிப்பாட்டுத் திறனோடும் கடந்த இரண்டு ஆண்டுகளுக் கிடையில் வெளிவந்திருக்கின்ற நூல்களில் முக்கியமானது நிரூபாவின் ‘சுணைக்கிறது’ சிறுகதைத் தொகுப்பு” (01) என்கிறார் தேவகாந்தன். இத்தொகுப்பின் பேச்சு மொழியின் வீரியம் பற்றியே உதாரணங்களுடன் விதந்துரைத்து விளக்கியிருக்கிறார். பத்தியை தனக்கே உரிய ‘தனித்துவ முத்திரை’யுடன் பின்வருமாறு முடிக்கின்றார்: “’சுணைக்கிறது’ நூலைப் புரிந்துக்கொள்ள கொஞ்சம் வாசிப்புப் பயிற்சி அவசியம். கடிதம் படிக்கத் தெரிந்த, கனடா வாரப் பத்திரிகைகளைப் படித்துப் பழக்கமான சுளுவோடு இதை வாசித்துப் புரிந்துவிட முடியாது. அல்லது ரமணிசந்திரன் மாதிரியான வாசிப்புப் பழக்கமும் உதவிசெய்யாது. இலக்கியம் தனி வாசிப்புக்கானது. அதற்கு முயற்சியும் பயிற்சியும் அவசியமான கூறுகள்” (04). இப்பத்தி 2007இல் எழுதப்பட்டிருக்கின்றது.

“காலகாலமாக வரலாற்றில் இடம்பெற்று வந்திருந்த மோசடிகள் மற்றும் மறைப்புகளை, பின்னால் எழுந்த சில இலக்கிய முயற்சிகள் தோலுரித்து அம்பலப்படுத்தியுள்ளதை இந்நேரத்தில் எண்ணிக்கொள்ள முடிகிறது. இலக்கியத்தின் புனைவுத் தன்மை மூலமாகவே விடுபட்ட வரலாற்றின் சில பக்கங்கள் மீளக்கண்டடையப்பட்டன என பின்நவீனத்துவ விமர்சகர் கூறுவர். Alternative History என்ற ஒரு வகைப்பாடே இலக்கியத்தில் உண்டு. இதுபற்றி மிகச் சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன. அதன் விவரணம் வாசிப்பு சூழ்நிலையை சார்ந்ததும் ஆகும். வாசிப்போனின் அனுபவம் ஒரு கூறாக, வாசிப்பின் சூழ்நிலை இன்னொரு கூறாக பிரதியின் அர்த்தமும் பயனும் அமையும் என்பது பொதுப்புத்தியிலும் விளங்கக்கூடியதே. ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ சிறுகதைத் தொகுதியின் வாசிப்பு, ஒரு மகத்தான அவலத்தை என் முன் நிறுத்தியது. அந்த உணர்வையும், அதன் மூலமாக இலக்கியப் பிரதியொன்று பதிவேடாக ஆகியிருக்கிற தன்மையையும் எடுத்துக்காட்டுவதே இந்த உரைக்கட்டின் நோக்கம்” (42) என்கிறது தேவகாந்தனின் இவ்வுரைக்கட்டு. “ராணுவத்தால் விடப்பட்ட பகுதிகளிலிருந்து எழும் அவலங்களின் இலக்கிய சாட்சியம்” ஆக இத்தொகுப்பை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சில நல்ல கதைகளையும், சில சுமாரான கதைகளையும் கொண்டு (64) மொத்தமாய்ப் பதினெட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’ தொகுப்பு. ‘முன்னுரையிலும், அணிந்துரையிலும் சொல்லப்பட்டது போல் உளவியல் சார்ந்த, பெண்ணியம் சார்ந்த கதைகளின் தொகுப்பென்பதெல்லாம் சும்மா. படைப்பாளி இக்கதைகளின் கலாரீதியான அம்சங்களைத் தன் வரும் படைப்புகளில் முன்னெடுத்தால் ஈழத்தமிழ்ச் சிறுகதைக்குப் பலம் சேர்க்கமுடியும்’ என இப்பத்தியை முடிக்கின்றார் தேவகாந்தன். இப்பத்தியில் சிறுகதைக்குரிய பண்புகள் துல்லியமாக துலக்கப்பட்டிருக்கின்றன.

‘குமார்மூர்த்தி கதை’களை முன்வைத்து, ‘படைப்பு, படைப்பாளி, படைப்பாளியின் இயங்குதளம் குறித்த விசாரணை’யாக்கியிருக்கிறார். ஜுலை 30, 2011இல் தேடல் சார்பிலான குமார்மூர்த்தி நினைவரங்கில் வாசிக்கப்பட்ட பிரதியே இது. சற்று விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகும். இத்தொகுப்பு இருபத்தைந்து கதைகளினைக் கொண்டது. குமார்மூர்த்’தியின் ‘சப்பாத்து’ என்ற சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெறவில்லை என்பதனைச் சுட்டி, 26 கதைகளின் விமர்சனத்தை இங்கு முன்வைத்துள்ளார். புனைவுத்திறன் சார்ந்து ஒவ்வொரு சிறுகதையினதும் நுண்தளத்தை பிரக்ஞைப் பூர்வமாக அவதானித்திருக்கிறார். ‘மொத்தத் தமிழ்ப் பரப்பிலும் வெளியான கதைகளில் இன்றும் என்னைப் பிசைந்துகொண்டிருக்கும் ஒரு சிறுகதை மலேசிய எழுத்தாளர் இளஞ்செழியன் எழுதிய ‘பாக்கி’ ஆகும். அது செய்த பாதிப்புப்போல் தமிழ்ச் சிறுகதைகளில் ஓர் அனுபவத்தை நான் அடைந்ததில்லையென்று துணிந்து சொல்லமுடியும். அந்தக் கதைக்கு பின்னாலேயாவது வரக்கூடிய வலு கொண்டது குமார்மூர்த்தியின் ‘இறுதி அத்தியாயம்’. தன்னளவில் சிறுகதையாகக் கட்டமைத்து, முடிவுறும் கணத்திலும் ஒரு பாதிப்பனை நிகழ்த்திய இக்கதையை ஈழ புகலிட இலக்கியப் பரப்பினுள் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகக் குறிப்பிட எனக்குத் துளியேனும் தயக்கமில்லை’ (79) என்கிறார் தேவகாந்தன்.

கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பை, ‘இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரின் மூலமும் இயங்குவிதங்களும்’ என்ற பார்வைக்கூடாக துலக்கியுள்ளார். ‘பின்நவீத்துவ அலையொன்று தமிழ் இலக்கியப் பரப்பில் வீசிய காலத்தில் புரிந்தும் புரியாமலும் மொழிநடையிலேயே நம் படைப்பாளிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். அது ஒருவகையில் அதுவரை காலத்தில் மரபார்ந்தும், அலுப்பை ஏற்படுத்துவது மான நடையிலிருந்து வாசகனுக்கு ஒரு விடுதலையை அளித்தது மெய்யே. ஆனாலும் மொழியை எவ்வாறேனும் பினைந்துபோட்டு கதையை உருவாக்கும் விஷயத்தில் பிரேம் மற்றும் ரமேஷ்போல வெற்றிகண்டவர்கள் மிகக் குறைவு. அவ்வகை மொழிநடையைக் கையாளுவதில் மிகுந்த அவதானம் தேவை. கருணை ரவியின் ஏனைய கதைகள் பலவும் நடைரீதியாக தேறியுள்ள வேளையில், ‘கடவுளின் மரணம்’ மட்டும் அவதான இழப்பின் அடையாளங்களை நிறையவே கொண்டிருக்கிறது. ஆனாலும் அக்கதையே மண்ணுள்ளிருந்து வெளியே வந்து நுணுந்திக்கொண்டு கிடக்கும் ஒரு மண்ணுண்ணிப் பாம்புபோல சிந்தனையை அலைக்கழிப்பதாயும் இருக்கிறது’ (82). இவ்வாறான அணுகலில் இக்கதைகள் பற்றி அலசப்பட்டிருக்கிறது.

ம.தி.சாந்தனின் ‘13905’ சிறுகதைத் தொகுப்புபற்றி பின்வருமாறு எழுதத் தொடங்குகின்றார்: ‘ம.தி.சாந்தன் என்றபெயரைப் பார்த்ததும் தெரிந்ததுபோலத் தோன்றாவிட்டால் சாந்தன் என்றுமட்டும் கொண்டுபாருங்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவரில் ஒருவரை அப்போது சுலபமாக ஞாபகங்கொள்ள முடியும். அவரின் இச்சிறுகதைத் தொகுப்புபற்றி எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்றுகூடத் தெரியவில்லை. அந்த நூலும் தமிழ்ச் சமூகத்தின் பிரக்ஞைக் குளத்தில் வீசப்பட்ட ஒரு கல்லாகத்தான் இன்றுவரை கவனமிழந்து கிடக்கிறது’ (87).

‘மரணதண்டனை பெற்ற ஒரு சிறைக் கைதியாக மரணத்தையும், பின் மேன்முறையீடுகளின் விசாரணைக்குக் காத்தும், விசாரணையின் எதிர்மறை முடிவுகளின் பின் மறுபடி மரணத்தையுமென தன் மரணத்தைமடியிலே கட்டிக்கொண்டு ஒரு பயமும் அவலமுமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர், தான் வாழ்ந்ததின் அடையாளத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்துவதற்கு வேறு வெளி தெரியாது, நிறைய வாசிக்கவும் பின் எழுதவுமான நிலைக்கு சென்றிருந்தாரென்றாலும் தன் படைப்புக் கணத்தை ஒரு மரணபயம் கடந்த இயல்பு நிலையில் நிகழ்தியிருக்கிறார் என்பது சாதனை’ (88, 89).

‘புகலிட இலக்கியத்தின் தன்மையைத் துல்லியப்படுத்தும் தொகுப்பு’ என காஞ்சனா தாமோதரனின் ‘மரகதத் தீவு’ பிரதியை அடையாளப்படுத்தியுள்ளார். புகலிட புனைவுகளாக இச் சிறுகதைகள் அமைந்துள்ளன. தேவகாந்தன் குறிப்பிடுவது போல, ‘ புகலிட எழுத்து என வருகையில் அதன் திசையை துல்லியப்படுத்தும் விதமாகவே இத்தொகுப்பிலுள்ள ஐந்து கதைகளும் தென் படுகின்றன. இந்தவகையில் இது புகலிட இலக்கியத்திலும் முக்கியத்துவம் பெறவேண்டிய தொகுப்பாகிறது. மேலும் காஞ்சனா தாமோதரனின் நவீன தமிழின் ஆற்றல் வாய்ந்த மொழிப் பிரயோகம் இத்தொகுப்பின் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு’ (102).

‘முஸ்லிம் மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை’ எஸ்.எல்.எம். ஹனீபாவின் ‘மக்கத்துச் சால்வை’ நூல் நிதர்சனத்தில் வைக்கிறது என்கிறார். ‘தமிழகத்தின் சிறந்த மார்க்சீயத் திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி.பாணியில் கதைகளைத் தனித்தனியாக சுருங்கக் கூறி விமர்சனம் செய்வது இந்நூலைப் பொறுத்தவரை அவசியமில்லை என்று கருதுவதால் மக்கத்துச் சால்வைபற்றி சில வார்த்தைகளை மட்டுமே முன்வைப்பதாக இப்பத்தி குறிப்பிடுகின்றது. ‘எஸ்.பொ.வின் முன்னுரை கண்டதும் நெய்த நூலிலும் தைத்த நூல் வலிதாகிவிடுமோ, காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்ததுபோல பாரமாகிவிடுமோ என்று நினைத்தேன். ஆயினும், எஸ்.பொ.வின் முன்னீட்டைத் தாங்கக் கூடிய அளவுக்கு தொகுப்பு பலமாகவே உள்ளது’ (136) என்ற தேவகாந்தனின் கணிப்பு சரியானதே.

வதிரி இ.ராஜேஸ் கண்ணனின் முதுசொமாய், தொலையும் பொக்கிஷங்கள் ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை, ‘மனத்தில் அசரீரியாய் ஒலிக்கிறது காலத்தின் சுருதிபேதம்’ என அவதானித்துள்ளார். இப்பத்தியில் இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றி முக்கியத்துவம் மிக்க கருத்தொன்றினையும் எடுத்தியம்பியுள்ளார். “இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வருகையோடு தான் ஈழத்தமிழிலக்கியம் தனக்கான பாதையில் நடைபோடத் தொடங்கியதென்பதை விடவும், அது அடையாளம் காணப்பட்டதே அதன் பின்னர்தான் என்கிற அறிகை, இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியதே. ஆனாலும் தனக்கான ஒரு இலக்கிய முறைமையை, தனித்துவத்தை உருவாக்கிக் கொண்ட பின்னரும், வளர்ந்தும் கைவண்டியில் நடக்கிற பிள்ளைபோல அது தொடர்ந்தும் ஆரம்பப் புள்ளியிலேயே நின்றுவிடுவது வளர்ச்சிக்கானதல்ல. ராஜேஸ்கண்ணனின் கதைகள் யதார்த்தமானவை. அவையும் மிக எளிய பதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவை புதியதடத்தில் செல்லவில்லையென்பதை சொல்லியே ஆகவேண்டி இருக்கிறது” (151).

 

5

       “காதல் என்கிற மனமெய் உணர்வு

எங்கேயும் எப்போதும் அழகானது.

சரித்திரம் அவ்வாறான வியக்கத்தக்க

காதல்களைக் கொண்டிருக்கிறது மெய்யாகவே.

ஆனாலும் அதன் சாரம், நவீன மனோதத்துவ,

தத்துவ ரீதிகளில் அணுகப்படும் நாவல்களினால்

பிழிந்தெடுத்து முன்வைக்கப்படுகிறபோது,

மனம் வாசகப் பரவசம் கொண்டுவிடுகிறது.”

-    பக். 15

 

‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்.  ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே.  பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது.  அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன்.  என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”.

       “1986இல் வெளிவந்த எனது முதல் நாவலான 'உயிர்ப் பயணம்', அது வெளிவந்த காலத்தில் என்னைப்போலவே எனது வாசக நண்பர்களையும் திருப்திப்படுத்தியிருந்ததை இப்போது என்னால் நினைவுகொள்ள முடிகிறது. ஆனால் இன்றைக்கு அந்த நாவலின் பலஹீனமும் குறைகளும் எனது அவதானத்துக்கும் வருகின்றன. அன்றைக்கு எண்ணியிருந்ததுபோல அதை ஒரு நாவலாக இன்று என்னால் கொண்டுவிட முடியாதிருக்கிறது. முக்கியமான சில நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேனென்கிற வகையில், எனது சொந்த நாவலான 'உயிர்ப் பயணம்' பற்றிய மதிப்பீட்டில் நான் தயக்கம் காட்டிவிடக் கூடாது. அதை ஒரு நெடுங்கதையாகவோ குறுநாவலாகவோதான் இன்றைக்கு என்னால் கருத முடிகிறது. அதீத உணர்வுச் செறிவுள்ள பாத்திரங்களைக் கொண்டதாகி, இலட்சியவாத உரையாடல்கள் உள்ளதாகவும் ஆகியிருந்தது. நாவலுக்கு அந்தத் தன்மை பேரிடர் விளைப்பது. மேலும் அது நாவலுக்கிருக்கவேண்டிய பல்பரிமாண உள்ளடுக்குகள் அற்று ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுமானமும் ஆகியிருந்தது. உரையாடற் சிக்கனத்திலும் போதிய கவனத்தை நான் காட்டியிருக்கவில்லை.” (பார்க்க, வ.ந.கிரிதரனின் பதிவுகள்' இணைய இதழ்: “தேவகாந்தன்”) தேவகாந்தன் தன்னுடைய படைப்புகள் பற்றி (மனம் திறந்த) இவ்வாறான விமர்சன மதிப்பீடுகளைக் கொண்டிருப்பவர். எனவே ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலிலுள்ள நாவல்களைப் பற்றிய பத்திகளில் அவரே குறிப்பிடுவது போல, ‘நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு’ எழுதியிருக்கிறார்.

       எடுத்துக்காட்டாக, ஷோபாசக்தியின் ‘ம்’, உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ ஆகிய நாவல்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களிலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு தொட்டுக் காட்டுகிறேன்:

1.1  ஷோபா சக்தியின் ‘ம்’ பெரிய எதிர்பார்ப்புக்களை விளைவித்ததோடு அடங்கிப் போய்விட்ட ஒரு நூலாகவே இது எனக்குத் தெரிகிறது. ஒரு ஏமாற்றத்தையே நான் உணர்ந்தேன் என்பது மிகையான பேச்சில்லை. கொரில்லா பாதித்ததில் பாதியளவு கூட ‘ம்’ செய்யவில்லையென்பதைச் சொல்லித்தானாக வேண்டியிருக்கிறது. மொழியும், மரபும் மீறயெழும் இவ்வகையான நவீன பிரதிகளையும் ஒழுங்கான ஆய்வுக்குட்படுத்த முடியும்.... (11)

1.2  ‘கொரில்லா’ தீவான மொழியின் அத்தனை அழகையும் வீறையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வந்திருக்க, ‘ம்’ ஒரு செயற்கை மொழியில் உருவாகியிருக்கின்றதெனவே எனக்குக்குப் படுகிறது... ‘ம்’ விகாசமெடுக்க முடியாமல் தனக்குள் முனகுவது வாசகனுக்குத் தெளிவாகவே கேட்கிறது. ஒரு நாவலின் கட்டுக்கோப்போடு ‘ம்’ வரமுடியாதுபோயிருக்கிறது. அது வெறும் சம்பவங்கயாய்க் குறுகிப்போது என்பதே இறுதியான முடிவாகிறது... 12)

1.3  புனைவு எங்கே தோற்கிறதெனில் அது அடையவேண்டிய எல்லையை அடையாமற்போகிற இடத்திலிருந்து தொடங்குகிறதெனலாம். ‘ம்’ முக்கு நேர்ந்த சோகம் இவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது... (14)

2.1 நாவல் என்ற முத்திரையோடு வெளிவந்திருப்பினும் நாவல், குறுநாவல் என்ற எந்தவித    வகைமைப்பாட்டினுள்ளும் அடங்காது, சில சம்பவங்களின் சேர்த்தியான ஒரு நீண்ட கதையென்பதே சரியான இதன் அடையாளமாகும். ‘மூன்றாம் சிலுவை’ சொல்லுகிற செய்தி, அந்தச் செய்தியின் பின்னணியான நிகழ்வுகளைவிடவும், நூல் கொண்டிருக்கக்கூடிய கட்மைப்பின் விஷயங்களே முக்கிய மானவை. இதன் கட்டமைப்பு பலஹீனமானது என்பதோடு, இதிலுள்ள கவிதைகளின் சேர்த்தியும், நாட்குறிப்பின் மூலமான நிகழ்வுகளின் தெரிவிப்பும்கூட எதுவித நன்மையையும் செய்துவிடவில்லை. Epilestary கதைக் களமாகவும் ஆகவில்லை. இதை ஒரு நாவலாக்கும் அத்தனை முயற்சிகளும் இதில் தகர்ந்தே கிடக்கின்றன.... (45)

2.2 வயது இடைவெளி அதிகமான உறவுகள் தமிழிலக்கியத்தில் பேசப்பட்டது இதுவே முதல் முறையும் அல்ல. ஜெயகாந்தனின் ‘கருணையினால் அல்ல’, ‘சமூகம் என்பது நாலு பேர்’ போன்ற குறுநாவல்கள் தொட்ட தூரத்தை இதுவரை தமிழில் வேறு எந்த இலக்கியவடிவத்திலும் இவ்விஷயம் தொடப்பட்டிருப்பதாக என் வாசிப்பு அனுபவம் எனக்குக் காட்டவில்லை. மார்க்வெய்ஸின் Memories of my Melancholy Whores உம் ஜே.எம்.கோட்ஸீயின் Disgrace உம் நாவல்களில் காட்டிநின்ற உடலுறவின்பாற்படும் காதலுறவின் விவகாரங்களை நாம் ரசித்து ரசித்து வாசிக்க முடியும். அத்தனைக்கு அவை இலக்கியமாக்கப்பட்ட அற்புதங்கள். ஆனால் ‘மூன்றாம் சிலுவை’ உள்ளடக்கக் கனதியற்ற வெறும் உடலுறவின் அதிதீவிர உணர்ச்சி விளைச்சலை மட்டுமே காட்டிநிற்கிறது... (46)

       இத்தகைய கறாரான விமர்சனக் குறிப்புகள் வெங்கட் சாமிநாதனை நினைவூட்டுகின்றன. ஆனால் வெங்கட் சாமிநாதனிடம் மேலோங்கி நிற்கும் ‘விதண்டாவாதம்’ தேவகாந்தனிடம் துளியளவும் இல்லை. தேவகாந்தனிடம் எப்பவும் நேர்த்தியான நடுநிலைச்சார் விமர்சன நேர்மையே துளிர்க்கிறது. இதற்கு இந்நூலே சிறந்த எடுத்துக்காட்டாகும். ‘மூன்றாம் சிலுவை’யை கடுமையாக விமர்சிக்கின்ற தேவகாந்தன் தமிழ்நதியின் ‘கானல்வரி’ நாவலை மிகுந்த அவதானத்துடன் அணுகியுள்ளார். ஒரு பெண் படைப்பாளியினால் இத்தனை வெளிப்படையாக காம உணர்வுகள் வரிப்படுத்தப்பட்ட படைப்பு என்ற வகையில் ‘கானல்வரி’ முக்கியமானது என்கிறார். இந்நாவலின் முக்கியத்துவத்தை இவ்வாறு எடுத்துச்சொல்கிறார்:

       “கடிதங்களில் கதையும் உணர்வுகளும் பின்னப்பட்ட நாவல்கள் உலக இலக்கியத்தில், தமிழலும் நிறைய உள்ளன. தன்னிலையில் கதைவிரித்த நாவல்களும் உள. ஆனால் ஒற்றைக் கடிதத்தில் உணர்வையும், கதையையும் இழுத்துச்சென்று கச்சிதமாக முடித்த படைப்பு இதுவொன்று என்றே சொல்லக்கிடக்கிறது. இது ஒரு முன்மாதிரியெனில், இந்த முன்மாதிரிப் படைப்பை இதற்காகவே முக்கியத்துவப்படுத்த முடியும். மேலும், ஒரு களவு அல்லது ஒரு கொலைப்பாட்டில் நேரடியான சமூக நியாயங்கள் தலையிட்டிருக்காததுபோல, இப்படைப்பு தனி மூவரின் காதலும் காமமுமான நிகழ்வாகமட்டும் ஆகியிருக்கவில்லை. இந்த அத்தனை நிகழ்வுகளையும் சமூகம் தன் விரித்த கண்களால் பார்த்துக் கொண்டிருப்பதை உணரும் வண்ணமாகவே படைப்பு நடத்தப்பட்டிருப்பது இதிலுள்ள இன்னொரு சாதனை” (97).

       2009இல் வெளிவந்திருக்கும் இப்படைப்பு அடங்கிய வரிகளில் சொல்லியிருக்கும் அர்த்தங்கள் ஏராளம். பெண்ணிலைப் பார்வைக்கும்கூட சார்பாகவும், மாறாகவும் பல விடயங்கள் இப்படைப்பில் உண்டு. இதுபற்றி பெரிதான பிரஸ்தாபம் இல்லையென்பது தமிழிலக்கிய வாசகப்பரப்பினது பிரக்ஞையின் ஆரோக்கியமின்மையையே எடுத்துக்காட்டுகின்றது (98) என்கிறார்.  “கானல் வரி’ எனக்குப் பிடித்த நாவல்” என்று ஒரு நேர்காணலில் தேவகாந்தன் குறிப்பிட்டதை  இப்பத்தியில் நிறுவிக் காட்டியுள்ளார்.

       சயந்தனின் ‘ஆறாவடு’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’, தமிழ்கவியின் ‘ஊழிக்காலம்’, தேவிபாரதியின் ‘நட்ராஜ் மகராஜ்’, பஷரத் பீரின் ‘ஊரடங்கு இரவுகள்’, சுகுமாரின் ‘பெருவலி’ ஆகிய நாவல்களைப்பற்றி சற்று விரிவாக எழுதியுள்ளார். சந்ரா காலன்டின் ‘The Many Sorrows of Josephine B’ என்ற ஆங்கில நாவலைப்பற்றி சுவைப்பட எழுதியுள்ளார். கப்ரியேல் கர்சியா மார்கவெய்ஸின் LOVE IN THE TIME OF CHOLERA என்ற ஆங்கில நாவலை, ‘இது வேறுவிதமான காதலும் வேறுவிதமான காமமும்’ என்ற அடிப்படையில் அணுகியுள்ளார். அமரந்த, சிங்கராயர் மொழிபெயர்த்த ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்ற ஆபிரிக்க நாவலை பற்றிய எழுத்து பத்தியாக அன்றி விரிவான கட்டுரையாக அமைந்துள்ளது. க.நா.சு மொழிபெயர்த்த பேர் லாகர்க்விஸ்ட் என்கிற சுவீடிய எழுத்தாளரின் ‘பாரபாஸ்’ என்ற நாவலை ‘ஆன்மீகம் – நாத்தீகம் இரண்டுக்குமடையிலான ஓர் உசாவலாக அமைந்த நாவல்’ என்ற நோக்கில் அவதானித்து எழுதியுள்ளார்.

       “நாவல் இவ்வாறு முடிவடைகின்றது: ‘இன்னும் உயிர் இருந்தது அவனுக்கு. அவன் ஆயுள்பூராவும் பயந்து நடுங்கிய சாவு நெருங்கியதை உணர்ந்தும் அவன் சுற்றி சூழ்திருந்த இருட்டைப்பார்த்து, அதனிடம் பேசுவகிறமாதிரி சொன்னான், ‘என் ஆத்மாவை உனக்கு அளித்து விடுகிறேன்.’ பிறகு அவன் செத்துப்போனான்”

       மொழிபெயர்ப்பு குறித்தும், நவீன இலக்கியம் குறித்தும் மூலமொழிப் புனைவின் வலிமை குறித்தும் மட்டுமல்லாமல், இலக்குமொழி மாற்றத்தில் அடையக்கூடிய உச்சங்கள் குறித்துமான விஷயங்களில் தன்னை முதன்மையானதாய் தமிழ் மொழிபெயர்ப்புகளில் தன்னை முன்னிலைப் படுத்தி நிற்கிறது பிரதி. முடிந்தால் வாசித்துப்பாருங்கள் (181) – என முடிகிறது இப்பத்தி. இது 2007 இல் எழுதப்பட்டுள்ளது.      

6

“சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், ஔவை

போன்றவர்களுடைய கவிதைகளின் பாடுபொருளைவிட,

கி.பி.அரவிந்தன், பா.அ.ஜயகரன், திருமாவளன், செழியன்

போன்றோரினதை விடவுமே,

இளங்கோ, தான்யா, பிரதீபா, தமிழ்நதி, ஆழியாள், றஞ்சினி

ஆகிய புதிய தலைமுறையினரின் பாடுபொருள் வித்தியாசமானது.

இன்னும் சரியாகச் சொல்லப்போனால் முன்னையவர்களினதைவிட விரிவானது.

ஒருபொருளிலிருந்து இன்னொரு பொருளாய் சூக்கும மாற்றமுற்றது.”

-    பக். 25

 

“காற்று மரங்களை அசைக்கின்றது’ நூல் எட்டு கவிதை தொகுப்புகளை பத்தி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.. “கவிதையில் ஒரு பூடகமும் உள்ளோடியிருப்பது நல்லது. நான் புரியாத் தன்மையைக் குறிக்கவில்லை. மர்மம் அல்லது மாந்திரீகப் பயன் படுத்துதல்கள் பற்றிக் கூறவில்லை. இந்தப் பூடகம் ஒரு இடைவெளியாகவுமிருக்கலாம். வாசகனின் தன் அனுபவப் பொருத்தலுக்கானது இந்த வெளி. அதுதானே முக்கியம். கவிஞன் தன் அனுபவத்தை வாசகனுடன் பகிர்கிறானென்றில்லை. கவிதையே அனுபவமாகவேண்டும் என்பதுதான் என் கட்சி. அதற்கானவைதான் கவிதையின் இடை வெளிகள். இது தெரியாததால்தான் எல்லாவற்றையும் சொல்லப்போய் அழகிய கவிதைகள் கெடுகின்றன” (பக். 06) என்று கவிதை பற்றி தன் புரிதலை சொல்லுகின்ற தேவகாந்தன், “மு.புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ (05-10) கவிதை நூல் குறித்து பேசுகையில் பின்வருமாறும் குறித்துள்ளார்: “மீண்டும் வரும் நாட்கள் என்ற நீண்ட கவிதை, கவிதைபோல் தன்னைக் காட்டிக் கொண்டிருப்பினும் கவிதையாக மாற இழுவாணிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அனுபவத்தை வாசகன் அடையவே முடிவதில்லை. ஆயினும் அது கவனத்துக்குரியதே..... கட்டுமானம் நன்றாயும் வாசல் பிழைத்தாயும் சில வீடுகள் அமைந்திருப்பதில்லையா, அதுபோல் என்று வைத்துக்கொள்ளவேண்டியதுதான் (பக். 10).

இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ (24-29)  கவிதை நூலை “எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை” என்ற தலைப்பில் விபரிக்கிறார்.. “இது அழுத்தமாகக் காட்டிச் செல்லும் புதிய செல்நெறியால் கவனம் மிகப்பெறுகிறது. புலம்பெயர்ந்தோர் கவிதை தன் மரபோடு, தன் புதிய புலத்தின் கவிதைத் தன்மையை உணர்கிறதும், உள்வாங்குகிறதுமான காலகட்டமொன்று இயல்பில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறதை இத்தொகுப்பில் முக்கியமாகக் காணக் கிடக்கிடந்தது” (24) என்கிறார் தேவகாந்தன்.

மு.பொ.வின் ‘பொறியில் அகப்பட்ட தேசம்’ (30-33) என்ற கவிதை தொகுப்பை ‘மூலம் சர்வதேசியமாய் விரிந்த தமிழ்க் கவிதைப் பரப்பு’ என்று நுண்ணிதாக நோக்கியுள்ளார். இளவாலை விஜயந்திரனின் ‘நிறமற்றுப் போன கனவுகள்’ (38-41) நூல் பற்றிய பத்தியில் முழுமையாக கவிதை பற்றியும் ஈழகவிதைகளின் போக்கு பற்றியுமே அலசியுள்ளார். கவிதை பற்றிய நல்ல கருத்தியல்களை இப்பத்தியில் காணமுடிகின்றது. கவிதையை ஆய்வுக்காக மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள  முடியும். முதலாவதை political embience என்று கூறலாம். இங்கு கவிதையை இலேசுவில் கண்டடைந்துவிட முடியாது. கவிதை ஓடி ஒளிந்து விளையாடும். நிற்பதுபோலத் தோன்றும், ஆனால் நிற்காது. இல்லைப்போல் தெரியும். ஆனால் சட்டென எங்கிருந்தோ வந்து தோன்றிவிடும். ஈழத்தின் சமீபகால கவிதைகளின் பொதுத்தன்மை இதுவெனக் கூறலாம். அடுத்த பகுப்பினை Political Function குறியீட்டு வாதம், மீமெய்வாதம், படிமவாதம், தொன்மவாதம் என்பவை இப்பகுப்பில் அடங்கும். இவை வெவ்வேறு போக்குடையவை. ஆனாலும் ஒரே வழியில் பயணிப்பவை. மொழிச் சேர்க்கையின் சூட்சுமங்கள் இங்கே (Pleasure of madness) நிகழ்துவதும் இங்கேதான். மூன்றாவது பகுப்பினை கவிதை எந்திரம் (Poetical mechine)) எனலாம். இவ்வகைக் கவிதை வாசிக்கும்போதுமட்டும் தோன்றி மறைகின்ற தன்மை உடையதாய் இருக்கும். இவற்றுடன் நாலாவது ஒரு வகையாக தொன்மக் கவிதையியலைச் சொல்லலாம். இது ஆங்கிலத்தில் mitho poetry எனப்படும். மிகவும் மொழிப்புலனுடன் தொடர்புடையது இது. மர்மங்களின் வெளிப்படைத் தன்மை, வெளிப்பாடுகளின் மர்மத் தன்மையென புதிர் நிகழ்வுகளைச் சாத்தியப் படுத்தக்கூடியது இது. இந்நிலையில் ஈழக் கவிதையினை எடுத்துப்பார்த்தால் அவற்றின் வகையினத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது ஈழக்கவிதை பொயற்றிக்கல் எம்பியன்ஸ் எனப்படும் கவிதைமொழிச் சூழல் வகைபற்றியதாக இருப்பது புரியும். ஒரு புதிய தடத்தில், அதுவரை ஈழக்கவிதை தொடாத இடத்தை மிக ஆழமாகத் தொட்டுக்கொண்டு சென்றது. இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில், மண்ணின் அபகரிப்பு ஆட்சியாய் இருந்த சூழ்நிலையில், சுதந்திரத்தைக் காட்சியிலும் காணாதிருந்த வேளையில் அவற்றுக்காகப் பாடினார்கள் கவிஞர்கள். சேரன், சண்முகம் சிவலிங்கம், வஐச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான் என்று ஒரு புதிய வட்டம் அமைந்தது. இவர்களோடு சேர்த்து எண்ணப்பட வேண்டியவரே இளவாலை விஜயேந்திரன் (39, 40) என்கிறார் தேவகாந்தன். ‘பழைய அரசியல் உணர் முறைகளையும் அறிமுறைகளையும் புதிய உணர்முறை நெறிகளின் கவிதைக் குரல்கள்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக சேரனையும், இளவாலை விஜேந்திரனையும் பேராசிரியர் கா.சிவத்தம்பி (ஈழத்து தமிழிலக்கியத் தடம் 1980-2000; 2000: 48) சுட்டுவது இங்கு நோக்கத்தக்கது.

‘ஒலிக்காத இளவேனில்’ (90-93) பெண் கவிதாயினிகளின் கவிதைத் தொகுப்பு. பதினெட்டு கவிஞைகளின் அறுபத்தேழு கவிதைகளைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பு காதலை காமத்தை விடுதலையை அகதியான அவலத்தை மற்றும் மண்மீளும் அவாவையென பல்வேறு விடயங்களை இதில் காணமுடியும். இவற்றில் இருக்கும் தீட்சண்யமும் மூர்க்கமும் முக்கியமானவை. யோனியும் கருப்பையும் முலைகளும் அவற்றின் மேலான ஆணுலகத்தின் அர்த்தமும் அழகியலும் அநாயசமாக இக் கவிதைகள் பலவற்றால் சிதறடிக்கப்படுகின்றன என்கிறது இப்பத்தி (92). புகலிடவெளியில் வாழ்வின் அர்த்தங்கள் அழிந்துபோயிருப்பதை ரேவதியின் ‘சிதிலமடைந்த வாழ்க்கை’ சிறப்பாகச் சொல்லுகிறது. இது ‘சிதிலம்’ என்று மட்டுயான தலைப்பாயிருந்தால் கனதி பெற்றிருக்க முடியும்.

‘நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்வர்கள்

எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை

இன்றைய நிமிடத்தினை வாழ்வுடன்

நாளைய நிமிடத்தை எதிர்கொள்ளவும் தயாராகிறார்கள்

 

குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்

எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

அவை தமது நிமிடத்தினை

வாழ்ந்துவிடவே விரும்புகின்றன’

 

என்று ஓங்கிஒலிக்கிறது, வாழ்வுச் சிதைவின் புள்ளியை மிகவும் கூர்மையாகக் கண்டுகொண்ட ரேவதியின் அவதானிப்பு (91). ‘முரண்படுதலும், கலகமுமாய் பெண் கவிதைச் செல்நெறிக்கு ஓரளவேனும் வலுசேர்க்கும் தொகுப்பு’ என்கிறது இப்பத்தியின் தலைப்பு.

       சிலோன் விஜயந்திரன் தொகுத்த ‘ஈழத்துக் கவிதைக் கனிகள்’ (142-144) நூலில் எண்பத்திரண்டு கவிஞர்களின் நூற்று இருபத்தேழு கவிதைகள் உள்ளன. ‘தன் முழு முனைப்பையும், இதய சுத்தியான முழு ஆர்வத்தையும் ஆசிரியர் காட்டியுள்ள தொகுப்பு’ என்ற அடிப்படையில் இந்நூலை  விமர்சனப்பூர்வமாக விபரிக்கிறார். சோ.பத்மநாதன் மொழிபெயர்த்து தொகுத்து வெளியிட்ட ‘தென்னாசியக் கவிதைகள்’ (153-158) குறித்து ஆய்வுப் பார்வையுடன் அவதானித்துள்ளார். ‘தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன’ என்று பா.அகிலனின் ‘அம்மை’ (215-224) கவிதை நூலை பற்றி விரிவாக தெளிவுறுத்துகிறார்.

 

7

       “தனது விமர்சன முறைமைக்கு மார்க்சீய சித்தாந்தமே

அடிப்படை என்று தி.க.சி. பிரகடனப்படுத்துகிறார்.

       ஆயினும் அவரது விமர்சன அழகு

அவர் தனது சுயரசனையில் தன் சித்தாந்தத்தை வைத்துப் பார்ப்பதும்

சித்தாந்தத்தை ஒரு எல்லையோடு நிறுத்திக்கொண்டு

படைப்பை மட்டும் எடைபோடுவதும்தான்.

இந்த அம்சம் பிற மார்க்சிய விமர்சகர்களான

க.கைலாசபதியிடமோ, கா.சிவத்தம்பியிடமோ,

நா.வானமாமலையிடமோ காண முடியாதது.

அதனால்தான் சிறுகதைத்துறையில்

பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய புதுமைப்பித்தனைவிட

கு.ப.ரா.வை தி.க.சி.க்குப் பிடித்துப்போகிறது.”

-    பக். 140

 

நாஞ்சில் நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, வெங்கட் சாமிநாதனின் ‘கடல் கடந்தும்’, தி.க.சி. இன் ‘விமர்சனத் தமிழ்’, பிரபஞ்சனின் ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’, சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’, ந.மயூரனின் ‘புனைவின் நிழல்’, ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி)இன் ‘ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு’ ஆகிய ஏழு விமர்சன நூல்களை இந்நூலில் உயிரோட்டத்துடன் உசாவியுள்ளார். ஒரு ஆக்க இலக்கியவாதி, படைப்பிலக்கியங்களைப் பற்றி பேசகின்ற நூல்களை எவ்வாறு அவதானித்துள்ளார் என்பதையே இந்த விமர்சன உரையாடல்கள் பிரக்ஞைபூர்மாக உணர்த்துகின்றன. ‘கடல் கடந்தும்’ நூலைப்பற்றி தேவகாந்தன் சொல்லியுள்ள கருத்துக்களை மட்டுமே இங்கு தொட்டுக்காட்ட விரும்புகிறேன். ‘நக்கலும், நளினமும், கிண்டலுமான அவரது (வெங்கட் சாமிநாதன்) விமர்சன முறைமை எனக்கு மிகமிகப் பிடிக்கும்’ (125) என்கிறார் தேவகாந்தன். நேர்காணல், விமர்சனம், மதிப்புரை, ஏற்புரையென பதினேழு விடயங்களைக் கொண்ட இந்நூல், புலம் பெயர்தோர்பற்றி, அவர்களது இலக்கியம் பற்றி அதிகமாய் தன் கவனக்குவிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. கனடாத் தமிழர்களின் வாழ்வியலையும், இலக்கிய இயங்கு தளத்தையும், குந்தைவையின் ‘யோகம் இருக்கிறது’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் சோ.ப.வின் ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ என்ற தொகுப்பையும் விஸ்தாரமாகப்பேசும் வெ.சா.,  கோவின்தனின் ‘புதியதோர் உலகம், கே. டானியலின் நாவல்கள் சில, சோபாசக்தியின் ‘ம்’, ‘தேசத்துரோகி’ ஆகியனவும், கலாமோகனின் ‘‘நிஷ்டை’யும் விசாரிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

       ‘ஈழத்தின் தலித் குரல்’ என்ற கட்டுரையில் வெ.சா., கே. டானியலின் நாவல்களை மிக ஆழமாக கவனித்தெழுதியதாக கூறும் தேவகாந்தன், அது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பஞ்சமர் தவிர்ந்த கே.டானியலின் மற்றைய நாவல்களை அவர் இனங்காணும் விதம் அற்புதமானது. அந்த நாவல்களை ‘தமிழில்வெளிவந்த முதல் தலித் நாவல்கள்’ எனப் பிரகடனம் செய்கிறார் வெ.சா. எனினும் தலித் எழத்துக்கள் என்பதற்காக அல்ல. வெ.சா.வின் கவனம் குவிவதற்கான ஒரே காரணம் அவற்றின் இலக்கியத்தகுதியே. கே.டானியல்பற்றி அவர் சொல்லும் கருத்து இலக்கிய வரலாற்றா சிரியர்களால் உற்றுணரப்பட வேண்டும். அக்கட்டுரையில் வெ.சா. கூறுகிறார்: ‘டேனியலின் இலக்கிய வெற்றியின் ரகசியம் அவர் தனக்கு உண்மையாக இருப்பது. இவர் தான் பெற்ற அனுபவங்களையே எழுதுவது. அந்த அனுபவத்திற்கு, வாழ்ந்த வாழ்க்கைக்கு, தான் பிறந்த சூழலுக்கு, தன்னுடன் வாழும், தான் மிகநன்றாக அறிந்த மக்களுக்கு உண்மையாக இருப்பது. எந்த அரசியல் கொள்கைகளுக்கும் தான் ஒரு கருவியாகும் தூண்டுதலுக்கு ஆட்படாமல், தன்னை இரையாக்காமல் இருப்பதும், அவர் அக்கறைகள் தான் எந்த மக்களிடையே பிறந்துவளர்ந்துள்ளாரோ அம்மக்களும், அவர்களின் வதைப்படும் வாழ்ககையும்தான்’” (128).

       ஐராவாதம் மகாதேவன் (I. Mahadevan) நாற்பது வருட ஆய்வுத்தேடலின் பின்னர், வெளிக்கொணர்ந்த பெருநூலே “Early Tamil Epigraphy’ ஆகும். இந்நூலை ‘க்ரியா’ 2003 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்நூல் (Tamil Epigraphy ; From the Earliest Times To the Sixth Century)       அமெரிக்காவின் ஹார்வாட் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயம் பற்றிய தொடர் (Harvard Orintel Series) தொடரிலும் 2003இல் வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டுத் தொடரில் வெளிக்கொணரப்படும் முதலாவது தமிழியல் ஆய்வு இது எனலாம். ‘பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல்’ எனும் தலைப்பில் ‘ஐராவதம் மகாதேவனின் ஆய்வு வெளிக்கொணரும் சில முக்கிய விடயங்கள் பற்றிய ஓர் ஆய்வுக் குறிப்பினை”, பேராசிரியர் கா.சிவத்தம்பி ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ எனும் தமிழ்பெயர்ப்பு நூலில் (குமரன் புத்தக இல்லம்; 2005: xxxvii - Ixxiv) எழுதியுள்ளார். மகாதேவனின் ஆய்வு பற்றிய வெ.சா.வின் அறிமுகவுரையை பிரக்ஞைபூர்வமாக  எடுத்தியம்பியுள்ளார் தேவகாந்தன். ‘குறிப்பிடக்கூடிய கட்டுரை 2003ஆம் ஆண்டுக்கான ஆய்வுப் பரிசினைப் பெற்ற ஐராவதம் மகாதேவனின் ‘ஆரம்பகால கல்வெட்டுக்கள்: தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டுவரை’ என்ற ஆய்வு நூல்பற்றிய அறிமுகவுரை. சலனமற்ற சீரான எழுத்து. இதில் விரிந்த பார்வையில் பட்டதன் கருத்துக்களை சுருங்கிய அளவில் சொல்லியிருப்பதன்மூலம் நூலின் அறிமுகத்தைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளதாய்ச் சொல்லலாம். உரைக்கட்டின் வடிவம் செறிவாக அமைந்து மாதிரியாகக் கூடிய சிறப்பு வாய்ந்து விளங்குகிறது’ (126).

       ‘இந்நூலில் குறிப்பிடத் தகுந்ததாக இருப்பது அவரது நேர்காணல். சிபிச்செல்வன் நேர்கண்டிருந் தார். தன்னைத் தானாக இனங்காணாது பிறக்கும் கேள்விகளுக்கு வெ.சா. தரும் பதில்கள் கோபமும், வேகமுமாய்த் தனிரசனை தருபவை’ (128) என்கிறார் தேவகாந்தன். ஆனால், ‘’சுபமங்களா’ நேர் காணலில் பேராசிரியர் க.கைலாசபதி பற்றி  பின்வருமாறு கூறியுள்ளார்: “... கைலாசபதி நேர்மையற்ற Careerist....” (சுபமங்களா; அக்டோபர் 1995: 12). வெ.சா.வின் கருத்திற்கு தமிழவனும், பேராசிரியர் சி. சிவசேகரமும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். ‘கைலாசபதி நேர்மையற்ற Careerist’ என்று கூறும் பேட்டி வாசகம் இவரது எழுத்து முறையை இனம் காட்டும். ஒருவரை நேர்மையற்ற Careerist என்பது அவரைப் பற்றிய தனிப்பட்ட வசை. அவர் எழுத்து பற்றிய மதிப்பீடு அல்ல. இது பாமரப் பார்வையின் அரைகுறைத்தனம்” (சுபமங்களா; நவம்பர் 1995: 83) என்று தமிழவனும், “கைலாசபதி மீதான வெங்கட் சாமிநாதனது கீழ்தரமான தாக்குதல், கைலாசபதி இன்னும் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை என்று உணர்த்துகின்றது (சுபமங்களா; டிசம்பர் 1995: 58) என்று பேராசிரியர் சி. சிவசேகரமும் குறிப்பிட்டுள்ளனர் (பார்க்க, ஈழக்கவி; பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் : 3; ‘பேராசிரியர் க.கைலாசபதியும் திறனாய்வும்’; 2018: 15).

8

       “தமிழ்த் திரைப்படங்களில் விதூஷகமும், ஆடல்காட்சிகளும்,

கொலைகளும் அதற்கான பழிவாங்கல்களும் தவிர

வேறு விஷயங்கள் இருப்பதாகக் காணப்படவில்லை.

இதுவே வெகுஜன ரசனையாக வளர்க்கப்பட்டிருக்கிறது.

காமம் சொட்டச் சொட்ட பாடல் எழுதக் கூடியவர்

கவிப்பேரரசாக அங்கேதான் கொண்டாடப்பட முடியும்.

இதை மறுக்கிற திரைப்படங்கள் அங்கே உருவாகியிருக்கின்றனதான்.

முன்னதானால் “பாதை தெரியுது பார்’ என்ற திரைப்படத்தையும்,

அண்மையிலானால் ‘பாப்கோர்ண்’ என்ற படத்தையும்

மாதிரிக்களுக்காகச் சொல்லலாம்.

“பாதை தெரியுது பார்’ சில நாட்கள் ஓடியது.

‘பாப்கோர்ண்’ ஒரேஒருநாள் மட்டும் திரையரங்குளில் ஓடியது.

இந்த வயிற்றெரிச்சலை எங்கே போய்ச் சொல்ல?”

-    பக். 263

 

நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் என்று இலக்கியம் சார்ந்த நூல்களை நுண் நயத்தோடு விமர்சன பிரக்ஞைக்கு உட்படுத்திய தேவகாந்தன், இந்நூலில் சினிமா, நாடகம் சார்பான நூல்களையும் அலசியுள்ளமை அவதானிக்கத்தக்கது. சொர்ணவேலின் ‘சினிமா: சட்டகமும் சாளரமும்’ என்ற நூலைப் பற்றிய தேவகாந்தனின் உரைக்கட்டு முக்கியமானது. இந்நூல் வெளிப்படுத்துகின்ற சினிமா சார்ந்த பல கருத்தியல்களை தொட்டுக்காட்டி, எழுதியுள்ள முறைமையை பார்க்கின்ற பொழுது மிக கூர்மையாக இந்நூலை அவர் வாசித்து அவதானித்துள்ளார் என்பது புலனாகின்றது. தேவகாந்தனின் தனித்துவமே இதுதான். அவர் வாசிக்க எடுத்துக்கொள்கின்ற நூல்களை மிக நுட்பமாக நின்று நிதானித்து வாசிப்பதுடன் ஒரு கண்காணிப்பாளராக, மதிப்பீட்டாளராக நின்று மிகக் கூர்மையாக அந்நூலின் உள்ளீட்டை வெளிப்படுத்துகின்றார். ஏழு பக்கங்களைக் கொண்ட இக்கட்டுரையின் முடிவுரை வருமாறு: “இந்நூலின் ரசனைக்கு ஆசிரியரின் சினிமா உலகு சார்ந்த அறிவுப் புலம் மட்டுமில்லை, இலக்கியத்தின் பாலான ஈர்ப்பும் ஒரு காரணமாகிறது. அதனால்தான் பல்வேறு இடங்களிலும் அசோக மித்திரனையும், பூமணியையும், புதுமைப்பித்தனையும்கூட அவரால் தொட்டுக்காட்ட முடிகிறது. ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது தருகிறதென்பது, இதன் கட்டிறுக்கத்தாலும், நடையாலும், சொல்லாட்சியாலும் நிகழ்கிறது. தமிழ்ச் சினிமாவுலகுக்குத் தேவையான ஒரு வரவு இந்நூல் என்பதில் எனக்கு இரண்டாம் அபிப்பிராயமில்லை” (73).

       பகுதி ஒன்றின் மூன்று கட்டுரைகள் நாடகப்பிரதிகள் (ஏகலைவன் : இளைய பத்மநாதன், தீனிப்போர் : இளைய பத்மநாதன், மகாகவியின் மூன்று நாடகங்கள்) பற்றி பேசுகின்றன. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தொகுத்த மஹாகவியின் ‘மஹாகவியின் மூன்று நாடகங்கள்’ (1.கோடை 2. புதியதொரு வீடு 3. முற்றிற்று) பற்றி எழுதுகையில், ‘பாநாடகமானது செய்யுள், வசனம் என்பவற்றைவிட உணர்வு வெளிப்பாட்டுக்கு நன்கமையப்பெற்றது’ என்கிறார். பத்தி எழுத்துக்குள் ஒரு நூலை எவ்வாறு வாசகத்தன்மையில் இருந்தவாறு அவதானித்து அறிமுகம் செய்வது என்பதற்கு இந்த ஐந்து பக்க கட்டுரை அடையாளமாகின்றது.

       இன்றையகாலத் திருக்கும் மனிதர்கள்

       இன்யைகாலத் தியங்கும் நோக்குகள்

       இன்யைகாலத் திருப்புகள் எதிர்ப்புகள்

       இன்றையகாலத் திக்கட்டுகள்.

 

இவையே அறுபதுகளிலிருந்து எண்பதுகள் வரை ஈழத்தில் கவிதை, நாடக ஆளுமையாகவிருந்த மகாகவி என்ற உருத்திரமூர்த்தியின் இலக்கியக் கருதுகோள்களாக இருக்கின்றன என்பதை அவரின் படைப்புகளின் மூலமும் நம்மால் காணமுடிகிறது என்றெழுதி, நாடகம் பற்றிய மகாகவி, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரின் கருத்தை முன்மொழிந்து, தமிழக மேடை நாடக முயற்சிகள் (குறத்திமுடுக்கு, ராமானுஜர், ஒளவை, உபகதை) பற்றி தொட்டுக்காட்டி, மகாகவிக்குச் சமகாலத்தில் முருகையன், நீலாவணன், சொக்கன், ஜீவா ஜீவரத்தினம் போன்றோரும் பாநாடகம் எழுதியுள்ள போதிலும், மகாகவியளவு சமூக எதார்த்தத்தை, யாழ்ப்பாண மண்ணின் மணத்தை பதிவுசெய்தவர் வேறுபேர் இல்லை என்கிறார். பாநாடகம் பற்றி சற்று விளக்கி, மகாகவியின் மூன்று நாடகங்களைப்பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாக துலக்கியுள்ளார்.

       ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலின் இரண்டாம் பகுதி சினிமா, நாடகம், குறும்படம் பற்றியது. இதில் ஏழு உரைகட்டுகள் காணப்படுகின்றன. படைப்பின் மொழியை அறிந்திருக்கின்ற தேவகாந்தன், திரைப்பட மொழியையும் தெரிந்திருக்கிறார். ‘இந்தியாவில் இருந்த போது சினிமாக்காரர்களுடன் நெருங்கிப் பழகி, சினிமாபற்றி உரையாடியமையால் திரைப்பம் பற்றிய  தொழில் நுட்பத்தையும் அவர் அறிந்திருக்கிறார்’ என்கிறார் ரதன். அதனால்தான் ‘ஸ்லம்டோக் மில்லியர்’ சினிமா குறித்து அருமையான ஒரு பத்தியை எழுதியிருக்கிறார். ‘எப்போதும் நல்ல சினிமா குறித்து உரையாடுவதற்கு அரிதாகவேனும் சில நல்ல படைப்பார்த்தமான சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கத்தான் செய்கின்றன. அந்த விரிசையில் இப்போது வந்திருப்பது ‘ஸ்லம்டோக் மில்லியனெர்.’  இச்சினிமா உன்னதம் பெறுகின்ற இடம், இது சினிமாவாகவும், அதே நேரத்தில் ஒரு விவரணப்படமாகவும் உருவாகியிப்பதுதான்’.(233) என்றெழுதியுள்ளார். இந்தியாவின் மும்பை சேறிப்பகுதியின் துயர் சூழ்ந்த அவலம் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வறுமைய கலைத்துவ சினிமாக. காட்டியவர் சத்திஜித்ரே. அவரது படங்களில் கவித்துவ அழகியல் நுட்பமாக இழையோடி மிளிர்ந்திருக்கும். ஆனால் ஜித்ரே இந்தியாவின் வறுமையை வியாபாரம் செய்வதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.   ‘மில்லியனெர்’ திரைப்பட உருவாக்கத்தின்போதே இந்துத்துவ மேலாண்மை வாதிகளின் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இந்தியாவில் தொடங்கப்பட்ட இப்படம், இலங்கையில் எடுத்து முடிக்கப்பட்டது. தனக்கான தனித்துவ பாணியில் தேவகாந்தன் இதுபற்றி எடுத்துரைக்கும் முறைமையும் மொழியும் மனசுக்குள் தொற்றி நிற்கிறது: “மலக்குழியில் மூழ்கியெழுந்தேனும் அன்றைய சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைக் காண, சிறுவனாக இருந்த ஒரு ரசிகன் ஓடுவதாக சினிமா காட்டுகிறது. சினிமா இந்தியாவின் வறுமை சூழ்ந்த குடிசையிலிருப் போரையும் எவ்வாறு பாதித்திருந்தது என்பதை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது சினிமா. இயக்குநரின் நோக்கம் அதுவாக இருக்கவில்லை. அவர் மிக உயர்ந்த ஒரு கனவோடு தன் பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் குரல்கள் எழுகின்றன. இந்தியாவின் வறுமையையும், அழுக்கை யும் நியாயமற்ற முறையில் இயக்குனர் டானி பொய்ஸ் (Danny Boyle) சினிமாவாக்கியிருப்ப தாக. இதில் மிகப் பெரிய குரல் அமிதாப்பச்சனது. இதற்காக ஒருமுறை சிரிக்கலாம். மும்பையில் மதக் கலவவரங்களுக்கு, வெளிமாநிலத்தார் மீதான தாக்குதல்களுக்கு என்றேனும் குறைவிருந்ததுண்டா? அதை கதையோடு ஒட்டி, தேவைக்கு அதிகமாக ஒரு காட்சிகூட சேர்க்காமல் சினிமா முடிவடைந்து விடுகிறபோதே ஓலங்கள் எழுகின்றன, இந்தியாவின் அழுக்கையும் வறுமையையும் பகிரங்கப்படுத்துவதாக” (234, 235).

       தேவகாந்தன் மாபெரிய நாவல்களை எழுதியவர். தொன்மங்களை நாவலாக்கி சாதித்தவர். அதனால் படைப்பு காட்டுகின்ற, சொல்லாமல் சொல்லுகின்ற எல்லா நுட்பவெளிகளையும் துல்லியமாய் அறிந்து வைத்திருப்பவர். அதனால்தான் ஒரு நூலை பல கோணங்களில் அவதானித்தெழுதுகிறார். அதுபோல திரைப்படமொன்றின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராயும் வல்லமை அவரிடம் இயல்பாகவே இருக்கின்றது. ‘ஸ்லம்டோக் மில்லியனெர்’ படத்தின் காதலையும் கூட கவித்துவ அழகியலோடு சுட்டிக்காட்டியிருப்பது நோக்கத்தக்கது.. எண்பத்தோராவது ஒஸ்கார் விழாவில் சிறந்த சினிமாவுக்கான விருது உட்பட எட்டு விருதுகளை இது சுவீகரித்துக்கொண்டு போயிருக்கிறது. இசையமைப்புக்கும், பாடலுக்குமாக இரண்டு விருதுகளை ஏ.ஆர்.ரகுமானுக்குப் பெற்றுத்தந்தந்ததும் இந்தச் சினிமாதான், அண்மைக் காலத்தில் ஒரு நிகரற்ற சினிமாவாக இருப்பதற்கும், விருதுகளை அள்ளிப்பெறுவதற்குமான காரணங்களை வெளிப்படுத்தும் ஊற்றாகவும் இப்பத்தி அமைந்துள்ளது.

       கனடா  ரொறன்ரோவின் ஸகார்பரோ சிலிக் சென்ரரில் நடைபெற்ற (2006) சுயாதீன கலைப்பட இயக்கத்தினரின் ஐந்தாவது தமிழ்க் குறுந்திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட பதினாறு  படங்களிலிருந்து இரண்டு (The Moviei as Name, மறைபொருள்) குறும்படங்களை விமர்சன பத்தியாக்கியுள்ளார். ஒப்பியல் அணுகலுடன் அவர் எவ்வாறு விமர்சிக்கின்றார் என்பதற்கு சில வரிகள் வருமாறு: “படத்தின் (The Moviei as Name) முதற் காட்சியிலேயே மய்யமாக்கப்படவேண்டிய புள்ளியிலிருந்து விலகிப்போய்விடுகிறது கமரா. உரையாடலற்ற ஒரு படத்தில் இந்த மய்யப்படுத்தல் முக்கியமானது. அக்கிரா குரோசவாவின் Rashamon ஐ இப்போது நினைக்க வேண்டும். அதன் முதற்காட்சியிலேயே மழை துவங்கி தவிர்க்கவியலாத குறியீடாகத் தொடர்ந்துகொண்டிருக்கும். அது காட்சியின் விழுமியத்துக்கானதல்ல என்பதை தேர்ந்த பார்வையாளன் அறிவான். அது காலத்தின் குறியீடு. ஆடியடங்கி வல்லமைகொண்டு வாழ்ந்திருப்போரையும்கூட அடங்கிப்போக வைத்துவிடுகிறது காலம். அதைக் குறியீடாக திரைப்படம் முழுக்க நீள விட்டிருப்பார் குரோசவா. இங்கே மய்யமாய்த் தொடர்ந்துகொண்டு இருந்திருக்கவேண்டியது மலர். உலகத்து மொத்த இயற்கையினதும் சிரிப்பு அது. அதைக் காட்டியிருப்பதன் மூலமே பல தளங்களிலும் தரங்களிலும் இருக்கக் கூடியவர்களின் கவனயீனத்தை செறிவுபடுத்தியிருக்க முடியும். இறுதிக் காட்சியல் மலர் மீதான குழந்தையின் கவனயீர்ப்பு இன்னும் அழுத்தமாக விழுந்திட இந்தக் காட்சிமுறை அவசியமானது. ஒரு தொய்வு ஐந்து நிமிட குறும்படத்தில் கெட்ட பாதிப்பினைச் செய்துவிடுகிறது (252).

       ‘சினிமா ஒரு நாட்டின் கலாச்சார வெளிப்பாட்டுச் சாதனம்’ என்னும் அடிப்படையில் கனடாத் தமிழ் சினிமா பற்றி எடுத்துச்சொல்லியிருக்கிறார். பரந்த தேசமான கனடாவில் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளி மிக விசாலமானது’ என்று தொடங்கி, “நாம் எதைச் சொல்லவருகிறோம் என்ற தீர்க்கம், எப்படிச் சொல்வது என்கிற உத்தி, அதை வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணம் இல்லாவிட்டால், இப்பரந்தவெளித் தேசத்தில் தமிழத் திரைப்பட வரலாறு மங்கியேதான் இருக்கப்போகிறது’ என இப்பத்தியை முடிக்கிறார்.

       பா.அ.ஐயகரனின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’, அ.மங்கையின் ‘பனித் தீ’, பி.விக்னேஸ்வரனின் ‘ஒரு பொம்மையின் வீடு’ ஆகிய நாடகங்களைப் பற்றி விமர்சனகூர்பார்வையோடு எழுதியிருக்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி நாடங்கள் பற்றி நல்லபல விமர்சனங்களை செய்திருக்கிறார். ‘மண் சுமந்த மேனியர்’ நாடகம் பற்றி அவரெழுதிய விமர்சனம் (மல்லிகை ; ஆகஸ்ட் – செப்டம்பர் 1985: 56-60) குறிப்பிடத்தக்கது. ‘ஒரு பொம்மையின் வீடு’ நாடகம் பற்றி ஒரு விரிவான விமர்சனத்தை தேவகாந்தன் முன்வைத்திருக்கிறார். ‘கலையால் மழை தந்த நாட்டிய நாடகம்’ என்ற கட்டுரையின் தொடக்க வரிகள் கட்டுரையை ஆணிஅடித்தாற் போல் அமர்ந்து தொடர்ந்து வாசிக்கத்தூண்டுகின்றது: “நாட்டிய கலாலயத்தின் பொன்விழாவையொட்டி ‘தமிழ்: வென்றெழும் தொன்மொழி’ (Thamizh Resillence of the oldest Language) என்ற நிகழ்வு மார்க்கம் தியேட்டரில் கடந்த 14ஆம் திகதி (ஆடி 2018) மாலை 6.30 மணிக்கு மேடையேறியிருந்தது. மனதைச் சிலிர்க்க வைத்த ஒன்றரை மணிநேர நிகழ்வு அது. அதன் பிரதியாக்க (Script)த்திலும் பொருண்மை (Concept)யின் தேர்விலும் நடன அமைப் (Choneograph)யிலுமென நுண்ணிய சில அம்சங்களை கவனமாக முடித்திருந்தது. தமிழ் என்ற சொல்லிலிருந்து வியாபித்தெழுந்த அதன் வென்றெழுததலின் தீர்க்கம் நிகழ்வு முழுக்கப் பரந்திருந்தது. காட்சிகளின் சிறப்புக்கு ஓவியர் மருதுவினது கைத்திறனும் பின்னணியில் இருந்திருக்கிறது. தொல்காப்பியன், இளங்கோவடிகள், சிவனும் விஷ்ணுவும், சோழப் பேரரசன் ஆகிய ஓவியங்கள் நிகழ்வையும், சிறுவிவரண நூ(Brochure) லையும் மிகவும் அழகும் அர்த்தமும் படுத்தியிருந்தன. காட்சிகளின் பிரமாண்டத்துக்கும் மிக்க உறுதுணையாய் இருந்தன அவை” (248).

 

9

“எள்ளலும் குசும்பும் வெளிப்படும் மொழிநடை;

தன்மையில் எழுதப்பட்ட இவ்வெழுத்துக்கள்

ஆழ்மனப்பதிவுகளாகவே விளங்குகின்றன.

அவரின் கலை மனக்கிடங்கில் கொட்டிக்கிடக்கும்

கருத்தியல்களின் சிதறல்களாகவே

இவ்வெழுத்துக்கள் காணப்படுகின்றன.”

-    பக். ix

 

‘இமயமலையின் பல சிகரங்களை அடைவதற்கு வழிகாட்டிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் மலைப் பயணங்களின் பல இரகசியங்களை தங்கள் உள்ளே புதைத்து வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் துணையினால் பெரும் பனிப் புயல்களை மீறிப் பயணங்கள் சாத்தியமாகி இருக்கின்றன.  மலைப் பயண வழிகாட்டிகள் பயணங்களின் அகராதிகள்.  அவர்களைப் பயன்படுத்தி சாகசப் பயணங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  அப்படியே பொருந்தாது எனினும் இலக்கியத் திறனாய்வாளர்கள் பல விதமான மொழித் திறப்புகளையும் பிரதிகளின் சாத்தியப் பாடுகளையும் அடையாளம் காட்ட வல்லவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களின் வரைபடம் நிச்சயமாக ஒரு புதிய பிரதேசத்தை அறிமுகப்படுத்தும்.  அந்த வரைபடமே முடிவானது என்று சொல்ல முடியாவிடினும், அது பல புதிய பிரதேசத்தை அடைவதற்கு வாசகர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.   பிரதியின் மூடுண்ட பிரதேசத்தை நோக்கி நம்மை நகர்த்தினாலும் கூட பரிமேலழகர் உரை வழியாக திருக்குறள் என்கிற பிரதியின் தெரியாத வாசற் கதவுகள் தெரிய ஆரம்பித்தன அல்லவா?’ (நா.வே.அருள்: இணையம்). அப்படித்தான் தேவகாந்தனின் ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ புத்தகமும்.

ahmnawas@gmail.com

 நன்றி: பதிவுகள்.கொம்,

               ஜீவநதி இதழ்

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்: