நதிமேல் தனித்தலையும் சிறுபுள் (மதிப்புரை ) டி.சே.இளங்கோ
தேவகாந்தனின், 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'
---------------------------------------------
1.
பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது வாசிப்பதற்கு நாவல்கள் எங்களுக்கு இருந்தன. ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் என்னைப் போன்ற 'புலம்பெயரி'களுக்கு அந்த நாவலின் சூழல், பாத்திர வார்ப்புக்கள் எல்லாமே முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன. அதனால் பல நாவல்களை 'சும்மா' எழுந்தமானமாய் விருப்பின்றியே வாசித்திருக்கின்றேன். அன்றையகாலத்தில் வாசித்த Great Gatsby,
To Kill a Mockingbird, Lord of the Flies போன்றவை மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.
எனக்குத் தெரிந்த நகரை, எனக்குப் பரிட்சயமான வாழ்வை, என்னைப் போன்ற மண்ணிற மக்களின் கதைகளைச் சொல்பவர்களாக, எம்.ஜி.வாஸன்ஜி, ஷியாம் செல்வதுரை போன்றவர்களைப் பிறகு கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போன்ற பாத்திரங்கள் இவர்களின் நாவல்களில் இருக்கின்றார்களேயென, அவர்களை நெருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் தொடர்ந்து தேடித்தேடி வாசிக்க எனக்கு முடிந்திருந்தது.
தமிழிலும் முற்றுமுழுதாகப் புலம்பெயர்ந்த வாழ்வைச் சொன்ன புதினங்கள் என்று பார்த்தால் அரிதாகவே இருக்கும். அதுவும் இலட்சக்கணக்காய் தமிழர்கள் வாழும், நான் வாழும் ரொறொண்டோ நகரின் பின்னணியில் நிகழும் கதைகளைச் சல்லடைபோட்டுத்தான் தேடவேண்டியிருக்குக்கும். அப்படி ஒரு விதிவிலக்கான புதினமாக தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' வெளிவந்திருக்கின்றது.
இலங்கையில் ஒரளவு வசதியாக மனைவி மங்களநாயகியுடனும், மூன்றுபிள்ளைகளுடன் இருக்கும் சிவப்பிரகாசம் கனடாவுக்குத் தனியே புலம்பெயர்கின்றார். அவரைக் காசுகட்டிக் கூப்பிட்ட உறவினர்கள், அவரைச் சுரண்டுவதைக் கண்டு தனியே சென்று வாழத்தொடங்கின்றார். அப்படியே இருந்தபடியே மனைவியையும், பிள்ளைகளையும் கனடாவுக்கு ஏஜென்சி மூலம் எடுப்பிக்கின்றார். அவர்கள் சிங்கப்பூரில் கொஞ்சக்காலம் சிக்கிக்கொள்ள, எப்போது அவர்கள் வருவார்களென்ற உற்சாகத்துடன் முதலில் எதிர்பார்த்திருந்த சிவப்பிரகாசம், இனி எப்போதாவது வரட்டுமென காலத்தின் மீது பழியைப் போட்டுக் காத்திருக்கின்றார்.
ஒருமாதிரி மங்களமும், அவரின் 3 பிள்ளைகளும் கனடாவுக்கு வந்தாலும், அவர்கள் தான் இலங்கையிலிருந்து விட்டு வந்த குடும்பம் அல்ல என்பது புரிகிறது. மங்களமும் கனடா வந்த கொஞ்சக் காலத்திலேயே சிவப்பிரகாசத்தை எல்லாவிடயங்களிலும் முந்திச் செல்கின்றார். சிவப்பிரகாசத்துக்கு இதையெல்லாவற்றையும்விட தனக்கான காமத்தை மனைவி தீர்ப்பதில்லையென்ற கவலை இருக்கிறது. மங்களமோ அந்தக் காமத்தைத் துருப்பாகக் கொண்டே சிவப்பிரகாசத்தை மேவி மேவிச் செல்கின்றார். ஒருநாள் காமம் தறிகெட்டலைய, ஒரு முக்கிய விடயத்தைக் காரணங்காட்டி மங்களம் விலகிப்போக, சிவப்பிரகாசம் வன்முறையைப் பாவிக்கின்றார். அது பெருத்து, பிள்ளைகள் பொலிஸைக் கூப்பிட்டு, சிவப்பிரகாசத்தால் பொலிஸால் இனி வீட்டுக்கு என்றென்றைக்குமாய்த் திரும்ப முடியாது போகின்றது.
சிவப்பிரகாசத்துக்கு திரும்பவும் தனிமை வாழ்க்கை. அதன் பிறகு அவர் தன் வாழ்வில் இரண்டு பெண்களைச் சந்திக்கின்றார். ஒரு பெண்ணோடு அவருக்கு விரும்பிய காமம் கிடைக்கின்றது. ஆனால் அந்தப் பெண்ணின் மகனின் வடிவில் உறவு சிதைகின்றது. இன்னொரு பெண்ணோடோ வாசிப்பின் நிமித்தம் நட்புக் கனிந்து, நல்லதொரு உறவு முகிழும் சந்தர்ப்பத்தில் வேறொரு சிக்கல் வருகின்றது.
2.
நாவலில் நதி ஒரு முக்கிய படிமமாக வந்தபடியே இருக்கின்றது. ஸ்காபரோ ரூஜ் நதியினோடு அதன் வரலாறு பூர்வீகக்குடிகளிலிருந்து சொல்லப்படுகின்றது. நதிகளே இல்லாத இலங்கையின் வறண்ட ஊரிலிருந்து வந்த சிவப்பிரகாசத்துக்கு நதியோடு இருந்தலென்பது பேரனுபவமாக இருக்கிறது.
இந்த நாவலை, சிவப்பிரகாசம் சந்திக்கும் மூன்று பெண்களும், அவர்களினூடாகத் தன் வாழ்வைத் தரிசிக்கும் சிவப்பிரகாசமும் அவரின் தனிமையும் என்று ஒரு சுருக்கத்துக்காய்ச் சொல்லிக்கொள்ளலாம். சிவப்பிரகாசத்தின் வாழ்வினூடாக ரொறொண்டோ மாநகரில் தமிழரின் 90களுக்குப் பின்பான வாழ்க்கையின் குறுக்குவெட்டைப் பார்க்கமுடியும்.
சிவப்பிரகாசம் ஒரு பெண்ணோடு போய் வாழ்ந்துவிட்டார் என்பதற்காக முகங்களைத் திரும்புகின்ற உறவுகளும், நண்பர்களும், அதே சிவப்பிரகாசம் தன் மனைவியின் மீது முன்னர் வன்முறையைப் பிரயோகிக்கும்போது, எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பது நாவலின் சற்று விசித்திரமான பகுதியெனத்தான் சொல்வவேண்டும். ஒருவர் தனக்குப் பிடித்த ஒருவரோடு வாழ்வதற்கு ஏன் முகத்தை இந்த மக்கள் திருப்பிக்கொள்ளவேண்டும்? உண்மையில், அவர் வன்முறையைத் தன் துணையின் மீது பாவித்திருக்கின்றார் என்பதற்கு அல்லவா முகத்தைச் சுழித்திருக்கவேண்டும்.
சிவப்பிரகாசம் தன் இயலாத்தன்மைகளை அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், ஒருபோதும் பிற பெண்களை விளங்கிக்கொள்ள முடியாதவர் போன்றே, நாவலை வாசிக்கும்போது தெரிகிறது. அவர் அந்தக் காலத்தைய மனிதருமல்ல. அவருக்கு மூன்றாவதாக ஒரு பெண்ணோடு உறவு வரும்போது அவர் 60களின் மத்தியில் இருக்கின்றார்.
ஒரு பெண்ணோடு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை முடிவதில்லையென பிற பெண்களைத் தேடும் (அது பிழையுமல்ல) சிவப்பிரகாசத்துக்கு பெண்கள் தமது சொந்தக்காலில் சொந்த விருப்பில் எப்போதோ தமது வாழ்வை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை அறியாதிருப்பது சற்று வியப்பாய்த்தானிருக்கின்றது.
அதுபோலவே தனது காமக்கிறுதிகளை விளங்கிக்கொள்ளவில்லையென தன் மனைவி மீது வன்முறையைப் பாவிக்கின்ற சிவப்பிரகாசத்துக்கு, இன்னொரு தமிழ்ப்பெண்ணான வின்ஸி, அவரை மொன்றியலில் சிவப்பிரகாசம் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே காமத்தைத் திளைக்கக் திளைக்கக் கொடுக்கின்றவராக இருக்கின்றார். ஆக சிவப்பிரகாசம் அவ்வளவுமீறி வெட்கப்படும், காமமா ச்சீய் என்கின்ற அந்தக் காலத்தைய ஆசாமியும் அல்லவென வாசகர்க்கு விளங்கிவிடுகின்றது.
ஆனால் அதே சிவப்பிரகாசம், காமத்திலும் காதலிலும் திளைக்க நல்ல வாய்ப்பிருக்கும் கிநாரியை அணுக அல்லது கிநாரி அவரை அணுகுகின்றபோது மட்டும், திருப்பவும் அந்தப் பழைய காலத்து ஆள்போல நடந்துகொள்ளும்போது வாசிக்கும் எங்களுக்கு சற்று எரிச்சலும் பொறுமையின்மையும் வருகிறது. வின்ஸிக்கு ஒரு மகன் இருக்கின்றபோதும், அந்த உறவுக்குப் போகத் தயார் நிலையில் இருக்கும் சிவப்பிரகாசம், கிநாரி என்கின்ற ஆர்மேனியப் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கின்றாள் என்பதை அறியும்போதும், அவளைக் கனடாவுக்குக் கூப்பிடவேண்டும் என்கின்றபோதும் அவருக்குள் ஒரு விலகலும் தயக்கமும் வந்துவிடுகின்றது ஏன் என்பது எமக்குப் புரிவதில்லை.
இத்தனைக்கும் சிவப்பிரகாசத்துக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அத்தோடு கிநாரியின் மகள் பதினெட்டு வயதுக்கு அண்மையாக இருப்பவளும், அவளுக்கென்று காதலனும் வைத்திருப்பவளும் கூட. அவள் கனடா வந்ததன்பின், தாயோடு இருக்கும் காலம் கொஞ்சமாகவே இருக்கும். மகளைக் காரணங்காட்டி கிநாரியும், சிவப்பிரகாசமும் உரையாடுகின்ற இடமெல்லாம் ஒருவித நாடகீயத்தன்மையாகவே தோன்றுகின்றது.
ஏனெனில் 55 வயதிலும், 65 வயதிலும் இருக்கும்போதாவது ஒரு இணை தமது முதுமையைப் பற்றியும், தமக்கான துணைகளைப் பற்றியும் பேசாது, மகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி தமக்கான உறவுக்குத் தடுப்பாணை போடுவார்களோ என்றே யோசிக்க முடிகிறது.
நாவலின் இன்னொரு பலவீனமாக, சிவப்பிரகாசம் மனைவி மங்களத்துக்கு அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபின், தன் பிள்ளைகளை ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதேயில்லை. ஒரே நகரத்திலே வாழ்ந்தபடி இருக்கும் சிவப்பிரகாசம், தனது பிள்ளைகளைக் கண்டு பேசவேண்டும், பழகவேண்டுமென்று ஒருபோதும் ஆசைப்பட்டிருக்கவே மாட்டாரா? ஸ்காபரோ சிவிக் சென்ரரில் ஒரு இலக்கியநிகழ்வில் பங்குபெற வரும் சிவப்பிரகாசம் தற்செயலாக அருகிலிருந்த அங்காடிக்குள் தனது வளர்ந்த மகனை ஒரு வெள்ளைப்பெண்ணொடு காதல் செய்கின்றபோது மட்டுமே பார்க்கின்றார்.
அதற்குப்பிறகு அந்த மகன் அவரின் மூத்தமகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வரும்போது மட்டுமே பார்க்கின்றார். மகனை இரண்டு முறை பார்த்தாரென்றால், அவரது மகள்களை ஒருபோதும் திருப்பிப் பார்க்காதவராகவே இந்த புதினத்தில் சொல்லப்படுகின்றது.
எத்தனையோ நூற்றுக்கணக்கான புத்தங்களைச் சேகரத்தில் வைத்து, வாசிப்பில் பெரும் விருப்புக் கொண்ட ஒரு மனிதர் தனது பிள்ளைகளிடம் கூட கொஞ்சம் கருணை காட்டாவிட்டால் அவர் வாசித்துத்தான் என்ன என்றும் வாசிக்கும் எமக்கும் தோன்றுகின்றது.
3.
இவ்வாறான சில பலவீனங்கள் நாவலுக்குள் இருந்தாலும், சுவாரசியமாக வாசிக்கும் நடையில் தேவகாந்தன் எழுதிச் சென்றிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவரின் கடந்த சில நாவல்களைப் போல பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதாது, இந்த நாவலை நூறுபக்கங்களில் முடித்திருப்பதும் என்னைப் பொருத்தவரை மகிழ்ச்சியானது.
இந்த நாவல் தனிமையும், ஒரு மனிதரின் 'ஆன்மீக'த்தேடலும் என்றாலும், அதைவிட கூடத் துருத்திக்கொண்டிருப்பது சிவப்பிரகாசம் என்கின்ற ஆண் தன்னைத்தானே ஒருவகையில் நியாயப்படுத்திக்கொள்கின்ற பனுவல்போலவே தோன்றுகின்றது. அவர் இந்தநாவலில் சந்திக்கும் இரண்டாவது பெண்ணான வின்ஸி தன் மகனுக்காக சிவப்பிரகாசத்தோடான உறவைத் துண்டித்துவிடும்போதாவது, அவருக்கு தனது பிள்ளைகளின் நினைவு வந்திருக்காதா? தான் எங்கேயோ தவறுவிட்டிருக்கின்றேன் என்று கலங்கியிருக்கவேண்டாமா?
நாவலின் இறுதியில் சிவப்பிரகாசத்துக்கு ஒரு தெளிவு வந்து முகங்கூட பிரகாசிப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. 'எவரது அன்பும் எவரது ஆதரவும் எவரது அரவணைப்பும் அவருக்கு இல்லாமல் போயிருக்கிறது. அது அறுதியான ஒரு தனிமைக்குள் அவரைத் தூக்கி வீசியிருக்கிறது' என்று கூறி 'ஒரு அனுக்கிரகம் ஒளிவெள்ளம்போல் அவரில் வந்து இறங்குகின்றது. அவர் பயணத்தின் திசையும், திசையின் மய்யமும் ஒரு புள்ளியாய் அவருக்குத் தரிசனமாகின்றன' எனச் சொல்லப்படுகின்றது. சிவப்பிரகாசத்துக்கு ஒரு தரிசனம் கிடைத்திருப்பது நல்லதுதான். அந்தத் தரிசனத்தில் அவர் சந்தித்த பெண்களையும், தனது பிள்ளைகளையும் விளங்கிக்கொள்கின்ற ஒரு பகுதியும் சேர்ந்தே நுழைந்திருந்தால் எவ்வளவு நல்லது போல நமக்கும் தோன்றுகின்றது.
தேவகாந்தனின் புதினங்கள் சிலது தொடக்கத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும். ஒரு குதிரையப் போகும் தன்பாட்டில் போகும் எழுத்தை பிறகு ஏதோ ஒருபுள்ளியில் சட்டென்று கடிவாளத்தைப் போட்டு இறுக்கி இழுத்துவிடுகின்றவராய் தேவகாந்தனின் எழுத்தைச் சில இடங்களில் அவதானித்திருக்கின்றேன். எழுத்து எங்கு அழைத்துச் செல்கிறதோ அப்போது கடிவாளத்தைக் கூட தூர எறிந்துவிடவேண்டியதுதான். அப்போதுதான் நாவல் தன்னளவில் தன்னை எழுதிச் சென்று எல்லைகளை மீறிச்செல்வதாக அமையும் எனச் சொல்வேன். இங்கேயும் தேவகாந்தன் நாவலின் மீது ஏறி கடிவாளத்தை இறுக்குகின்ற பல இடங்கள் இருக்கின்றன.
இவ்வாறான சில தடைகளை/இடைஞ்சல்களைத் தவிர்த்துப் பார்த்தால், புலம்பெயர் வாழ்வை - முக்கியமாய் ரொறொண்டோ மாநகரை- அடையாளப்படுத்தும் நாவல் என்றவகையில் இது முக்கியமானது. கொஞ்சப் பக்கங்களில் இந்த நாவலை முடித்ததாலோ என்னவோ நல்ல இறுக்கமான மொழிநடையும் இந்த நாவலுக்கு வாய்த்திருக்கின்றது. தேவகாந்தனைப் போல புலம்பெயர்ந்த தேசத்தில், எழுத்தில் இப்படி முழுமையாகக் கரைந்துகொண்டவர்கள் வெகு அரிதே என்பதால் அவர் மீது ஒருவகை மதிப்பிருக்கிறது. அந்த மதிப்பிருப்பதால்தான் இந்த நாவலைக் கறாராக வாசிக்கவும் வேண்டியிருக்கிறது.
...................................
29நீங்கள், Azhar Omar, Muralitharan Nadarajah மற்றும் 26 பேர்
கருத்துகள்
·
Vadakovay
Varatha Rajan தேவகாந்தனை படிக்கவில்லை என்பது என் துரதிஸ்சடமே .உமது பதிவு நாவலை சிறப்பாக சுருகித் தருகிறது . சந்தோசம்
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 20ம.
Vadakovay
Varatha Rajan பதிலளித்துள்ளார்
·
Vadakovay
Varatha Rajan நாவலை அதன் போக்கில் விடவேண்டும்.அதற்கு கடிவாளம் போடக்கூடாது என்கிற உமது கருத்து எனக்கு உடன்பாடானதல்ல
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 20ம.
·
Noel Nadesan நாவலின் கதைச்சுருக்கம் எப்பொழுது அறிமுகமானது?
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 19ம.
·
Vasan Svs தேவகாந்தனின் ‘கந்தில் பாவையும்’ இந்த நாவலும் இந்த நூற்றாண்டில் எழுதப்படட தமிழ் நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களாக நான் கருதுகிறேன். ஆனால் இவரது எழுத்துக்களை பெரும்பாலோர் கண்டு கொள்வது இல்லை என்பது கவலைக்குரியது . நடைபெற்ற விமர்சன அரங்குகளிலும் இவை சரியான முறையில் விமர்சிக்க படவில்லை.
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 13ம.
·
Vadakovay
Varatha Rajan உண்மைதான் . ஓன்று அவை இலங்கையில் பரவலாக கிடைக்கவில்லை அடுத்து அதன் உச்ச விலை . நானும் இன்னமும் அவரை படிக்கவில்லை.vasan svs
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 13ம.
o · திருத்தப்பட்டது
·
Thiagarajah
Wijayendran அவரது ஒரேயொரு நாவலைத்தான் இதுவரை படித்திருக்கிறேன். முதல் வாசிப்பில் மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்தியது. அவர் தன்னையும் தன் படைப்புகளையும் "விற்கத்" தெரியாத ஒருவர். அதனால்தான் அதிக கவனம் பெறாமல் இருக்கிறார்.
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 11ம.
·
Elanko DSe Vadakovay Varatha Rajanஉங்களின் சமகாலத்தவரையே நீங்களே வாசிக்காவிட்டால், அடுத்த தலைமுறையாகிய நாங்கள் எப்படி வாசிக்கப் போகின்றோம், அவை குறித்து உரையாடப்போகின்றோம். தேவகாந்தனின் பெரும்பாலான புனைவுகளை வாசித்திருக்கின்றேன். அதுகுறித்து விருப்புக்களும், விமர…மேலும் பார்க்கவும்
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 11ம.
o · திருத்தப்பட்டது
·
Rajaji
Rajagopalan Devakanthan Bala எழுதித்தள்ளும் வேகம் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவர் தன்னை அடக்கி வாசிப்பதால்தான் இவரின் எழுத்து அதிகம் பேசப்படாமல் போகிறதோவென்ற சந்தேகம் எனக்கும் உண்டு.
இளங்கோ தொடர்ந்து நம்மவர்களின் எழுத்தை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது எனது இன்னொரு விருப்பம்.
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 9ம.
·
Lakshmi Chitoor
Subramaniam Who is the publisher Elanko DSe?
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 7ம.
·
Naguleswaran
Kajeepan என்னதான் புலம்பெயர் தேசத்தில் எத்தனை ஆண்டுகளாக வசித்து வந்தாலும் நாம் அதே பிற்போக்குத் தனம் நிரம்பிய யாழ்ப்பாணத்தவர்கள்தான் இளங்கோ.
அதனால் தான் ஒருவன் பெண்ணைத் தாக்கும்போது அதை ரசித்துக் கொண்டும், அதே ஒருவன் பெண்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளும்போது அதை ஏதோ தீண்டத் தகாத நிகழ்வாகவும் பார்கிறோம்.…மேலும் பார்க்கவும்
இதை மறை அல்லது புகாரளி
o
விரும்பு
o · பதிலளி
o · 5ம.
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
Comments