எனக்குப் பிடித்த சிறுகதைகள் 3

எனக்குப் பிடித்த சிறுகதைகள்:  3
(இலங்கையும், புலம்பெயர் நாடுகளும்)


மழை ஏன் வந்தது?

-நிரூபா

ஒரு சின்ன அட்டைபோலத்தான் இருந்தது. சிறிது சிறிதாய் வளர்ந்து பெரிய ஒரு உருவமாய் மாறியது. பாம்பு! பெரிய ஒரு பாம்பு. மெதுவாய் அசைந்து அவளுக்குக் கிட்ட வந்தது. தலையை உயர்த்தி விரித்து பின்னர் அங்கும் இங்குமாக ஆட்டியது தீபாவிற்கு முன்.  ஆடாமல் அசையாமல் நின்றாள். அப்படியே எல்லாம் விறைத்துவிட்டதுபோல். இரத்தமே உடலில் உறைந்ததுபோல். ஆனால் … ஆனால் அந்த நாகம் விட்டதாக இல்லையே. மேலும் தனது கரிய உடலை அசைத்து அவளையே பார்த்தபடி நெருங்கியது.

நாகம்!

‘ஐயோ அம்மா ஓடியாங்கோ.’

உரத்துக் கத்தினாள். அந்த நடுச்சாமத்தில் எல்லோரது நித்திரையையும் கலைப்பதாக. எத்தனை தடவைகள் கத்தினாளென்று அவளுக்கே தெரியாது. கண்களை இறுக்கி மூடியபடி கத்தினாள்.

‘ஏன் ஒருத்தரும் எழும்பினமில்ல? ஒருத்தருக்கும் என்னைக் காப்பாத்த வேணுமெண்டு நினைப்பில்லையோ? ஐயோ! காப்பாத்துங்கோ.’

எங்கோ தொலைவில் தூங்கிக்கொண்டிருந்த சூரியனுக்குக்கூடக் கேட்டிருக்கும். சிலவேளை அதுகூட நடையைக்கட்டத் தொடங்கியிருக்கும். ஆனால் இந்த முண்டங்கள் ஒருத்தருக்கும் கேட்கவில்லையே.
‘ஏன் ஒருத்தரும் வரீனம் இல்ல? கிட்டக்கிட்ட வருகிது. கொத்தப்போகுது. காப்பாத்துங்கோ!’

அங்கே தூங்கிக்கொண்டிருந்த அனைவருக்கும் மட்டுமல்ல, முகட்டில் மிகவும் ஆறுதலாகவும் அமைதியாகவும ஊர்ந்துகொண்டிருந்த சின்னஞ்சிறிய சிவப்பு அட்டைக்குக்கூட கேட்கவில்லை. ஏனெனில் அவள் எழுப்பிய சத்தம் வாயிலிருந்து வரவில்லை. நெஞ்சத்திலிருந்து வந்தது. அதுவும் ஆழமான இடத்திலிருந்து.

விழித்துப் பார்த்தாள். இருட்டின் இதயத் துடிப்பு படபடவென்று கேட்டது. அதற்கும் பயமாக்கும்!
‘உண்மையாவே அப்பிடியொரு பாம்பைக் கண்டிருந்தால் செத்தே இருப்பன். கனவிலகூட எவ்வளவு பயமாக் கிடந்திது? இப்ப திரும்பவும் நித்திரை வருகிது.’ 

ஆனால் கண்களை மூட அவளுக்குப் பயம். திரும்பவும் நாகம் வந்தால்? விழித்தபடி படுத்திருந்தாள். இருட்டுமட்டும் அசையாமல் நின்றது. அந்த இருட்டைப் பார்க்க, உற்று உற்றுப் பார்க்க இரண்டு கண்கள் தெரிவதுபோலும், அவை அவளை அண்மித்து வருவதாகவும் உணர்ந்தாள். சிறிதுநேரத்தில் புரிந்தது, அவை தன் கண்களிலிருந்துதான் வருகின்றதென்று. மூடியும் திறந்தும் பார்த்தாள். உறுதியானது. கண்களின் மாயக் கண்கள். கண்கள் பெருகி கண்களாகத் தெரிந்தன. கறுப்புகள் சிவப்புகளாக அங்கும் இங்குமாக சதிரா டின. 

இரவு எவ்வளவு நேரமாக விழித்து இருந்தாள்? பன்னிரண்டு மணி? அல்லது இரண்டு மணி? மழை வந்த நாளிலிருந்து அவள் நித்திரையும் போச்சு. எவ்வளவு நித்திரை தூக்கியடித்தும் விழித்தே இருந்தாளே! ஆனால் தூக்கமே வெற்றிகொண்டு இவளை மடக்கிப்போட்டது.
அந்த நேரமாப் பார்த்து சனியன்பிடித்த நாகம் வந்துவிட்டது. நாகம் வந்ததாலோ, வழமையாக வரும் அந்த உருவமும் இன்று அவளைத் தொந்தரவு செய்யவில்லை? ஒருவேளை அந்த உருவத்திட்டையும் நாகம் போயிருக்குமோ?

இவளது பிரச்னைகள் தெரிந்தே சேவல்கள் கூவத் தொடங்கின. ஒன்று.. இரண்டு… என்று தொடங்கி பின் ஊர்ச் சேவல்கள் எல்லாம் ஒன்று திரண்டு பாட்டுப்போட்டி வைப்பதுபோல் கூவிக்கொண்டன. 

தீபா எழுந்து பிளாஸ்ற்ரிக் தூரிகையை எடுத்துக்கொண்டு முன்பக்கமாக வந்தாள். அப்பாவையும் அம்மாவையும் தவிர எல்லோருமே தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. தண்ணியடிச்சு எழுப்புவமா? தட்டி எழுப்புவமா என்று நினைத்தாள். சின்னண்ணாவுக்குத் தண்ணி அடிச்சால் குட்டுத்தான் விழும்;. அது ஒரு குட்டு குட்டிச்சிது எண்டால்காணும், ஒரு கிழமை முழுக்க நோகும். பெரியண்ணாவுக்கு தண்ணியடிச்சா பள்ளிகூடத்துக்கு சயிக்கிளில ஏத்திக்கொண்டு போகாது. ஆகவே இந்த யோசனையை உடனேயே காத்தில் பறக்கவிட்டாள். அது ஓடி மறைந்தது. 

அப்பா குந்தியிருந்தபடி முற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மழை பெய்யும் சந்தோசத்தை எப்படிக் கொண்டாடுவது என்று யோசிக்கிறாராக்கும். அம்மா எழும்பியவுடன் செல்லும் முதல் இடம் சமயலறை. தீக்குள் அடக்கம் செய்யப்பட்ட விறகுச் சாம்பல்களை அள்ளி எடுத்துத் துபபரவு செய்துகொண்டிருந்தாள். 

இரவு முழுக்க மழை பெய்திருக்கவேண்டும். கோடி, கிணற்றடிப் பக்கமெல்லாம் வெள்ளம் நின்றது.
பற்பசை முடிந்துவிட்டதால் பற்பொடியை கையில் எடுத்து ஒரு சொட்டுத் தண்ணீரை விட்டு அதைக் குளிப்பாட்டிய பின் தூரிகையால் எடுக்க முயன்றபோது அது சேரப் பஞ்சிப்பட்டது.  தேய்ந்துபோன தூரிகை. பிளாஸ்ரிக் மணமும் பற்பொடிக்குப் பிடிக்கவில்லைப்போலும். புதுசு வாங்கவேண்டும் என்று ஒவ்வொருநாளும் காலையில் நினைத்து, பகல் முழுக்க மறந்து, பின் காலையில் பார்க்கிற நேரம்தான் மீண்டும் ஞாபகம் வருகிறது. பற்பொடியுடன் ஒட்ட முடியாமல் பல்லோடு தன்னை மேலும் தேய்த்துக்கொள்ள சக்தியிழந்து கிழடாகிப்போய், என்னை விடுதலைசெய் என்று சொல்வதுபோல் பரிதாபமாகக் கிடந்த தூரிகையைத் தூர இருந்த குப்பைக் கிடங்கிற்குள் எறிந்துவிட்டு விரலால் தொட்டு மினுக்கிளான்.
சேவல்கள் கூவி ஓய்ந்தபின் குருவிகளும் பறவைகளும் எழுப்பியதில் சூரியன் கால்களையும் கைகளையும் மடக்கி விரித்து காலைத் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டிருந்தது. தினம் தினம் எரிவதே வேலையாகிப்போய்விட்டது. ஒரே அலுப்புத் தட்டுகிற வேலை. நேற்று மாதிரியே இன்றும் கள்ளமடிப்பது, எங்கையாவது காத்திருப்பதென்று நினைத்துக்கொண்டதோ? 

ஆ… அந்தப் பாம்பு! அந்த நாக பாம்பு! இன்னும் அவள் மனதில்குள் அசைந்துகொண்டிருந்தது. ‘கறுப்பாய் தோலும் அரியண்டம். பிணைஞ்சிருந்த நாகங்களில ஒண்டைக் கொண்டால் மற்றது மறக்காமல் எங்க போனாலும் கண்டுபிடிச்சுக் கொத்துமெண்டு சொல்லுறவை. நான் ஒரு நாகத்தையும் கொல்லேல்லை. பாம்பெண்டாலே பயந்து ஓடிடுவன். ஏன் எனக்குக் கனவில வந்து வெருட்டிது?’

தேநீர் குடித்து, வீடும் முற்றமும் கூட்டி, குளித்து, வெள்ளைச் சட்டை போட்ட பின்னர்தான் தீபாவிற்குப் புத்துயிர் பெற்றதான உணர்வு வந்தது.

“இன்னும் நீ சாப்பிடேல்லையோ? வேளைக்கு வா பாப்பம்.” தனக்கு பின் எழுந்து முன்னரேயே வெளிக்கிட்டு நிற்கும் பெரிய அண்ணனின் அதிசயம் அறிய அவள் ஆர்வம் காட்டவில்லை. நின்ற நிலையிலேயே சாப்பிட்டு தயாரானாள். கொஞ்சம் பிந்தினால் விட்டுவிட்டுச் சென்றுவிடுவான். நடந்து போறதென்றால் நேரமெடுக்கும். அத்தோடு சேறடிச்சு வெள்ளைச் சட்iடெயல்லாம் ஊத்தையாகிவிடும்.

நடையிலும் சயிக்கிளிலும் எதிர்காலத்தின் உழைப்பாளிகளான இன்றைய மாணவர்கள் பாடசாலையை நோக்கி விரைந்துகொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த ஒரு சில பெட்டைகளின் வெள்ளைச் சட்டைகளில் சேறு பொட்டுக்கள் வைத்துக்கொண்டிருப்பதனை தீபா ரசித்தாள்.

வயல்களில் தண்ணீர் நிறைந்து இருந்தது. நெல் மணிகள் எல்லாம் தலைகளை அசைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவி த்துக்கொண்டிருந்தன.

பள்ளி வாசலை நெருங்கு முன்னரே தர்சியைக் கண்டதால், “அண்ணா, தர்சியோட கொஞ்சத்தூரம் நடந்துபோறன், இறக்கி விடு” என்று தீபா கேட்டதற்கு இணங்கி தமயனார் இறக்கிவிட்டார். கொஞ்சத் தூரம் சென்று தர்சி தீபாவிற்காகக் காத்திருந்தாள்.
“பிறகு வந்து ஏத்தமாட்டன். நடந்துதான் வரவேணும்” என்று சொன்னவர் சயிக்கிளை வெட்டித் திருப்பினார்.

“ராத்திரியெண்டாலும் நல்ல நித்திரை கொண்டனீரோ?” 

நக்கலாகக் கேட்கிறாளா அல்லது உண்மையான அக்கறையுடன் கேட்கிறாளாவென்று தீபாவுக்குச் சந்தேகமாக இருந்தாலும் நித்திரைபற்றிக் கதைக்கும் ஒரே ஆள் இவளாக இருப்பதால், “கொஞ்சம் கொண்டனான். ஆனா…” என்றாள்.

“ஏன், திரும்பவும் கனவு கண்டனீரோ?”

நேற்றிலும், இன்னும் பல இரவுகளிலும் அவள் திரும்பத்திரும்பக் கண்ட கனவுகள் வேறு. தலையில் ஒரு பெரிய பாறாங்கல். ஆனால் பாரமில்லை. விழுகிறாள்… விழுகிறாள்… விழுந்துகொண்டே இருக்கிறாள்… முடிவே இல்லையோ? விழித்த பின்னர் தடவிப் பார்த்தால் பாயில்தான் பக்குவமாகப் படுத்திருக்கிறாள். அந்தக் கனவு பறவாயில்லை. ஆனால் இன்று கண்டது வேறு. “ராத்திரி ஒரு பயங்கரக் கனவு.”

“நீர் நெடுகலும் பயங்கரக் கனவுதானே காணுறனீர்.”

“சீ, இது பேப் பயங்கரம்.”

“அப்பிடியே? சொல்லும்.” தர்சி கண்களை விரித்து ஆர்வமானாள். இரண்டுபேரும் வகுப்பில் இருந்து படக்கதைகள் கதைக்கும்போது இவள் கண்கள் இப்படித்தான் விரிவதுண்டு.

“இது பாம்புக் கனவு.”

“அரியண்டம்.”

“ஒரு நாகப் பாம்பு மெல்லம் மெல்லமா வந்து எனக்குக் கிட்ட நிண்டு படம் எடுத்திது. நான் பயந்து கத்து கத்தெண்டு கத்தினன்….”

“உண்மையாவோ?”

“இல்ல. அதுவும் கனவிலதான்.” 

சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் தீபாவிற்கு ஞாபகமொன்று வந்தது. கிட்ட பாம்பு வந்து படம் எடுக்கேக்க அதில ஒரு ஆளின்ர முகம் தெரிஞ்சிது. ஆர் ஆளெண்டு நினைச்சுப் பாத்தா ஞாபகம் வருகுதில்ல. அவளுக்கு தலை வெடிப்பதுபோல் இருந்தது. 

“என்ன யோசிக்கிறீர்? எனக்கும் சொல்லுமன்.” 

“சீ… ஒண்டுமில்ல.”

இருவரும் பள்ளிக்கூட வாசலை வந்தடைந்தனர். இன்றும் அவளது கதிரை, மேசை நனைந்தே இருந்தது. ‘எத்தின நாளா மழை பெய்யிது? ஒவ்வொரு நாளும் என்ர கதிர நனஞ்சுதான் கிடக்கு. நேற்று கொஞ்சம் தள்ளிவச்சிட்டு வந்தனான். ஆரவோ திரும்ப இழுத்து ஒழுகிற இடத்துக்குக் கிட்ட வச்சிட்டினம். எனக்குத் தெரியும் ஆர் இந்த வேலை செய்ததெண்டு.’

ரத்தினம் மாஸ்ரர் லிங்கம் மாஸ்ரரோட கதைத்துக்கொண்டிருந்தார். முறையிட்டாள். “உனக்கு நேற்று ஒரு இடம் தந்தனானெல்லோ, அதிலயே இண்டைக்கும் இரு” என்று அவளைத் திருப்பிவிட்டார்.
‘ஒழுக்கை அடைக்கத் தெரியாது, பின்னுக்கு முன்னுக்கெண்டு பிடிச்சு விடுறது. எனக்கு தர்சிக்குப் பக்கத்தில இருக்கத்தான் விருப்பம். ஆனா நாலு நாளா பள்ளிக்கூடம் முழுக்கவே ஒழுக்குத்தான்.’

தனது புத்தகங்கள் கொப்பிகளுடன் தர்சியைவிட்டு நிறையத் தூரம் தள்ளி வந்திருந்தாள். இந்த இடம் அன்பழகன் இருப்பதற்குக் கிட்ட. அவன் இன்னும் வரவில்லை. ‘இண்டைக்கு அவன் வராமல் விட்டால் நல்லது’ என்று நினைத்தாள். 

அன்பழகனுடன் ஒரு கவுஸ்ஸில் இருந்து விநோத உடைப்போட்டிக்கு ஒன்றாக நடித்தது. ஆனால் தீபா சாமத்தியப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு திரும்பவும் பள்ளிக்கு வந்தபோது, அவன் பார்வையும் கதையும் பிடிக்கவேயில்லை. ஒரு நாள் வேறு பெடியளோடு நின்று தீபா அவர்களைக் கடந்து செல்லும்போது, ‘எனக்கு ஏன்ரா நீ கொண்டாட்டத்துக்குச் சொல்லேல்ல?’ என்று நக்கல் அடித்தபோது, ஏதோ உள்நரம்புகள், உறுப்புகள் எல்லாம் கூசுவதுபோல் உணர்வு ஏற்பட தலையைக் குனிந்தபடி வந்துவிட்டாள். அன்பழகன் என்றாலே வெறுப்பாக இருந்தது. மழையென்றால் இன்னும் வெறுப்பாக இருந்தது.

முந்தியென்றால் மழை நல்ல விருப்பம் தீபாவுக்கு. கப்பல் விடுவது, சேறு தப்புவது, மழையில் குளிப்பது எல்லாம் செய்யலாம். நல்ல அடைமழையென்றால் தொடர்ந்து பல நாட்களுக்கு பள்ளிக்கூடமும் இருக்காது. எவ்வளவு சந்தோ~ம்! சாமத்தியப்பட்ட பின் எத்தனை முறை மழை வந்துவிட்டது? விளையாடுவது, குளிப்பது என எல்லா அனுமதிகளும் பறிபோய்விட்டன. வெறும் சின்னப்பிள்ளை ஞாபகங்களாகிவிட்டன.

இதுகூட பரவாயில்லை. மற்றப் பெட்டையளுக்கும் அப்படித்தானே? ஆனால் இரவில் நித்திரை கொள்ளாமல் இருந்ததை நினைத்த கணமே தீபாவிற்கு உடல் நடுங்குவதுபோல் இருந்தது. சிந்தனையைத் திருப்பி பாடத்தில் கவனம்கொள்ள முயன்றாள். எப்போது வாத்தியார் வந்தார்? எங்கு தொடங்கினார்? இப்போதாவது கவனம் செலுத்தலாம் என்று அவள் முயன்றபோதுதான் அந்த நித்திரை வந்தது. உடம்பெல்லாம் அலுப்பாக இருந்தது. தலையை சரித்து மேசையில் போட்டு தூங்கிவிட்டாள். வாத்தியார் வந்து தடியால் ஒரு தட்டு தட்டும்வரை என்ன நிகழ்ந்தது என்றே தெரியாதிருந்தது.
“நித்திரை கொள்ளவோ வந்தனிர்?” என்று உறுமிய வாத்தி, “போய் அந்த இடத்தில நில்லும் பாப்பம்” என்று தடியாலேயே வகுப்பறைக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த இடத்தைக் காட்டினார்.

தீபா மெதுவாக எழுந்து அந்த இடத்தில் சென்று நின்றாள். அவமானமாக இருந்தது. அழுகை வந்தது. அடக்கினாள். மற்றக் கிளாஸ் பிள்ளைகள் எல்லாரும் பார்க்கிறார்கள். யாராவது போய் அண்ணன்களுக்கும் சொல்லுவார்கள். பேச்சு விழும். குட்டு விழும்.
சின்னச் சின்ன கம்பிகளினூடே வெளியே பார்த்தாள். மழை மட்டும் எந்தப் பிரச்சனையும் இன்றி, தொந்தரவுமின்றி தன்னை வார்த்துக்கொண்டிருந்தது. இடைவேளைக்கு ஒருத்தரும் வெளியே செல்லவில்லை. விளையாட முடியவில்லையென்று பெடியள் கொஞ்சப் பேர் கிறவுண்டுக்குப் போகும் வாசற் பக்கமாக நின்று மழையைத் திட்டிக்கொண்டிருந்தனர். வானம் அழுகிறதே நாட்கணக்காக. அதுபற்றி யாருக்காவது கவலையுண்டா?
அங்குமிங்குமாக கூடிக் கதைத்துக்கொண்டிருந்த ஆசியர்கள் நல்ல செய்திகளை மாணவர்களுக்குக் கொண்டுவந்தனர். மழை ஓரளவு ஓய்ந்தவுடன் எல்லோரும் வீட்டுக்குப் போகலாம் என்பதுவே அந்த நல்ல செய்தியாகும். 

தீபா புத்தகங்களை அடுக்கி எடுத்துக்கொண்டு தர்சியிடம் வந்தாள். ஆனால் அவள் மேசையை நெருங்கியதும் அவளுக்கு முதலில் திக்கெண்றது. பின் கோபம்தான் வந்தது. ஏன் தெரியுமா? தர்சி ஒரு நாக பாம்பின் படத்தைக் கீறிவைத்திருந்தாள்.

“உமக்கு உதுதான் ஒண்டும் சொல்லுறேல்ல, போம்.”
இப்ப யாராவது பார்த்து என்னவென்று கேட்டால் தான் கண்ட கனவுபற்றிச் சொல்லிவிடுவாளோ என்று பயமாக இருந்தது.

ஒருத்தருக்கும் ஒன்றும் சொல்லக்கூடாது என்று இரண்டு பேரும் தலையில் அடித்துச் சத்தியம் செய்துகொண்ட பின்னர்தான் தீபா நிம்மதியடைந்தாள். ஆனாலும் அவள் எல்லா விடயங்களையும் சொல்லிக்கொள்ளவில்லை. அப்படிச் சொல்லாமல்விட்டது நல்லதே என்று இப்போது நினைத்துக்கொண்டாள். ‘அவா சொன்னாவெண்டா, அவ சொன்ன கதைய எல்லாம் நானும் சொல்லிப்;போடுவன்.’

“ஒரு படம்தான கீறினனான். ஏன் கோவிக்கிறீர்?” தர்சி படத்தை எடுத்து பத்து பதினைந்து துண்டுகளாகக் கிழித்துக் கைகளுக்குள் அடக்கினாள்.

மழை ஓய்ந்த பின்னரே மாணவரகள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்சி சின்னச் சின்னத் துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்த நாகத்தினைத் தண்ணிக்குள் எறிய அவை நனைந்தும் நனையாமலும் சில துகள் மிதந்தும் கொண்டிருந்தன. நாளை அல்லது மறுநாள் அவைகள் அடையாளமே இல்லாமற் போய்விடும். 

இருவரும் ஆறுதலாகக் கதைத்தபடி நடந்து வந்தார்கள். சயிக்கிள்ப் பாதையும் இவர்கள் நடைபாதையும் வேறுவேறு. இது குறுக்குப்பாதை. ஒரே ஒரு இடம் மட்டும்தான் பிரச்சினையானது. வயல்களைத் தாண்டிச் சென்ற பின்னர் வரும் இடம். அது கொஞ்சம் சரிவு. மழை காலத்தில் வழுக்கும். ஆனால் இந்தப் பாதையால் வந்தால், அதுவும் நடந்து வந்தால் வயற் காட்சிகள் எல்லாவற்றையும் வடிவாகப் பார்க்கலாம். 

மணிமணிகளாய்த் தலைநிமிர்த்தி நின்ற நெற்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல் மழைநீர் நின்றது. விரைவில் சாக்குகளில் அடங்கியிருக்கப் போகின்றன அல்லது அடுப்பில் வேகப்போகின்றன என்கின்ற செய்தி அறியாது இன்று தலைநிமிர்ந்து நின்றன நெல்மணிகள்.
தீபா சின்னதாக இருக்கும், அதாவது பெரியபிள்ளை ஆவதற்கு முன்னர், விதைத்த ஆரம்ப காலங்களில் கிளி கலைக்கவென்று அண்ணாக்களுடன் அனுப்பிவைக்கப்படுவாள். அண்ணாக்கள் சிலவேளைகளில் இவளுக்கு டிமிக்கிவிவிட்டுவிட்டு பந்தடிக்கப் போய்விடுவார்கள். வீட்டில் சொல்லாமல் இருக்க இவளுக்கு பரிசாக இனிப்பு கிடைக்கும். ஒருநாள் வயலுக்கு இவர்களை அனுப்பி சிறிதுநேரத்தில் அப்பா வந்துவிட்டார். எதிர்பாராமல் அண்ணாக்களின் டிமிக்கியும் பிடிபட்டது.

மழை ஓய்ந்ததென்றுதான் நினைத்தார்கள். அது திரும்பவும் சிணுங்கத் தொடங்கிவிட்டது. முகில் கூட்டங்கள் திரண்டு வந்திருப்பதனைப் பார்தால் ஏதோ திட்டத்துடன்தான் என்று புரிந்தது. மழை கத்தியழுவதற்குள் வீட்டிற்குப் போய்விடவேண்டுமென்று அவசரமாக நடந்தார்கள். வழுக்கல் இடத்தில் செருப்பைக் கழற்றிக்  கையில் பிடித்தபடி நடந்தார்கள். 

இருவரும் பிரிந்து செல்லும் சந்தி வந்ததும் தீபா கேட்டாள்: “நாளைக்கு பின்னேரம் வீட்ட வாறீரோ?” என்று.
“அப்பா விட்டாரெண்டால் சிலநேரம் வருவன்” என்றதும் அவர்கள் பிரிவும் வந்து சேர்ந்தது.

இரு அண்ணாக்களையும் தவிர ஏனையவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். அப்பாவுடன் வயலில் உதவியாக இருக்கும் மாமாகூட அங்குதான் இருக்கிறார். அம்மாவின் கடைசித் தம்பி. தீபாவின் அம்மம்மாவும் தாத்தாவும் இறப்பதற்கு முன் அவர்களுடன்தான் மாங்குளத்தில் இருந்தார். பின்னர் அவர்கள் இறந்த பின்னர் வயல்களைவிற்றுவிட்டு ஒரேயடியாக அக்கா வீட்டிற்கே வந்துவிட்டார். தனக்கென்று இங்கே ஒரு வயல் வாங்கிவிட்டிருக்கிறார்.

தங்கச்சியும் தம்பியும் கப்பல் செய்து தண்ணிக்குள் விட்டார்கள். அது அசையாமல் இருக்கவே கையால் தட்டிவிட்டார்கள். அது மாட்டனென்று அங்கேயே நின்றது. 
புத்தகம் கொப்பிகளை உள்ளே போட்டுவிட்டு அம்மாவிடம் வந்து தீபா தேத்தண்ணி கேட்டாள்.

“இப்பதான் எல்லாருக்கும் ஆத்தினனான். மிச்சம் இருக்கு. எடுத்துக் குடி.”

தீபாவிற்கு பசித்தது. கேட்டால் பேச்சுத்தான் கிடைக்கும். அதனால்தான் தேநீர்.

மழை சிணுங்கு சிணுங்கென்று சிணுங்கியது அம்மா, அப்பா அடித்துவிட்டதுபோல். அல்லது அண்ணன் குட்டிவிட்டதுபோல். அதன் வேதனை அறியாது சிறுவர்கள் ‘மழையே மழையே மெத்தப் பெய், மண்ணில் வெள்ளம் நிறையப் பெய்’ என்று பாடினார்கள்.

மழையே மழையே மெத்தப் பெய்…!

ஹோலுக்குள்ளிருந்து தேநீர் குடித்தவளுக்கு சிறிதுநேரத்தில் இந்த மழைப்பாட்டு தூரத்தில் கேட்பதுபோல் இருந்தது. பின் மிக மெல்லமாகக் கேட்டது. அம்மா தட்டி எழுப்பும்வரை நல்ல நித்திரை.
எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடுவது சனி, ஞாயிறுகளில் அல்லது மழை பெய்யும் நாட்களில்தான். மழை பெய்யும் நாட்கள் என்றால் மதியம் மட்டுமன்று, இரவிலும் ஒன்றாக இருப்பார்கள். வீட்டுப்பக்கம் அனேகமாக ஒருவரும் வரமாட்டார்கள். இவர்களும் ஒரு இடமும் போகமாட்டார்கள். எல்லோரும் கூட்டுக்குள் அடைந்த கோழிகள்போல் இருப்பார்கள்.

யன்னற் கரையோரம் நின்றபடி அல்லது முன் குந்தில் இருந்தபடி பெய்யும் மழையைப் பார்ப்பதென்றால் தீபாவுக்கு விருப்பமாக இருந்தது. சிலவேளை எவ்வளவோ வெறுக்கக்கூடிய மழையில் அவ்வளவு விருப்பமும் ஏற்படுகிறதே! நல்லமழை பெய்யும்போது யன்னற் கரையோரம் நின்றால் அல்லது விறாந்தையில் நின்றால் சின்னதாய்த் தெறித்து காலிலும் கைகள் முகங்களிலும் துமிகள் பறக்கும். ஒருவகையான கூதலாக இருக்கும். 
“ஒருநாளும் மழையைப் பாக்காதமாதரி புதினமாப் பாக்கிறாய். இருண்டுபோச்சு, உள்ள போ.” மாமா கட்டளையிட உடனே தீபா உள்ளுக்குள் போகவில்லை. கொஞ்சநேரம் இருந்து ஆறுதலாக மழையிடமிருந்து பிரியாவிடை பெற்றுத்தான் உள்ளே சென்றாள். 
இரவுச் சாப்பாட்டின் பின் தீபா மூத்த அண்ணரிடம் கணக்குப் படித்தாள். எவ்வளவு சொல்லிகொடுத்தும் அவளுக்கு மண்டைக்குள் ஏறாது என்றே அவர் கருதினார். ஆனாலும் அப்பாவின் வேண்டுகோள், தீபாவின் கெஞ்சல் சொல்லிக்கொடுக்க வைத்தது.

ஒவ்வொரு வருடமும் நல்ல புள்ளிகள்தான் எடுத்தாள். இரண்டு வருடங்களாகத்தான் இவள் இப்படி. ஏன் இவள் இப்படி வரவர மக்காக வருகிறாளென்று எல்லோரும் வியந்தனர்.

‘படிப்பில கவனமேயில்லை. பள்ளிக்குடத்தால வந்து கொப்பியள அங்க இங்க எறியிறது’ என்று அம்மா சொன்னபோது தீபாவிற்குப் பயமாக இருந்தது. ‘இண்டைக்கு வகுப்பில வாத்தியார் பிடிச்சுவிட்ட கதை கேள்விப்பட்டால் துலைஞ்சிது. எப்பிடியோ ஆராவது வந்து சொல்லுவினம். திட்டு நடக்கத்தான் போகுது.’

வளர்ந்தவர்கள் தங்கள் தங்கள் படுக்கைகளைத் தயார்ப்படுத்தினார்கள். ஏற்கனவே தூங்கிவிட்ட தம்பியையும் தங்கையையும் அப்பா தூக்கிக் கட்டிலில் கிடத்தினார். தீபா அறைக்குள் இருக்கும் தனது கட்டிலுக்கு வந்தாள். அம்மா அப்பா எல்லோரும் ஹோலுக்குள். அண்ணாக்களில் ஒருஆள் படவறைக்குள். மற்றவரும் மாமாவும் மற்றக் ஹோலுக்குள்.

நல்ல வெய்யில் காலத்தில் வீடு வெறிச்சோடிக்  கிடக்கும். உள்ளுக்குள் படுப்பவர் அரிது. சில காலங்களில் நெல் மூட்டைகளும் உள்ளே தூங்கும். சாமத்தியப்பட முன்னர் தீபாகூட வெளியில் படுப்பாள். விறாந்தையில். ஆனால் இப்போது அப்படி முடியாதே.

இவ்வளவு பெரியவீடு என்னத்துக்கு என்று சிலநேரம் தீபா நினைத்திருக்;கிறாள். ஆனால் மழை காலங்களில்தான் அதற்கான அர்த்தம் வெளித்தது. மழை காலமென்றால் எல்லோரும் உள்ளேதான் படுப்பார்கள். எல்லோருடைய மூச்சும், குறட்டையும், இருமலும் இவளுக்குக் கேட்கும். சிலவேளை எது யாருடையது, எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும். இதுபற்றி ஆழமாக அவள் தேடியதேயில்லை. அவளுடைய பிரச்சனைகளே வேறு.

இந்த இதமான மழைகாலத்தில்தான் தீபாவின் நித்திரையும் பறிபோனது, ஆசையாக எடுத்துவைத்த இனிப்பில் அழுக்கெறும்பு  மொய்த்து உண்ணமுடியாமற் செய்ததுபோல். இன்றைக்கு எப்படியாவது நித்திரை கொள்ளாமல் இருப்பது, அந்த உருவம் வந்தால் ஏதாவது சத்தம் செய்து கலைத்துவிடுவதென்ற திட்டத்துடன் படுத்திருந்தாள். போர்வையை இழுத்து எல்லாப் பக்கங்களையும் சுற்றிப் பாதுகாப்புக் கொடுத்தாள். கொறகொறவெண்டு குறட்டைகள் கேட்டன. வெளியில் மழை பெய்தது. ஓய்ந்து பின் சொhட்டுச் சொட்டாய்;;…! துளிகளை எண்ணுமளவிற்கு ஆறுதலாக. நல்ல களைப்பு மழைக்கு. தீபாவிற்கும்தான். மெல்லம் மெல்லமாக இவளும் தனது சவாலிலிருந்து தோற்றுக்கொண்டிருந்தாள்.

மிகவும் மெதுவாகத்தான் வந்திருக்கவேண்டும் அந்த உருவம். நீண்ட நேரத்தின் பின்தான் தீபா விழித்தாள். அன்னிய உருவம் ஒன்று அவளை.. போர்வை விலக்கப்பட்டதுகூட உணரவில்லையே! 
‘ஐயோ ஆரிது? விடுங்கோ… என்னை விடுங்கோ’ என்று கத்தவேண்டும்போல் இருந்தது. கண்ணீர் வந்தது. நெஞ்சு அடைத்தது.

‘இப்ப கத்தினால் எல்லாரும் முழிச்சிடுவினம். ஆரெண்டு தெரிஞ்சா என்னைப்பற்றி என்ன நினைப்பினம்? வீட்டில எவ்வளவு பிரச்சனை வரும்? என்னைத்தான் பேசுவினம்’ என்று நினைத்தாலும் இந்த உருவத்தை எப்படிக் கலைப்பது என்றும் யோசித்து உடலை அங்கும் இங்கும் அசைத்தாள். சத்தமாக இருமினாள். அந்த உருவம் இவள் உடலிலிருந்து விலகியது. நெஞ்சுக்குள் திரும்பவும் தண்ணீர் வந்தது.

‘ஆர் இது? மா…மா? அண்ணாக்களில ஒருஆள்? அ…ப்…பா…? வேற ஆர்?’ நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. நெஞ்சு வெடித்துக் கண்ணீராய்ப் பாய்ந்தது. உள்ளுக்குள் இழுத்து சத்தமில்லாமல் அழுதாள். அரியண்டாமாக இருந்தது. இந்த இரவு விடியக்கூடாது. யாருமே எழுந்திருக்கக் கூடாதென்று தோன்றிற்று. இன்று சேவல்கள் கூவும்வரையில் தீபா நித்திரையே கொள்ளவில்லை. வெளியே இடியும் மின்னலும் போட்டிபோட்டன. ‘இந்த வீட்டுக்குள்ளயும் இடி விழாதோ?’ என்று ஏங்கினாள்.

“இவ்வளவு நேரமாச்சு, பொம்பிளைப் பிள்ளைக்கு இவ்வளவு நேரம் என்ன நித்திரை? எழும்பு.” அம்மா தட்டிவிட்டு, “நான் கோயிலுக்குப் ஓடிப்போட்டு வாறன். தேங்காயெல்லாம் திருவி மிளகாய் பொhரிச்சு வைச்சிருக்கு. சம்பல இடிச்சு வை” என்றபடி வெளியே போய்விட்டாள்.

தீபா கிணற்றடிக்கு வந்தாள். இண்டைக்கும் கையாலதான் பல்லுத் தீட்டவேணும். தம்பியவிட்டு ஒரு பிற~; வாங்கலாம். ஆனால் அதெல்லாம் அவசியமில்லை என்று நினைத்தாள். ‘இந்தப் பல்லை தீட்டினாலென்ன தீட்டாட்டி என்ன?’ தன்னுடம்பே தன்னிடம் இல்லாததுபோல் இருந்தது. வெறுப்பாக இருந்தது. அழுக்குப் படிந்த உருவமாகி மணத்தது. குளிச்சுப்போட்டுத்தான் மற்ற அலுவல்களைச் செய்யவேணும் என்று முடிவெடுத்தாள். அறைக்குள் சென்று தோய்த்து மடித்து வைத்த துவாயை எடுத்துக்கொண்டு வரும் வழியில் மாமா வழிமறித்து, “தீபா ஒரு தேத்தண்ணி போடெண” என்றார்.

“குளிக்கக்போறன். குளிச்சிட்டு வைக்கிறன்.”

“வைச்சுத் தந்திட்டு குளிக்கலாம்தான?”

துவாயைக் கம்பியில் எறிந்துவிட்டு கிடுகிடு என்று குசினிக்குச் சென்று தேத்தண்ணீர் போட்டு வைத்துவிட்டு தூரவே நின்று, “குசினிக்குள்ள ரீ இருக்கிது” என்று கத்திச் சொல்லிவிட்டு குளிக்கப்போனாள்.

இன்றைக்கு ஒரு வாளி தண்ணீர் அரைவாசிக்குக் கிட்ட முட்டிக் கிடந்த கிணற்றிலிருந்து இழுப்பதுகூட கஸ்ரமாக இருந்தது. மழைத் தண்ணீர் என்று வித்தியாசமாகத் தெரிந்தது. மணம்! அழுக்nறும்பு மணம்!

யார் அது? அப்பா…? மாமா…? அண்ணா…? சீ அப்பிடி ஒருத்தரும் இருக்காது. கடைசிவரையும் இருக்காது. ஆரோ மாயமனிதனாய் இருக்கும். அவையில வீணாய்ச் சந்தேகப்பட்டிட்டனே!’ அவளுக்கு வெட்கமாக இருந்தது. மாயமனிதனாய்த்தான் இருக்கும். யாராய் இருந்தால்தான் என்ன? நடக்கக்கூடாத ஒன்று தனக்கு நடக்கிறது என்பதுதான் அவள் நினைப்பு. யாரிடமும் சொல்லமுடியாத ஒன்று. இந்த விடயத்துக்கும் கற்பிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாகவும், தான் இப்போது அதை இழந்துகொண்டு இருப்பதாகவும் நினைத்தாள். 

‘சாமத்தியப்படாட்டியும் பறவாயில்லை. சாமத்தியப்பட்டதால கற்புக் கட்டாயம் போயிருக்கும், என்ன?’

யாரையும் நேருக்குநேர் பார்க்கவேண்டும்போல் இல்லை. பகலே ஏன் வந்தது என்றிருந்தது. ஒருவேளை அது பேயாய் இருக்குமோ? தீபாவிற்கு கால் கையெல்லாம் நடுங்கியது.

‘அம்மாட்டச் சொல்லுவமோ? சீ வேண்டாம். சொல்லுறதெண்டாலும் எப்பிடிச் சொல்லுறது? சிரிப்பினம் அல்லது ஏசுவினம் அல்லது அடிப்பினம். வேண்டாம்… வேண்டாம்.’

‘தர்சி இண்டைக்கு வந்தால் எவ்வளவு நல்லது!’
தீபா குளித்து உள்ளுக்குள் வர அம்மாவும் கோயிலிலிருந்து வந்துவிட்டாள். மழை ஓய்ந்திருந்ததால் எல்லோரும் இத் தருணத்தை தமது காரியங்கள் முடிக்க பிரயோசனப் படுத்தினர்.

இங்கும் பல உருவங்கள் காணாமல் போயிருந்தன. 

“ஒரு வேலை சொன்னா ஒழுங்காச் செய்யிறேல்ல. இன்னும் சம்பல் இடிக்கேல்லையே?” 

“சரியான வயித்துக் குத்து, அம்மா” என்று சொன்னபடியால் (திடீரென்று பொய்சொல்லும் பழக்கம் தனக்கு எங்கிருந்து வந்ததென்று அதிசயித்தாலும்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சம்பலும் இடிக்கத் தேவையில்லை. இன்று ரியூசனுக்கும் போகத் தேவையில்லை.

எவ்வளவு பேசினாலும் வயித்துக் குத்து வரும் நேரங்களில் தீபாவில் மிகுந்த அக்கறை அம்மாவிற்கு. 
பின்னேரம் தர்சி வந்தாள். “வீட்டில எல்லாரும் சுகமாய் இருக்கினமோ?” என்று சம்பிரதாயத்திற்கு கேட்டுவிட்டு அம்மா தேத்தண்ணி கொடுத்தாள்.

தர்சி வந்தது தீபாவிற்கு எவ்வளவு சந்தோ~ம்! ஆனாலும் சந்தோ~த்தைக் கொண்டாட முடியமல் இருந்தாள். அந்தக் கேள்விமட்டும் ஈ ஒன்று முகத்தையே சுற்றுவதுபோல் சுற்றிக்கொண்டிருந்தது. தவிரவும் இன்று இரவு எப்படியோ என்று நினைத்ததில் நடுக்கமாக இருந்தது.

இருவரும் பின்கோடிப் பக்கமாக வந்தனர்.

“ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்?”என்று தர்சி கேட்டதுமே தீபாவிற்கு அழுகையாக வந்தது. என்ன சொல்வது? சொல்லக்கூடாதென்று பினனர் நினைத்தாள். யோசிக்கவும் நேரமில்லை. “நேற்று பேய்… பேய் வந்தது” என்றாள்.

“திரும்பவும் கனவு கண்டனிரோ?”

“இல்லை, உண்மையாய்த்தான்.”

“எப்பிடி இருந்துது சொல்லும் பாப்பம்.”

“இருட்டுக்கை தெரியேல்லை. ஆனா எனக்குக் கிட்டவந்து வெருட்டிச்சிது.”

தர்சிக்கு ஒரே சிரிப்பு. “பே இருட்டிலதான் தெரியும். நீர் கனவுதான் கண்டனீர்.”

“ஓம்… நீர் சொல்லுறதும் சரிதான்.”

தர்சி விடைபெற்று நிறைய நேரம் ஆகிவிட்டது. வீட்டில் விளக்கேற்றும் நேரம். அம்மா படவறைக்குள் இப்போது விளக்கு ஏற்றியிருப்பாள்.

முகம் கழுவ கிணற்றடிக்கு வந்தாள் தீபா.

பேயெண்டால் இருட்டிலதான் தெரியும். தர்சி சொன்னது சரிதான். இருட்டிலதானே பேய் வாறது. அப்பிடியெண்டா இரவில வந்தது பேயில்லை. கனவுமில்லை. அப்ப …. ஆரது? மாமா…? அண்ணாக்களில ஒரு ஆள்…? அப்பா…?’

தீபாவிற்கு தலை சுற்றியது. நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தாள். அப்படியே விழுந்துவிடவேண்டும் போலிருந்தது. விழுந்தால் எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடுமென்றில்லை. சாகிற மாதிரி விழவேண்டும்.
‘ஆனால் கிணத்துக்குள்ள விழுந்தவடன செத்துப்போவினம் எண்டில்லைத்தானே? ஆராவது காப்பாற்றி ட்டா, கோதையக்காவ காப்பாத்தினமாதிரி?’

பழுத்து விழுந்த இலைகள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. எத்தனை நாட்களாய் மிதக்கின்றனவோ தெரியாது. பார்க்கப் பரிதாபமாகவே இருந்தன.

அவைகளைப் பார்க்கும்போது தானே மிதப்பதாக உணர்ந்தாள். இன்று வரப்போகும் இரவுபற்றியே சிந்தித்தாள். நாகம் இப்போது தலைக்குள் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது.

வழமைபோல் எல்லாக் காரியங்களும் கடமைகளும் முடிந்து எல்லோரும் தத்தமது இடங்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். தீபா விழித்திருந்தாள்.
மழைக்குப் பஞ்சியே இல்லைப்போலும். தனது கடமை தவறாமல் காரியம் நடத்துவதுபோல் ‘சோ’வென்று பெய்தது. கிணற்றிற்குள் வெடிவைப்பதுபோல் தூரத்தில் இடியும் இடித்துக் கேட்டது. ஒரு மணி அல்லது இரண்டு மணி இருக்குமா? அவள் எதிர்பார்த்ததுபோலவே அந்த உருவம் அவளை நெருங்கி வந்து அவள் போர்வையை விலக்க முயன்றது. அவள் தனது போர்வையை இறுக்கிப் பிடித்திருந்தாள். அது பக்கமாக முயற்சித்தது. 

“ஐயோ, பாம்பு! ஐயோ, பாம்பு!”

உரத்துக் கத்தினாள். மனதால் அல்ல, வாயால். யாரோ எழும்பி உடனே லயிற்றைப் போட்டார்கள். “எங்க? எங்க” என்று எல்லோரும் ஓடிவந்தார்கள்.

“இதாலதான் இப்பிடி ஏறி இப்பிடி என்ர கால்மாட்டால ஊர்ந்துபோச்சிது.”

“நீ கண்டனியோ?” பெரிய அண்ணர் கேட்டபடி கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தார். அவர் ஒரு தடவை பாம்பைக் கையால் பிடித்து அடித்துக் கொன்றவர்.

“நீ கனவுதான் கண்டிருக்கிறாய்.”

“இல்லை, பாம்புதான் வந்தது.”

“அதுக்குள்ள ஓடியிருக்காது. வடிவாத் தேடுங்கோ.” அப்பா சொல்ல ஆமாப் போட்ட மாமா பொல்லுடன் தேடிப் பார்த்தார். “நான் நினைக்கேல்ல பாம்பெண்டு. தம்பி சொன்னமாதிரி கனவாத்தான் இருக்கும்” என்றார். சின்ன அண்ணன்கூட பொல்லு வைத்திருந்தான்.

“கொஞ்ச மண்ணெண்ணை ஊத்தினா வெளிய வருவர்தானே?” என்றபடி அம்மா குசினிப் பக்கமாகப் போகவே, “வேண்டாம், வேண்டாம். பிறகு இரவு முழுக்க மணக்கும்” என்று தீபா சொல்ல, “உனக்குக் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்றவாறு திரும்பி வந்தா.
“அதுக்குள்ள பாம்பு ஓடியிருக்காது. உம்மையா வந்திருந்தா உதுக்குள்ளதான் கிடக்கும்.” அப்பா மெத்தையை தடி ஒன்றால் தட்டினார். “பாம்புமில்ல, ஒரு பூச்சியுமில்ல” என்றார்.

தீபாமட்டும் திடமாகச் சொன்னாள்: “பாம்புதான் வந்தது. பாம்புதான் வந்தது.”

“இவள் விசரியின்ர கதையைக் கேட்டிட்டு எல்லாரும் சாமத்தில எழும்பி நிண்டு டான்ஸ் ஆடுறியள்” என்று சின்ன அண்ணன் சொன்னாலும் உள்ளுக்குள் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. ஏனெனில் வீட்டுக்குள் பாம்பு வந்தது இது முதலாவது தடவையில்லை.

“எனக்கப் பயமாக்கிடக்கு. அம்மா இங்க வந்து எனக்குப் பக்கத்தில படுங்கோ. எனக்குப் பயமாக் கிடக்கு” என்று தீபா ஒற்றைக் காலில் நின்று அம்மாவைத் தனக்குப் பக்கத்தில் படுக்கவைத்தாள். கோயிலில் ஒரு நேர்த்திவைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டார் அப்பா. எல்லோரும் தத்தமது படுக்கைகளுக்குச் சென்றுவிட்டனர்.

அந்த உருவம் இவ்வளவு விரைவாக ஓடி அப்பாவாகவோ, மாமாவாகவோ மாறிவிட்டதே. அதுதான் எப்படியென்று அதிசயமாக இருந்தது தீபாவிற்கு. நீண்டநேரம் யோசிக்க நித்திரை விடவில்லை. அம்மாவின் அருகினில் இன்று நிம்மதியாகத் தூங்கினாள்.

மழைமட்டும் களைப்பில்லாமல் சலிப்பில்லாமல் ‘ஓ..’ என்று அழுதவண்ணமிருந்தது, ஏதோ ஊர்மக்களெல்லாம் ஒன்றாக மரணித்துவிட்டதுபோல்.

000

‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு

Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி