எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 6

ந.மயூரரூபனின் எழுத்துக்கள் சிக்கலும் தெளிவும் உடைய இரண்டு வகையினத்துள் அடைபடக் கூடியவை. அவரது பிற்கால புனைவுகளில் எழுத்தை அதன் ஆகக்கூடிய அர்த்தம் கொள்ளுமளவு இறுக்கிச்செல்லும் ஒரு முறைமையினை நான் அவதானித்தேன். இதுபோன்ற எழுத்துக்கள் நம்மிடையே எழுத பலரில்லை இன்று. இதனாலேயே இவரது வேறு நல்ல கதைகள் இத்தொகுப்பிலுள்ளபோதும், இதை இத்தொகுப்பின் சிறந்த கதையாகப் பதிவிடுகிறேன்.


என்னைப்பற்றிய பிற்குறிப்பு
ந.மயூரரூபன்


இதமான எண்ணங்களின் அரவணைப்பில் சுருண்டிருந்தது மனது. உடலது உணர்வுத் துளிகளில் ஒருவிதமான இன்பத் தேறல் துளிகளாய்ச் சொட்டிக்கொண்டிருந்தது. எனது ஒவ்வொரு அசைவும் மோகத்தின் மயக்கந்தரும் மகரந்தத்தின் வாசனையின் ஆக்கிரமிப்பினை ஆவலுடன்  எதிர்பார்த்து துடித்துக்கொண்டிருந்தது. அவளின் அன்பு பொலியும் அழகுமுகம் என்னருகே என்னையே பார்த்தபடி…
      நான் உணர்வுகளில் சரணடைந்து என்னிலை மறந்து அவள் முகத்தினை நெருங்கினேன்.
      ஒளிச் சிதறலுடன் வெடித்துச் சிதறியது காற்று.
      என் கண்கள் இருளையே கண்டன. ஒளியைப் பார்க்க முனையும்போது சிதறிய உயிரின் துகள்களில் என் முகங்களே பலவாய்த் தெரிந்தன.
      நினைவுகளின் அடுக்குகளில் வெடிக்கும் உண்மையின் கனவாயே இது எனக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கின்றது. மெதுவாக கால இழை படிகிற வாழ்க்கையின் அடுக்குகள் எனக்குள் வாழ்வின் இன்பத்தின் வரிகளை ஒளித்துவைத்தன. என்னால் அவற்றினைத் தேடிக்காண முடியவேயில்லை. இப்போது வாழ்க்கையின் அடுக்குகள் அடிக்கடி இழை பிரிந்து என் மூச்சுக் காற்றினை கதறவே செய்விக்கின்றன.
0
எனது காற்று வெடித்துச் சிதறிய பொழுதினைக் கடந்தபோது நான் உயிரினைப் பொத்திவைத்து ஓடத் தொடங்கியிருந்தேன். மணல்களில் கால்கள் புதைந்தெழும் ஓட்டத்திலும், காற்றின் வாதையிலும் உயிர் தளம்பிக்கொண்டேயிருந்தது.
      இப்போதும் தளம்பிக்கொண்டிருக்கின்றது.
      எனது உயிரருகே சாம்பர் மேடுகளின் சூடு மெதுமெதுவாய்த் தணிந்துகொண்டேயிருக்க, அந்த சாம்பர் பூத்த வெளிகளைக் கிளறிக் கிளறி மனது கீழிறங்குகின்றது. கீழிறங்கும் மனத்தின் மூலைகள் ஒவ்வொன்றிலும் என்னசைவின் படங்கள் அனைத்தும் கறுப்புவெள்ளையாய்த் தூசுபடிந்து போகின்றன.
      கீழிறங்கும் மனது பல்லாயிரம் சிலுவைகளில் அறையப்பட்ட வலியையே தேடுகின்றது.
      உயிர் பொத்தி ஓடுகின்ற பொழுதுகள் உன்னையும் அவனையும் பின்தொடர்ந்துகொண்டு இருந்தன. அந்தப் பொழுதுகளின் இடுக்குகளில் நானும் தொங்கிக்கொண்டிருந்தேன். காற்றின் கதறலில் பயந்த பொழுதுகளில்  அள்ளுண்ட என் நண்பன் தனது கைகளால் மணல்பறித்து என்னையும் தன்னுடன் அதற்குள் நுழைத்துக்கொண்டான். காற்று அவனின் கதறலை மட்டும் தன்னுடன் இழுத்தோடியது. அக்குழியின் வாசல் திறக்கும் நினைவுகளில் அவனது முகம் மிக நெருக்கமாக தன் கனவுகள் தூர்ந்துபோன கண்களால் என்னை அழைத்துச் செல்லும்.
      வாழ்க்கையின் வேர்கள் மறைந்திருந்து வேடிக்கை பார்க்க, மனதில் ஆணியடிக்கப்பட்ட வலி  தரும் கண்ணீரில் நனைந்துகொள்கிறது என் கீழிறங்கும் மனது.
0
இயல்புலகம் இதுவெனச் சொன்ன  இடம். நான் வெளிவருகின்றபோது பலவீனப்பட்டிருந்த மனதினையும் உடலினையும் உறவுகளின் இயல்பிலும் மாசற்ற அன்பிலும் போக்குவதற்கு முனைந்தேன். எனினும் வீட்டில் முடங்கியிருக்கும்போது முகட்டில் தொங்கும் அந்தரத்தின் அரவணைப்பே என்னைத் தன்னுடன் உச்சி முகர்ந்து அணைத்துக்கொள்கிறது.
      அப்பா நெல் விதைத்த வயல் என்னை அடிக்கடி அழைத்துக்கொள்ளும். அதன் மாறா இயல்பின் மடிகள் நீள நடக்கின்றபோதும், வயலின் நுனியிலுள்ள பனங்கூடலில் அமர்ந்து என்னைக் கரைத்தபோதும் நெருங்கிநின்று என் வலிநீவித் தழுவ, காற்றும் தயங்கி ஒதுங்கியது. அந்த சுடலைக்கருகே இருக்கும் தாமரைக்குளமும் அதனருகே ஒற்றையாய் நிற்கும் சிறுபற்றையும் நான் ஒதுங்கிப் படுக்க சலனமற்றிருந்தன.
      உடலின் வலி வடுவாக உறைந்தபோதும் மனதின் வலி இன்னமும் இரத்தத்தினை கசியவே வைக்கின்றது.
      என்னுயிரின் வெறுமையினை நான் என்னிலிருந்து தூக்கிவைக்கப் பிரயத்தனப்படவேயில்லை.
      ஒளிச்சிதறலுடன் காற்று இப்போதும் எனக்குள் வெடித்துச் சிதறுகின்றது. என்னைக் கடந்துபோகும் காலத்துடன் சேர்ந்து நகரவே முடியவில்லை. காலம் என்னை மட்டும் தனியே விட்டுப்போவதை வேடிக்கை பார்ப்பதற்கே முயற்சிக்கின்றேன்.
      அப்பாவும் அம்மாவும் என்னைச் சிறுபிள்ளைபோல அவதானத்துடனேயே கவனிக்கின்றார்கள். முதிரும் பருவத்திலும் அவர்கள் முன் குழந்தையாய்த் தளர்நடையிடுகின்றது என் மனது. வெறும் சேதியாய் அவர்கள் என்னைக் கேள்விப்படுவதற்குப் பதில் நானாக அவர்களிடம். நான் இருப்பதில் கண்ணீர் வழியும் திருப்தி அவர்களுக்கு.
      உலகம் தன்னியல்பில் அசைகின்றது.
      நான் அதனைப் புரிந்துகொள்ள முனையவில்லை. நான் என்னைப் பிரித்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். என்னிலிருந்து நான் வேறுபட்டுக் கொள்வதற்கும் காலத்தின் வரிகளையும் அது தந்த வலிகளையும் அழித்துவிட முடியுமா?
      பொழுதுகள் தம்மியல்பை மறந்துவிடுகின்றன.
      அது வெறுமனே அனைத்தையும் காவிச்செல்லும் வண்டியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
      எழுதிவிடும் வரிகளை அழித்துவிடும் வெறுங்கதையாய் ஒருவரின் வாழ்வும் இங்கு இருந்துவிடவில்லை.
      ஒளித்துவைக்கவே முடியும்.
      ஒளித்துவைப்பதற்கான இடத்தினை எங்குபோய் நான் தேடுவது?
      ஒரு விடயம் எனக்குப் புரிவதேயில்லை.
      இரவிலா பகலிலா ஒளிப்பது சிறந்தது?
      எந்தக் காலக் கண்களில் மயக்கம் அதிகம்?
      இருளைப்பற்றி நான் பேசுகின்ற பொழுதுகளில் இவனைப் பயம் முற்றாகத் தின்றுவிட்டது என்கிறார்கள். எனது வலிகளைச் சொல்லி அழுகின்றபோது விளங்காத தத்துவத்துள் சரிந்துவிட்டான் என்கிறார்கள்.
      இரவிலும் பகலிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
      என்னை ஒரு அடையாளத்துடன் காணவே எல்லோரும் ஆசைப்படுகின்றார்கள். உண்மையில் அடையாளங்களைத் துறக்கும் ஒருநிலையே எனக்குத் தேவையானது.
      என்னிலிருந்து நான் விலகிக்கொள்வதன் தேவை வலுப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. என்னுடன் நான் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் நான் ஆயுள் பலத்தினை இழந்துவிடுவேன் என சாத்திரிகள் கண்களை மூடியபடியே கூறினார்கள். அதற்கான குணங்குறிகள் பலதினையும் ஊரில்லுள்ள குறிசொல்லிகள் அம்மாவிடம் சொல்லி சேர்ந்தழுதனர்.
      சாத்திரக் குறிப்புகளும் குறிசொல்லிகளின் அருட்டல்களும் அம்மாவின் கண்ணீருடன் சேர்ந்து என்னை விரட்டி வந்துகொண்டே இருக்கின்றது. இங்கு கால இழை படிகின்ற வாழ்க்கையின் அடுக்குகள் அடிக்கடி இழை பிரிந்து என் மூச்சுக் காற்றினை கதறவே செய்விக்கின்றன.
      விழிகள் மயங்குகின்ற பொழுதொன்றில் வெறித்திருந்த வெளியொன்றில் நான் நடந்துகொண்டேயிருந்தேன் என்னுடன். எங்கும் வெம்மை ஏறிக்கொண்டிருப்பதை ஒதுங்கியிருந்த ஓரிரண்டு மரங்களும் அசைவற்றுப் பார்த்திருந்தன.
      நான் நீள நடந்துகொண்டேயிருந்தேன்.
      இருள் கனத்துப் படுத்திருந்த அந்தச் சரிவில் இறங்கி சிறுபற்றைக்கருகில் அமர்ந்துகொண்டேன். வியர்வை ஓடிக்கொண்டேயிருந்தது. நனைந்த சேட்டின் தெறிகளை கழற்றி விட்டுக்கொண்டேன்.
      மூச்சு இரைத்தது.
      மல்லாக்காய்ப் படுத்துக்கொண்டேன். வானில் நட்சத்திரங்களும் ஒளித்துவிட்டிருந்தன. நேரம் நீண்டுகொண்டேயிருந்தது. சடாரென எழுந்தமர்ந்தேன். வண்டுகள் கதறிக்கொண்டிருந்தன.
      சுற்றும்முற்றும் பார்த்தேன். கதறலை நிறுத்திக்கொண்டன. தவளைகள்மட்டும் விட்டுவிட்டுக் குரல் கொடுத்தன. அருகிலுள்ள தாமரைக்குளத்தின் நெடியினை இப்போது உணரமுடிந்தது.
      சிந்தனைகளை ஒதுக்கி பற்றையின் அடியில் மணலைக் கைகளால் வாரத் தொடங்கினேன். சாம்பர் பூத்த மணலைக் கிளறிக் கிளறி கைகள் கீழிறங்க மனதுமட்டும் பல்லாயிரம் சிலுவைகளில் அறையப்பட்ட வலியைத் தேடுகின்றது. கண்ணீரில் மனது தோய்ந்துகொள்கிறது.
      களைத்துப்போய் சற்றே அமர்ந்திருந்தேன். உடல் முழுவதும் வியர்வையீல் தோய்ந்திருந்தது. சாரத்தின் ஓரத்தினைத் தூக்கி முகத்தினை அழுத்தமாய்த் துடைத்துக்கொண்டேன்.
      பின் எழுந்து குளத்தினைநோக்கிச் சென்றேன். நீர் குளிர்மையற்று சூடாயிருந்தது. கைகளால் நீரை அள்ளியள்ளி வாய்க்குள் விட்டேன். சூடு உடலுக்குள் நேர்கோடாய் இறங்குவதை உணரமுடிந்தது. வயிறு நிறையும்வரையா மனது நிறையும்வரையா குடித்தேன்?
      மீண்டும் பற்றையடியில் தோண்டத் தொடங்கினேன். தோண்டி முடித்ததும் சேட்டினைக் கழற்றி வைத்துவிட்டு ஆசுவாசமாய் அமர்ந்துகொண்டேன். இருட்டில் சுற்றிவர இருப்பவை அனைத்தும் என்னையே பார்ப்பதான பிரமையில் திடுக்கிட்டேன். காற்றின் அருகாமை எனக்குத் தேவையாயிருந்தது. ஆழ மூச்சினை உள்ளிழுத்தேன். காற்றினை யாரோ கட்டிவைத்துவிட்டனர். தவளைகளும் காணாமலே போயிருந்தன.
      நான் என்னை மெதுவாக அந்தக் கிடங்கினுள் வைத்து அழுத்தினேன். சாதாரணமான ஒரு பொருளை வைத்து மூடுவதுபோன்று மிக இலகுவாக இருக்குமென்று நான் நினன்கவேயில்லை. மண்ணில் மறைந்திருந்து வேடிக்கை பார்த்த வேர் முனைகள் என்னை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன. என் மூச்சுக்காற்று ஒரு கணம் பதறித்துடித்தது.
      நான் கிடங்கினை மூடிவிட்டு எழுந்துகொண்டேன்.
      நினைவின் அடுக்குகளில் வெடிக்குமந்த உண்மையின் கனவாயே இதுவும் எனக்குள் சேகரமாகிக்கொண்டிருந்தது. இப்பொழுது காற்றுவெடித்துச் சிதறுகின்ற பொழுதுகளை நான் கலக்கமற்றுக் கடந்துகொண்டிருக்கிறேன். காற்றின் குளிர்மையையும் உணரமுடிகின்றது.

-தவிர, காலநதி தொகுப்பு, 2014

(நன்றி: மரத்தில் தொங்கும் பாம்பு-சிறுகதைத் தொகுப்பு, ந.மயூரரூபன், எழுகலை இலக்கியப் பேரவை, 2016)


Comments

Popular posts from this blog

'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்

மறுமலர்ச்சிக் காலத் தமிழின் வெட்டுமுகம்:

தேடலைத் தூண்டும் ஒரு விமர்சன நூல் - ஈழக்கவி